ரூ 250 தான் இருக்குது.. இதை வைத்து என்னை எரிச்சிடுங்கன்னு சொல்வார்! சிவாஜி பற்றி தியாகு உருக்கம்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை அடையாறில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு நடிகர் பிரபு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பிரபுவுடன் அவரது மகன் விக்ரம் பிரபுவும் கலந்துகொண்டு சிவாஜிக்கு மரியாதை செலுத்தினார். அப்போது நடிகர் தியாகுவும் சிவாஜி கணேசன் சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகு, சிவாஜியுடன் தனக்கிருந்த உறவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.
அப்போது பேசிய தியாகு, "சிவாஜி அப்பா எனக்கு மிகவும் வேண்டியமானவர். அவர் என் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். அவருடைய 24-வது நினைவு நாளில் அவரைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அவர் என்னுடைய திருமணத்திற்கு வந்திருந்தார். என்னை எப்போதும் கும்பகோணத்தான் என்றுதான் அழைப்பார். சிவாஜியுடன் நான் மூன்று திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். அவர் ஒரு அற்புதமான நடிகர்" என்று கூறினார்.

நடிகர் தியாகு பேட்டி
சிவாஜி கணேசன் ஒருமுறை வி.கே. ராமசாமியிடம், "என்னிடம் 240 ரூபாய் தான் இருக்கிறது. அந்தப் பணம்தான் மின்சார சுடுகாட்டிற்குத் தேவைப்படும் கட்டணம். எப்படியாவது என்னை அங்கு எரியுங்கள்" என்று கூறியதாக தியாகு நினைவு கூர்ந்தார். சிவாஜி கணேசனின் இறுதி ஊர்வலத்தில் விஜயகாந்த்துடன் தானும் கலந்துகொண்டு அவரது உடலைத் தூக்கிச் சென்றதாக அவர் தெரிவித்தார். சிவாஜி கணேசன் போன்ற ஒரு நடிகர் பிறப்பது மிகவும் அரிது என்று தியாகு குறிப்பிட்டார்.
சிவாஜி கணேசன் சிலை
மேலும் மதுரையில் சிவாஜி கணேசன் சிலை உருவாக அழகிரி முக்கிய காரணம் என்றும், பாண்டிச்சேரியில் சிலை திறந்தபோது அதில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது தனக்கு பெருமை என்றும் தியாகு கூறினார். இன்று அந்த சிலையை பார்க்கும்போது, சிவாஜியை நேரில் பார்ப்பது போலவே உணர்வதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நடிகர் தியாகு உருக்கம்
தன்னுடைய உடல்நலம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தியாகு, "என்னுடைய ஆருயிர் நண்பர் விஜயகாந்த் மறைந்ததிலிருந்து என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. கொரோனா எல்லாவற்றையும் மோசமாக்கிவிட்டது. நடிகர் விவேக் மறைவுக்குப் பிறகு எனக்கு ஒருவித பயம் வந்துவிட்டது. தற்போது எனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது நல்லவேளையாக என்னுடைய மகள் மருத்துவராக இருப்பதால் நான் தப்பித்து விட்டேன். இப்போது கவனமாக இருக்கிறேன்" என்று தியாகு கூறினார்.
பிரபு செய்த உதவி
அதுபோல இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் பார்த்து பிரபு நெகிழ்ந்து போயிருந்தார். தன்னுடைய அப்பாவிற்கு இத்தனை வருடங்கள் கழித்தாலும் இவ்வளவு ரசிகர்கள் இருப்பது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, அப்பாவின் மூச்சுக்காற்றில் தான் நாங்கள் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.. என்னுடைய அப்பாவிற்காக இங்கு இத்தனை பேர் கூடி இருப்பது அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தத்தை கொடுத்திருக்கிறது என்று எமோஷனலாக பேசி இருந்தார். அதுபோல அங்கிருந்த எளிமையான ஒரு சில ரசிகர்களுக்கு பிரபு கையில் ரகசியமாக பணம் கொடுத்திருந்தார். அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் அவர்களின் கைகளில் பணத்தை வைத்து மூடி இருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications