ஆர்பி சவுத்ரி போன வாரம் கூட இதைத்தானே சொன்னாரு.. இப்படியா மரணம் வரணும்? நடிகர் பாரதி கண்ணன் உருக்கம்
சென்னை: தமிழ் சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவமாக தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மறைவு மாறியுள்ளது. பல தசாப்தங்களாக எண்ணற்ற வெற்றி படங்களை தயாரித்து, பலரின் வாழ்க்கையையே மாற்றிய மனிதர், திடீரென சாலை விபத்தில் உயிரிழந்தது திரைத்துறையினருக்கு இன்னும் ஏற்க முடியாத வேதனையாக உள்ளது. இவரது மறைவுக்குப் பிறகு பலரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகரும் இயக்குநருமான பாரதிகண்ணன் பேசிய உருக்கமான நினைவுகள் சமூக வலைதளங்களில் பலரையும் கலங்க வைத்துள்ளது.

நடிகர் பாரதி கண்ணன் பேச்சு
அவர் கூறுகையில், "ஆர்.பி. சவுத்ரி மறைவு எனக்கு மிகுந்த வேதனையை கொடுக்கிறது. சில சமயம் உள்ளுணர்வு எதையோ சொல்லும்; அது உண்மையாகி விடும். அதுபோலத்தான் கடந்த வாரம் அவரை பார்க்க வேண்டும் என்ற ஒரு உணர்வு என்னுள் எழுந்தது. இதற்கு முன்பு அவரை பார்த்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த காலத்தில் ஒருமுறையும் நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் திடீரென்று அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது," என்று தொடங்கினார்.
மன உணர்வு
மேலும் தனக்கு தன்னுடைய மனதிற்குள் ஏதோ உறுத்தல் இருந்ததால் உதவியாளருக்கு போன் செய்து சவுத்ரி சார பார்க்கணும் என்று பாரதி கண்ணன் கேட்டாராம். "அவர் வீட்டில்தான் இருக்கிறார், நீங்கள் வந்து சந்திக்கலாம்" என்ற தகவல் கிடைத்ததும், கடந்த திங்கட்கிழமை நேரில் சென்று சந்தித்ததாக கூறினார். "என்னை பார்த்ததும் அவர் மிகவும் இயல்பாக, 'என்ன விஷயம்? ஏதாவது சிறப்பு இருக்கா?' என்று கேட்டார். அதற்கு நான் 'இல்லை சார், உங்களிடம் பேச வேண்டும் போல இருந்தது, அதனால்தான் வந்தேன்' என்று சொன்னேன்," பிறகு இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்தோம் என்று கூறியிருக்கிறார்.
அடுத்த பிளான்
மேலும், "அவர் அடுத்த வாரம் ராஜஸ்தான் போகப் போகிறேன். அங்கிருந்து வந்த பிறகு ஒரு படம் கதை கேட்கலாம். நீங்களும் என்னுடன் இருங்கள், உங்களுக்கு சம்பளம் கூட தருவேன்' என்று சொன்னார். நான் அதற்கு, 'வேண்டாம் சார், உங்கள மாதிரி ஒருவருக்கு என்னால் முடிந்ததை செய்ததிலேயே நான் சந்தோஷமாக இருக்கிறேன். நாங்கள் தான் உங்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம்' என்று சொன்னேன்.
ஆர்பி சவுத்ரியின் கடைசி பேச்சு
அதற்கு அவர் சிரித்தார். 'எனக்கு வயசாகிவிட்டது... ஒரு இளைஞரை கூட வைத்துக்கொள்ளலாம்' என்று கூட சொன்னார். நானும் 'சரி' என்று சொல்லிவிட்டேன். ஆனால் இன்று இப்படிப்பட்ட செய்தி வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை," என்று கண்ணீருடன் பகிர்ந்தார்.
மேலும் அவர், "இந்த செய்தி எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் கொடுத்தது. அவர் ஒருபோதும் கோபமாக பேச மாட்டார். மிகவும் அமைதியானவர். எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு இருப்பவர். அவருக்கு இப்படியான ஒரு முடிவு வரக்கூடாது. ஒரு மாரடைப்பு போன்ற இயல்பான மரணம் இருந்திருந்தால் மனசு ஏற்றுக்கொண்டிருக்கும். ஆனால் இப்படி ஒரு விபத்து... அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை," என்று பாரதி கண்ணன் கூறினார்.
ஆர்பி சவுத்ரியின் மனிதநேயம்
ஆர்.பி. சவுத்ரியின் மனிதநேயத்தை வெளிப்படுத்தும் சம்பவங்களையும் அவர் பகிர்ந்தார். "இன்றைய காலத்தில் யாரிடமும் ஆயிரம் ரூபாய் கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள். ஆனால் பல வருடங்களுக்கு முன்பு நான் 'கண்ணாத்தாள்' படம் இயக்கிய போது, அந்தப் படத்திற்காக அவர் ஒரு கோடி ரூபாய் உடனே கொடுத்தார். இப்படிப்பட்ட மனசு யாருக்காவது இருக்குமா? அவரால் ஏராளமானோர் வாழ்க்கையில் முன்னேறியிருக்கிறார்கள். யாரும் அவரால் பாதிக்கப்படவில்லை," என்று வியப்புடன் பேசினார்.
கண் கலங்கிய பாரதி கண்ணன்
இந்த துயரமான செய்தியை கேட்டதும் பாரதி கண்ணன் உடனே இயக்குநர் விக்ரமனை தொடர்பு கொண்டதாகவும் கூறினார். "நான் விக்ரமனுக்கு போன் பண்ணினேன். அவர் அழுதுகிட்டே பேசினார். 'சவுத்ரி சார் எங்களுக்கு அப்பா மாதிரி... அதைவிட தெய்வம் மாதிரி' என்று சொன்னார். அந்த அளவிற்கு அவர் மீது எங்களுக்கு நன்றி உணர்வு இருக்கிறது," என்று பகிர்ந்தார்.
உண்மையில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ஆர்.பி. சவுத்ரி தமிழ் சினிமாவுக்கு அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. 'பூவே உனக்காக', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'நாட்டாமை', 'சூர்யவம்சம்', 'ஜில்லா' போன்ற பல தலைமுறைகள் ரசித்த படங்கள் அவரது தயாரிப்பில் உருவாகியவை. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களை முன்னணி இயக்குநர்களாக உருவாக்கியவர் என்ற பெருமையும் அவருக்கே சொந்தம்.
தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மறைவு
இவரது மறைவு ஒரு தயாரிப்பாளரின் இழப்பு மட்டுமல்ல; ஒரு மனிதநேயத்தின் சின்னத்தின் இழப்பாக பார்க்கப்படுகிறது. இன்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஒரே கருத்தை பகிர்ந்து வருகிறார்கள்-"ஆர்.பி. சவுத்ரி போன்ற மனிதர்கள் மீண்டும் வருவது கடினம்" என்பதையே.
அவரால் வாழ்ந்த எண்ணற்ற மனிதர்களின் நினைவுகளிலும், அவர் உருவாக்கிய படங்களிலும், அவர் காட்டிய மனிதநேயத்திலும் ஆர்.பி. சவுத்ரி என்ற பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்.













Click it and Unblock the Notifications