ஒரு கோடி பயனாளர்கள் காலி.. ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிலையை பாருங்க.. ஆனால் ஆச்சரியம் தரும் பிஎஸ்என்எல்
டெல்லி: கடந்த செப். மாதம் நமது நாட்டின் டெலிகாம் நிறுவனங்கள் எவ்வளவு பயனாளர்களைப் புதிதாக பெற்றுள்ளன.. எவ்வளவு பயனாளர்களை இழந்துள்ளன என்பது குறித்த தகவல்களை டிராய் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளர்களை இழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பிஎஸ்என்எல் புதிய பயனாளர்களைப் பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நமது நாட்டில் பொதுமக்கள் பெரும்பாலானோர் மொபைல் மூலமாகவே இணையச் சேவையை பயன்படுத்துகிறார்கள். இதனால் டெலிகாம் நிறுவனங்கள் நமது நாட்டில் முக்கியமானதாக இருக்கிறது.

டெலிகாம் நிறுவனங்கள்: தற்போது நமது நாட்டில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய தனியார் நிறுவனங்களும், பிஎஸ்என்எல் அரசு நிறுவனமும் டெலிகாம் சந்தையில் இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் எந்த நிறுவனத்தில் எத்தனை பயனாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்களை டிராய் நிறுவனம் வெளியிடும். அதன்படி கடந்த செப். மாதம் எந்த நிறுவனத்திற்கு எத்தனை பயனாளர்கள் உள்ளனர் என்பது குறித்த டேட்டாவை இப்போது டிராய் வெளியிட்டுள்ளது.
சரிவு: அதில் செப். மாதம் ஜியோ நிறுவனம் தான் அதிகபட்ச பயனாளர்களை இழந்துள்ளது. அந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 79.69 லட்சம் பேர் ஜியோவில் இருந்து வெளியேறியுள்ளனர். அதேபோல பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் இருந்து 14.34 லட்சம் பயனர்களும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் இருந்து 15.53 லட்சம் பயனர்களும் வெளியேறியுள்ளனர். மொத்தத்தில் இந்த மூன்று தனியார் நிறுவனங்களில் இருந்து மட்டும் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் வெளியேறியுள்ளனர்.
பிஎஸ்என்எல்: இதே காலகட்டத்தில் அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பயனாளர்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சுமார் 8.49 லட்சம் பேர் இதில் புதிதாக இணைந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் தங்கள் கட்டணங்களை உயர்த்தியிருந்தன. அப்போது முதலே தனியார் டெலிகாம் நிறுவனங்களில் பயனாளர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதேநேரம் என்னதான் சுமார் 80 லட்சம் பயனாளர்களை இழந்தாலும் ரிலையன்ஸ் ஜியோ தான் நாட்டின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கிறது. கடந்த செப். மாத டேட்டாவின்படி ரிலையன்ஸ் ஜியோவில் இப்போது மொத்தம் 46.37 கோடி பயனாளர்கள் உள்ளனர். மறுபுறம் ஏர்டெல் நிறுவனத்தில் இப்போது 38.34 கோடி பயனாளர்கள் இருக்கிறார்கள். வோடபோன் ஐடியாவின் 21.24 கோடி பயனாளர்கள் இருக்கும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 9.18 கோடி பயனாளர்கள் உள்ளனர்.
ரீசார்ஜ் தொகை: கடந்த ஜூலை மாதம் மூன்று தனியார் டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை 10-27 சதவீதம் வரை உயர்த்தி இருந்தன. ஆனால், பிஎஸ்என்எல் அப்போது கட்டணத்தை உயர்த்தவில்லை. மேலும், எதிர்காலத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் திட்டமும் இல்லை என்று கூறியிருந்தார். அதன் பின்னரே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பயனாளர்கள் உயரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தனியார் டெலிகாம் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் நிலையில், வரும் காலங்களில் பிஎஸ்என்எல் பயனாளர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications