78 நாளும் அலறிய திருப்பூர் ரிதன்யா.. 300 பவுன் தங்கம் தந்தும் அவிநாசி கொடுமை? கல்வி மட்டும் போதுமா?
சென்னை: பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனநிலைமையில் இப்போதைய தலைமுறையினர் இருப்பதில்லை.. வெறும் கல்வி மட்டுமே எதையுமே வாழவைத்துவிடாது.. கல்வி மட்டுமே வாழ்வற்கான தகுதியா? என்பதை பார்க்க வேண்டும் என்று திருப்பூர் அவிநாசி பெண்ணின் தற்கொலை சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மகள் ரிதன்யாவுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

கைகாட்டிப்புதூர் ஜெயம் கார்டன் பகுதியை சேர்ந்த கவின்குமார் என்பவருக்கு மகளை மணமுடித்து தரும்போது, 500 சவரன் நகைகளை வரதட்சணையாக போடுவதாக சொல்லி 300 சவரன் நகைகளை போட்டு அனுப்பியுள்ளனர்.
ஆனால், மிச்சம் 200 சவரன் நகைகளுக்காக ரிதன்யாவை, மாமியார், மாமனார், கணவர் என 3 பேரும் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. சித்ரவதை அதிகமாகிவிட்டதால், பூச்சி மருந்து குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.. தன் சாவிற்கு தனது கணவன் மற்றும் மாமனார், மாமியார் தான் காரணம் என்றும் ஆடியோவில் அழுதபடி பேசியிருக்கிறாராம் அந்த பெண்
பாலியல் டார்ச்சர்
இந்நிலையில், King 247x என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "பெண்கள் மீதான வன்முறைகள் காலம் காலமாகவே இருந்து வருகிறது.. பண்டை காலத்தைவிட இப்போது இந்த கொடுமைகள் குறைந்துள்ளன. ஆனால், அவிநாசி பெண் இப்படியொரு குடும்பத்தில் பிறந்துவிட்டு, இந்த முடிவை எடுத்திருப்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும்.. குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, தகுந்த தண்டனையை வழங்க வேண்டும்.
பணக்கார குடும்பத்தில் பெண்ணை கட்டித்தந்திருக்கிறார்கள்.. ஆனால், வரதட்சணை போதவில்லை என்று மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் டார்ச்சர் தந்துள்ளனர்.. ஏற்கனவே ரிதன்யா தன்னுடைய வீட்டிற்கு சென்று இந்த பிரச்சனை குறித்து சொன்னபோது, தன்னுடனேயே வீட்டிலேயே இருந்துவிடும்படி, பெண்ணின் அப்பா சற்று வற்புறுத்தி சொல்லியிருக்கலாம்.
வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்
ஊர் பேசும் என்று பயந்தால் எப்படி? வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும்.. கணவர் கவின்குமார், அம்மா சித்ராதேவி, அப்பா ஈஸ்வரமூர்த்திதான் 3 பேரும் குற்றவாளிகள் என்று அந்த பெண் கூறியிருக்கிறார்...
இறப்பதற்கு முன்பு தானே கார் ஓட்டி வந்துள்ளார்.. நன்றாக படித்த பெண்ணாகவும் இருக்கிறார்.. இப்படிப்பட்ட பெண் பூச்சி மருந்து குடித்ததை ஜீரணிக்க முடியவில்லை.. பேசாமல் தன்னுடைய அப்பா வீட்டிற்கு சென்றிருக்கலாம்..
இறந்துபோனவர்களை பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், ஆயிரம் கவின்குமார்கள், ஆயிரம் ஈஸ்வரமூர்த்திகள், ஆயிரம் ரிதன்யாக்களுக்கு நாம் நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது. மகள் அங்கே டார்ச்சரை அனுபவிப்பது தெரியவந்தால், தன்னுடனேயே பெற்றோர் வைத்து கொண்டிருக்க வேண்டும்..
கல்வி மட்டுமே போதுமா
பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனநிலைமையில் இப்போதைய தலைமுறையினர் இருப்பதில்லை.. வெறும் கல்வி மட்டுமே எதையுமே வாழவைத்துவிடாது.. கல்வி மட்டுமே வாழ்வற்கான தகுதியா? என்பதை பார்க்க வேண்டும்.
அரசு பள்ளி மாணவர்கள் தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்து படித்து எழுதி வெற்றி பெறுவார்கள்.. இதனால் எதையும் எதிர்கொள்ளும் திறன் மாணவர்களுக்கு கிடைக்கும். ஆனால், வெறும் மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாக கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, சின்ன தோல்வியையும் ஜீரணிக்க முடிவதில்லை..
வெறும் 78 நாளில் இளம்பெண், இந்த முடிவை எடுத்துள்ளார்.. பணம் காசு தரவில்லை என்பதற்காக பாலியல் ரீதியாகவும் ரிதன்யாவை கணவர் டார்ச்சர் செய்திருக்கிறார். இவ்வளவு தூரம் கார் எடுத்துட்டு வந்த பெண், தன்னுடைய வீட்டுக்கு சென்றிருக்கலாம், அல்லது போலீசுக்கு சென்றிருக்கலாம், அல்லது வேறு திருமணம் செய்திருக்கலாம்.
நிராயுதபாணியாக எடுத்த முடிவு
ஒருவேளை தன்னுடைய பெற்றோர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டால், இந்த வழக்கை போலீஸ் எடுக்காது.. என்பதை அறிந்துதான், அந்த பெண் இப்படி நிராயுதபாணியாக தற்கொலை முடிவை செய்திருக்கிறார்..
கல்வியை போல, பொருளாதாரம் மட்டுமே இங்கு வாழ்வதற்கான தகுதி கிடையாது. பண ரீதியாக மட்டுமே இந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்கள்.. 2 உள்ளங்கள் ஒத்துப்போகிறதா? என்று யாருமே பார்க்கவில்லை.
மனரீதியாக அந்த பெண்ணுக்கு யாரும் சப்போர்ட் தரவில்லை.. பெற்றோர்கள் அந்த நம்பிக்கையை தந்திருக்கலாம்.. குடும்ப மானம் போய்விடும் என்று பலரும் நினைத்தே அமைதி காக்கிறார்கள்.. சினிமாவை காட்டி காட்டி, இனப்பெருமை பேசுவது, சாதி பெருமை பேசுவது என்றிருந்தால் எப்படி?
நிச்சயம் தண்டனை உண்டு
பொதுவாக கணவன் மனைவிக்குள் தகராறு வருவது இயல்பு.. ஆனால், 10 வருடம் கழித்து, தம்பதிக்குள் வரும் அன்பு, காதல் மட்டுமே உண்மையானது..
இங்கு ஆண்களை மட்டும் குறை சொல்ல முடியாது, கணவனின் பாஸ்வேர்டை கேட்கும் எத்தனையோ சைக்கோ பெண்களும் உண்டு.. இப்படி டார்ச்சர் செய்யும் பெண்களுடன், எப்படி கணவனால் வாழ முடியும்? இரு தரப்பிலுமே சைக்கோத்தனங்கள் உண்டு. இதை சகித்து கொண்டு பலர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள்.
ரிதன்யா வழக்கை பொறுத்தவரை, தற்கொலைக்கு தூண்டிய வழக்கு, வரதட்சணை கொடுமை பிரிவு 306, மனரீதியான, உடல்ரீதியான கொடுமை என 30 வருஷத்துக்கு ஜெயில் தண்டனை கிடைக்கும்.. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது சிறை தண்டனை கிடைக்கும். தற்போது விசாரணை நடந்து வருகிறது.. எந்த அளவுக்கு அந்த பெண்ணுக்கு டார்ச்சர் நடந்துள்ளது என்பது விசாரணைக்கு பிறகே நமக்கு தெரியவரும்" என்று தெரிவித்துள்ளார் .












Click it and Unblock the Notifications