ஜியோ சிம் விற்க தடை.. நெட்வொர்க் பிரச்சனையால் அபராதமும் விதிப்பு.. தமிழகத்தில் மிக முக்கிய உத்தரவு
சென்னை: இணையச் சேவை முறையாகக் கிடைக்கவில்லை நெட்வோர்க் கவரேஜ் ஒழுங்காக இல்லை என்று ஜியோ நிறுவனம் மீது திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் புகாரளித்த நிலையில், இந்த விவகாரத்தில் ஜியோவுக்கு அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டது. மேலும், வலங்கைமான் பகுதியில் ஜியோ சிம் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் அது ஜியோ நிறுவனம் தான்.. அதற்கு முன்பு வரை மாதாமாதம் நாம் அதிக தொகையைக் கட்ட வேண்டிய சூழல் இருந்தது.

ஆனால், ஜியோ வருகைக்கு பிறகே இந்த நிலை மாறியது. ஜியோ குறைந்த செலவில் சேவையை வழங்கினாலும் கூட ஓரிரு இடங்களில் நெட்வோர்க் கவரேஜ் முறையாகக் கிடைப்பதில்லை என்ற புகார்கள் உள்ளன.
ஜியோ: அதன்படியே திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஜியோ சிம் வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இருப்பினும், அங்குள்ள குளவேலி உள்ளிட்ட கிராமங்களில் சிக்னல் சரிவரக் கிடைக்கவில்லையாம். அதிலும் குறிப்பாக வீட்டுக்குள் இருக்கும்போது குறைந்த அளவே சிக்னல் கிடைப்பதாகவும் பல நேரங்களில் சுத்தமாக சிக்னல் கிடைப்பதே இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இணையச் சேவை மட்டுமன்றி செல்போன் அழைப்புகளைக் கூட சரிவரப் பேச முடிவதில்லையாம்.
இணையச் சேவை பாதிப்பதால் தங்களால் தொழில் செய்ய முடியவில்லை என்றும் இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் ஜியோ நிறுவனத்தில் புகாரளித்துள்ளனர். இ மெயில் மூலமாகவும் கஸ்டமர் கேருக்கு போன் செய்தும் தொடர்ந்து புகார்கள் அனுப்பி வந்துள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் நெட்வொர்க் கவரேஜ் குறிப்பிட்ட இடத்தில் குறைவாக இருப்பதை ஒப்புக் கொண்ட அந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் சேவை மேம்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தனர்.
வழக்கு: நெட் வேகம் குறித்து புகார் அளித்த போதும் இதே பதில் தான் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை மேம்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். இருப்பினும், மோசமான சேவையே தொடர்ந்துள்ளது. நிறுவனம் சார்பில் சேவையை மேம்படுத்தியதாகத் தெரியவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் சிலர் இணைந்து திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீது வழக்குப் போட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் இணைய வேகம் மற்றும் நெட்வோர்க் கவரேஜ் குறைவாக உள்ள வலங்கைமான் வட்டத்தில் ஜியோ நிறுவனம் சிம் கார்ட்டுகளை விற்கத் தடை விதித்தனர். அப்பகுதியில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் வரை ஜியோ நிறுவனம் தங்களின் சிம் கார்டுகளை விற்பனை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
உத்தரவு: மேலும், புகார்தாரர்கள் இணைப்பைப் பெற்ற தேதியிலிருந்து இன்று வரை செலுத்திய கட்டணத்தை ஆண்டுக்கு 9 சதவிகித வட்டியுடன் திரும்பத் தரவும் உத்தரவிட்டனர். இது மட்டுமின்றி, புகார்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தலா 20,000 ரூபாய் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக தலா ரூ.10,000/- தர உத்தரவிட்டனர். இதை எல்லாம் அடுத்து 30 நாட்களுக்குள் வழங்குமாறு ஜியோ நிறுவனத்திற்குக் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications