வச்சான் பாரு ஆப்பு எனக்கு! செப்-8 முதல் வாட்ஸ்ஆப் இயங்காது! பதறாதீங்க..‘இந்த’ போன்களில் மட்டும் தான்
சென்னை: உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தினசரி பயன்படுத்தும் முக்கிய தகவல் தொடர்பு செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள தகவல்படி, மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி, வரும் செப்டம்பர் 8 முதல் சில பழைய ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படாது என கூறப்படுகிறது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 6.0-க்கு முந்தைய பதிப்புகள் கொண்ட செல்போன்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாத நிலை உருவாகும்.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியை உலகம் முழுவதும் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். செய்திகள், படங்கள், வீடியோக்கள், ஆடியோ செய்திகள் மட்டுமின்றி, குரல் மற்றும் வீடியோ அழைப்புகள் வரை அனைத்திற்கும் வாட்ஸ்அப் இன்றியமையாத தளமாக மாறியுள்ளது.
குடும்ப உரையாடல்கள் முதல் பள்ளி, கல்லூரி, அலுவலகம், வணிகம் என பல்வேறு தேவைகளுக்காக தனிநபர் உரையாடல்களும், குழு உரையாடல்களும் வாட்ஸ்அப்பில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்றைய டிஜிட்டல் உலகம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.

வாட்ஸ்ஆப்
இதனால், புதிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வேகமான சேவைகளை வழங்க செயலிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், மிகவும் பழைய இயங்குதளங்களில் இந்த புதிய அம்சங்களை செயல்படுத்துவது சிரமமாகி வருகிறது. இதனால், பழைய மென்பொருள் கொண்ட செல்போன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. இதனால், ஆண்ட்ராய்டு 6.0 -க்கு குறைவான இயங்குதளம் கொண்ட செல்போன்களில் வருகின்ற செப்டம்பர் 8 முதல் வாட்ஸ்ஆப் இயங்காது என அறிவித்துள்ளது மெட்டா.
வாட்ஸ்ஆப் அப்டேட்
பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்கவும், புதிய வசதிகளை வழங்கவும் மேம்பட்ட இயங்குதளம் அவசியமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போது ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் 5.1 பதிப்புகள் கொண்ட செல்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்களே அதிகமாக பாதிக்கப்பட உள்ளனர். இந்த பதிப்புகள் மிகவும் பழையதாக கருதப்படுவதால், வரும் செப்டம்பர் 8 முதல் அந்த வகை போன்களில் வாட்ஸ்அப் செயலி முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாட்ஸ்ஆப் இயங்காது
இந்த மாற்றம் குறித்து ஏற்கனவே சில பயனர்களின் வாட்ஸ்அப் செயலியில் முன்னறிவிப்பு தோன்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பழைய ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் உடனடியாக தங்களின் தகவல்களை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டியது அவசியம்.
வாட்ஸ்ஆப் டேட்டா
குறிப்பாக, வாட்ஸ்அப்பில் உள்ள முக்கிய உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்களை காப்புப் பிரதியாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். புதிய செல்போனுக்கு மாறும் முன், தங்களின் தகவல்களை இணைய சேமிப்பு சேவைகளில் பாதுகாப்பாக சேமித்து வைத்தால், பின்னர் புதிய போனில் வாட்ஸ்அப் பதிவிறக்கம் செய்யும்போது பழைய தகவல்களை மீண்டும் பெற முடியும். இதனால் தகவல் இழப்பு ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படும்.
புதிய ஆண்ட்ராய்டு
இந்த மாற்றம் உலகம் முழுவதும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது. காரணம், பெரும்பாலான பயனர்கள் ஏற்கனவே புதிய ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு மாறியுள்ளனர். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட சில வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் பழைய வகை ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வரும் குறைந்த அளவிலான பயனர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே பழைய ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தங்களின் போனின் இயங்குதள பதிப்பை உடனே சரிபார்த்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ளுவது அவசியம் என்கின்றனர் டெக் வல்லுநர்கள்.













Click it and Unblock the Notifications