Aan Paavam Pollathadhu review: விசில் பறக்கும் கோர்ட் காட்சிகள்! 'ஆண் பாவம் பொல்லாதது' விமர்சனம்
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ரியோ ராஜ் நடிப்பில், இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ரொமான்டிக் காமெடித் திரைப்படம் 'ஆண் பாவம் பொல்லாதது' இன்று திரையரங்குகளில் வெளியானது. நேற்று பத்திரிகையாளர்களுக்கானச் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், படத்தின் கலகலப்பான கதைக்களம் மற்றும் கூர்மையான வசனங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, திருமண உறவில் ஏற்படும் ஈகோ சண்டைகள் மற்றும் போலிக் 'பெண்ணியம்' பேசும் சிலருக்குச் செம்ம அடி கொடுக்கும் வசனங்கள் தான் படத்தின் மிகப் பெரிய பிளஸ்!

ரியோ ராஜ் விஜே டு ஹீரோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடித்துக் கலைப் பயணத்தை ஆரம்பித்த ரியோ ராஜ், தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். தொடர்ந்து 'சரவணன் மீனாட்சி' உள்ளிட்ட சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பிக் பாஸ் ஆகியவற்றில் கலந்துகொண்டார்.
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தில் லீட் ரோலில் நடித்து ஹீரோ பயணத்தைத் தொடங்கினார். அவர் நடித்தப் படங்களில் 'ஜோ' திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது.
ஆண் பாவம் பொல்லாதது கதைச் சுருக்கம்
ரியோ ராஜ் (ஐடி ஊழியர்) மற்றும் மாளவிகா மனோஜ் (மாடர்ன், முற்போக்காகச் சிந்திக்கும் பெண்) இருவரும் திருமணம் செய்கிறார்கள். ஆனால், சில மாதங்களிலேயே இவர்களுக்குள் பிரச்சனை வெடிக்க, விவாகரத்து வாங்கக் கோர்ட் செல்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறது, யாருடைய ஈகோ முடிகிறது என்பதுதான் கதை.

பிரதான நடிகர்கள்
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ஜென்சன் திவாகர் ஆகியோர் இதில் முக்கியப் பாத்திரங்களை ஏற்றுள்ளனர். படம் ஆரம்பித்த பதினைந்து நிமிடங்கள் கதைக்குள் வர எடுத்துக் கொண்டாலும், அதற்கு அடுத்து இடைவேளை வரை காமெடி சரவெடிதான் என்கிறார்கள் விமர்சகர்கள்.
ரியோவின் நடிப்பு
ரியோ ராஜ் தன் கேரக்டரை ரொம்ப ஈஸியாகச் செய்திருக்கிறார். கோர்ட் சீனில் வசனங்கள் இல்லாமலேயே அழுத்தமான நடிப்பு கொடுத்திருக்கிறார். நடிப்பில் அவர் நல்லாவே முன்னேறியிருக்கிறார் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. 'ஜோ' படத்தில் அமைதியாக வந்து கவர்ந்த மாளவிகா மனோஜ், இந்தப் படத்தில் நேரெதிரான கேரக்டரில் அட்டகாசம் செய்துள்ளார்.
விக்னேஷ்காந்த் & ஜென்சன்
ஆர்ஜே விக்னேஷ்காந்த் தான் படத்தின் இன்னொரு ஹீரோ. ஆரம்பத்தில் காமெடியாக வருவார் என்று பார்த்தால், இரண்டாம் பாதியில் மனுஷன் பின்னிவிட்டார். கோர்ட் சீனில் அவர் பேசும் வசனங்கள் அடிபொலி! அவரைவிட, உதவி வக்கீலாக வரும் ஜென்சன் திவாகர் தான் படத்தின் பில்லர். அவர் அடிக்கும் ஒவ்வொரு வசனத்துக்கும் தியேட்டரில் விசில் பறக்கிறது, சிரிப்பு சத்தம் தெறிக்கிறது. 'குடும்பஸ்தன்', 'லப்பர் பந்துக்கு' அப்புறம் செம்ம ரோல் இது!
சிவக்குமாரின் வசனங்கள்
சிவக்குமார் முருகேசனின் வசனங்கள் பல இடங்களில் 'நச்' ரகம். குறிப்பாப் போலிப் பெண்ணியம் பேசும், பெரியாரிசம் பேசும் பலருக்கும் செம்ம அடி கொடுக்கிறார். ஆண்களின் நிலையை எடுத்துச் சொல்ல ஒரு படம் வந்ததே ஒரு ஆறுதல் என்றும், அதில் ஆண்களின் பக்கம் மட்டும் நிற்காமல் பெண்களுக்கும் பேசியது சிறப்பு என்றும் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
கிளைமேக்ஸ் முன்பு வரும் கோர்ட் சீனில் விக்னேஷ்காந்த் பேசும் வசனங்கள் பலரையும் யோசிக்க வைக்கும். அது யதார்த்தத்தைப் பலருக்கும் உணர வைக்கும்.

ஆண்பாவம் பொல்லாதது படத்தின் மைனஸ்
கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இரண்டாம் பாதியில் சில குறைகள் இருந்தாலும், பெரிதாக எதுவும் ஃபீல் ஆகாது. அங்கேயும் காமெடி ஒர்க் ஆகிவிடுவதால், ஈஸியாகக் கடந்துபோகலாம். எமோஷனல் டச் கொஞ்சம் ஒர்க் ஆகவில்லை; அதை இன்னும் அழுத்தமாக எழுதியிருக்கலாம் என்றும் சில விமர்சகர்கள் கூறியிருக்கிறார்கள்.
காதலர்கள், கணவன், மனைவி தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளத் தாராளமாகப் பார்க்க வேண்டிய ஒரு படம் இது. 'ஆண் பாவம் பொல்லாதது' ஈகோவால் பிரியும் சில ஜோடிகளுக்குச் சமாதானத்தை ஏற்படுத்தலாம்!












Click it and Unblock the Notifications