உங்க செல்போனை புது வகை வைரஸ் தாக்கி இருக்கலாம்.. 1 கோடி மொபைல் ஏற்கனவே காலி! கூகுள் எச்சரிக்கை
வாஷிங்டன்: சைபர் உலகில் திடீர் திடீரென புதிய புதிய வைரஸ்கள் பரவ தொடங்குகின்றன. அப்படி தான் இப்போது நெக்ரோ லோடர் என்ற புதிய வைரஸ் இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது. உலகெங்கும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான செல்போன்கள் இந்த புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நவீனக் காலத்தில் எல்லாமே செல்போன் என்று ஆகிவிட்டது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்தையும் செல்போனிலேயே செய்ய முடிகிறது. இதனால் செல்போன் கிட்டதட்ட ஆறாவது விரல் போலவே ஆகிவிட்டது என்று சொல்லலாம்.

சைபர் பாதுகாப்பு: செல்போனால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. அதேநேரம் இதைத் தவறாக பயன்படுத்தும் சில விஷமிகள் அப்பாவி மக்களை டார்கெட் செய்யவும் இதைப் பயன்படுத்துகிறார்கள். புதிய புதிய வைரஸ்களை பரப்பி செல்போன்களை ஹேக் செய்கிறார்கள். இதன் மூலம் தகவல் திருட்டு மட்டுமின்றி பெரும் தொகையையும் நாம் இழக்க நேரிடுகிறது. இதற்கிடையே அப்படியொரு பிரச்சினை தான் இப்போது வெடித்துள்ளது.
அதாவது உலகெங்கும் உள்ள சுமார் 1.10 கோட ஆண்ட்ராய்டு செல்போன்கள் நெக்ரோ லோடர் என்ற வகை வைரஸின் புதிய வேரியண்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வைரஸை சைபர் செக்யூரிட்டி நிறுவனமான காஸ்பர்ஸ்கி தான் முதலில் கண்டுபிடித்தது.
எப்படி பரவுகிறது: இதையடுத்து கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள பிரபலமான கேம் மற்றும் செயலிகளை டெவலப் செய்த நிறுவனத்திற்கு இந்த மால்வேரை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரபல நிறுவனங்களின் கேம்கள் அல்லது செயலிகளில் பிரச்சினை இல்லை.. மாறாக அதில் சில மாறுபாடுகளைச் செய்து விஷமிகள் வெளியிட்ட பிரபல நிறுவனங்களின் போலி செயலிகளிலேயே இந்த வைரஸ் இருப்பதாக காஸ்பர்ஸ்கி எச்சரித்துள்ளது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இதுபோன்ற போலி வெர்ஷன்களை நாம் டவுன்லோட் செய்தால் இந்த வைரஸ் உங்கள் மொபைலிலும் வந்துவிடும். ஒரு முறை நமது மொபைலுக்குள் வந்துவிட்டால் இது கண்ணுக்கே தெரியாத பல மாற்றங்களை நமது மொபைலில் செய்துவிடும். நமது வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல தகவல்களை இது திருடிவிடுகிறதாம்.
எச்சரிக்கை: மைன் கிராப்ட் (வீடியோ கேம்), ஸ்பாட்டிபை (பாடல் கேட்க பயன்படும் செயலி), வாட்ஸ்அப் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளின் போலி வெர்ஷன் மூலம் கூட இது பரவுவதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். எனவே, தேவையில்லாமல் போலி வெர்ஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒர்ஜினல் செயலியே கிடைக்கும் போது ஏன் இத்தனை பேர் போலி செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற சந்தேகம் வரும்.. ஒரிஜினல் செயலியில் சில விஷயங்கள் மட்டுமே இலவசமாக இருக்கும். மற்றவற்றுக்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போல இருக்கும். அதேநேரம் இந்த போலி வெர்ஷனில் எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்தையும் இலவசமாகப் பயன்படுத்த முடியும். இதன் காரணமாகவே மக்கள் பலரும் போலி வெர்ஷனை பயன்படுத்துகிறார்கள்.
1.10 கோடி செல்போன்கள்: உலகெங்கும் குறைந்தது 1.10 கோடி மொபைல்கள் இந்த போலி வெர்ஷனால் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இது அதிகாரப்பூர்வ தகவல்... இருப்பினும், இந்த போலி வெர்ஷன்களை கணக்கில் வராத வகையில் பல இடங்களில் இருந்து மக்கள் டவுன்லோடு செய்து இருக்கலாம். எனவே உண்மையான எண்ணிக்கை இதைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாகவே இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இப்போது இந்த வைரஸை நீக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications