500 சவரன் தங்க நகை.. அவிநாசி பெண்ணின் அநியாய முடிவு.. திருப்பூர் பெற்றோர் மீதும் தவறுள்ளது: பிரபலம்
சென்னை: ஏழைகளுக்கு சட்டம் கிடைப்பதேயில்லை என்று வேலைக்காரி படத்தில் அறிஞர் அண்ணா வசனம் எழுதியிருந்தார்.. ஏழைக்கு தண்டனை தந்தால், வீட்டைவிட ஜெயில் நல்லா இருக்கிறதே என்று சென்றுவிடுவான்.. ஆனால் பணக்காரனுக்கு தண்டனை தந்தால், ஜெயிலையே தன் வீடாக மாற்றிக் கொள்வான். எனவே சட்டம் என்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு மட்டும்தான்" என்று திருப்பூர் பெண் தற்கொலையில், வேதனை தெரிவித்துள்ளார் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யா என்பவருக்கும், கைகாட்டிப்புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

500 சவரன் நகைகளை வரதட்சணையாக போடுவதாக சொல்லி திருமணத்துக்கு 300 சவரன் நகைகளையும் மகளுக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால், மிச்சம் 200 சவரன் நகைகளை வாங்கிவர சொல்லி ரிதன்யாவை, மாமியார் வீட்டில் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. அதிலும் மாமனார் மாமியார் மனரீதியாகவும், கணவர் உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
கணவர் கவின்குமார் எந்த வேலைக்கும் செல்வதில்லை.. வாடகை மூலம் மாதாந்திர வருமானம் வந்து கொண்டிருந்ததாம்..
பூச்சி மருந்து
வரதட்சணை சித்ரவதை அதிகமாகிவிட்டதால், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார் ரிதன்யா.. இறப்பதற்கு முன்பு பெற்றோருக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பியிருந்த ஆடியோவில், "மற்றொரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க உடன்பாடு இல்லை. ஒருவனுக்கு ஒருத்தி தான்.. தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்றும் ஆடியோவில் அழுதபடி பேசியிருக்கிறார் அந்த பெண்.
இந்நிலையில், Retro Voice என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள டாக்டர் காந்தராஜ், "இது இன்று நேற்று நடப்பதில்லை.. வரதட்சணை கொடுமை என்பது அந்த காலத்திலிருந்தே இருக்கிறது..
பணம் என்று ஒரு படம் வந்தது.. கலைஞர் கதை வசனம் எழுதியிருந்தார்.. அந்த படம் முழுக்க முழுக்க வரதட்சணையை பற்றியதுதான்.. சிவாஜி கணேசனும்-பத்மினியும் ஜோடியாக நடித்திருந்தார்கள்..
கலைவாணர் என்எஸ்கே
கலைவாணர் என்எஸ்கே அந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார்.. அதில் ஒரு சீனில் ஒரு புறாவை அறுக்க செல்வார்.. உடனே சிவாஜி, ஏன்..ண்ணே அதை அறுக்கறீங்க? என்று கேட்பார். அதற்கு என்எஸ்கே, இலவசமா தந்தாங்க, கூடவே 5 ரூபாயும் தந்தாங்க.. ஆனால், இதை வளர்க்குறதுக்கு காசு பத்தல.. என்பார்.
5 ரூபாய்க்காக புறாவை அறுக்கறீங்களே? என்று சிவாஜி கேட்டதற்கு, "5 ஆயிரம் ரூபாய்க்காக உன் பொண்டாட்டியை நீ துரத்தி விடலையா" என்று திருப்பி கேட்பார் என்எஸ்கே.. இப்படி பல கருத்துக்கள் வரதட்சணையை மையமாக வைத்து அதில் எடுக்கப்பட்டிருந்தது. அந்த காலத்தில் நிறைய படங்கள் வரதட்சணையை வைத்தே எடுக்கப்பட்டன.
பிச்சைக்கார குடும்பம் - சீரியல்
இன்றைய சீரியலையும் எடுத்துப்பார்த்தால் வரதட்சணை கட்டாயம் இருக்கும்-.
பிச்சைக்கார குடும்பத்திலிருந்து வந்த உன்னை துரத்தாம விடமாட்டேன் என்பது கட்டாய டயலாக்காக இருக்கும். எந்தவொரு சீரியரிலும் மாமியார் இருப்பாங்க, காரணமேயில்லாமல் ஒரு நாத்தனார் அதே வீட்டில் கணவருடன் தண்டமாய் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருப்பார்கள். மருமகள் அந்த வீட்டில் போராடுவாள்,
ஆனால் கணவனோ, தன் அம்மா, தங்கைக்காக பரிந்து பேசுவார்..
காலையில் 9 மணிக்கு ஆரம்பித்தால் ராத்திரி 11 மணி வரை இதுதான் எல்லா சீரியலிலும் கதையாக உள்ளது..
தமிழ்நாடு என்றில்லை, வடநாட்டிலும் இதே வரட்சணை கொடுமை இருக்கத்தான் செய்கிறது.. வரதட்சணை என்பது சனாதன தர்மத்தில் இருந்து வருகிறது..
வரதட்சணை வாங்க காரணம்
ஒரு பெண் புதிதாக மாமியார் வீட்டுக்குள் வரும்போது, அவளுக்கு சாப்பாடு போடுவதற்காக, செலவையும் நீங்களே தந்துவிடுங்கள் என்பதுதான் அந்த கணக்கு. அது நகைகளாக போடப்பட்டன.. கணவன் திடீரென இறந்துவிட்டால், அந்த நகைகளே அப்பெண்ணை காப்பாற்றும் என்பதுதான் அதன் அர்த்தம்..
அதாவது வரதட்சணை என்பதை, நியாயப்படுத்துவதற்காக இப்படியான காரணங்கள் சொல்லப்பட்டன. அதுமட்டுமல்ல, பெண் வீட்டுக்காரர்கள் தங்களை பெரிய பிஸ்தா என்று காட்டிக் கொள்வதற்காக, கடன் வாங்கியாவது நகைகளை போட்டுவிடுவார்கள்..
பெற்றோர் மீதும் தவறு
இந்த சமூகம் சரியில்லை.. இவ்வளவு நகைகளையும் தந்து, அந்த மணமகனை ஏன் தேர்ந்தெடுக்கணும்? வீட்டில் உட்கார்ந்து சாப்பிடும் மணமகன் என்று தெரிந்தும் எதற்காக பொண்ணை தரணும்? அதனால் பெண்ணின் பெற்றோரும் இதில் தவறு செய்துள்ளனர்..
எப்போதுமே சட்டங்கள் ஏழைகளுக்கு மட்டுமேதான்.. டூவீலரில் சென்றால் அபராதம், காரில் சென்றால் அபராதம் கிடையாது.. செல்வாக்கு மிகுந்தவர்களை கைது செய்தாலும், உடனே வெளியே வந்துவிடுவார்கள்.. மாதம் 20 லட்சம் உட்கார்ந்த இடத்திலிருந்தே வரக்கூடிய அளவுக்கு செல்வாக்குள்ள நபர்களாக உள்ளனர்.
சட்டங்கள் ஏழைகளுக்கு மட்டும்தான்
இந்த மணமகன் வீட்டினர் இருக்கும்போது, அவர்களை யாராவது தொடுவார்களா? இந்தியாவையே விலைக்கு வாங்கக்கூடிய ஒரு பணக்காரர் வீட்டில் திருமணம் நடந்தது.. அந்த நேரத்தில் ரெயிடு நடத்தியிருந்தால் எவ்வளவோ பணத்தை பிடித்திருக்கலாமே? ஆனால், அந்த கல்யாணத்துக்கு செல்பவர்களே அதிகாரத்தில் இருப்பவர்கள்தான்..
ஏழைகளுக்கு சட்டடம் கிடைப்பதேயில்லை என்று வேலைக்காரி படத்தில் அண்ணா வசனம் எழுதியிருந்தார்.. ஏழைக்கு தண்டனை தந்தால், வீட்டைவிட ஜெயில் நல்லா இருக்கிறதே என்று சென்றுவிடுவான்.. ஆனால் பணக்காரனுக்கு தண்டனை தந்தால், ஜெயிலையே தன் வீடாக மாற்றிக் கொள்வான். எனவே சட்டம் என்பது நடுத்தர, ஏழை மக்களுக்கு மட்டும்தான்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications