நடிகர் ஜிபி முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு.. கோஷம் போட்டு முற்றுகையிட்ட ஊர் மக்கள்
தூத்துக்குடி: நடிகர் ஜிபி முத்து தன்னுடைய சொந்த ஊரான திருச்செந்தூர் உடன்குடியில் கீழத்தெருவை காணவில்லை என ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் ஜி.பி.முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று பொதுமக்கள் சூழ்ந்து கூறியதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டிக் டாக் மூலம் பிரபலம் அடைந்த ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்டத்தில் சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்தார். இன்று சோசியல் மீடியாவில் பிரபலமாக இருக்கிறார். இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் போட்டியாளராகவும் அறிமுகமானார். அதுபோல விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டார். அதை தொடர்ந்து சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஜி பி முத்து புகார்
இப்படியாக இவருடைய திரை பயணம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய சொந்த ஊரில் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டதாக நேற்று முன்தினம் தனது மனைவியுடன் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று ஒரு புகார் மனு அளித்திருந்தார். அதில் உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233 கீழத்தெரு இருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம். பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி இருந்தனர். ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்த தெரு காணாமல் போய்விட்டது என்று கூறியிருந்தார்.
காணாமல் போன தெரு
அதோடு அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால் பொதுமக்களின் பாதை அடைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நான் இந்த இடம் பிரச்சனைக்காக பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறேன். மேற்படி நிலத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடன்குடி பெருமாள் புரத்தில் காணாமல் போன கீழ தெருவை கண்டுபிடித்து தருமாறு ஜி பி முத்து கலெக்டரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
போலீஸ் பாதுகாப்பு
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாகவும் ஜி பி முத்து மிரட்டல் விடுத்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஜிபி முத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய வீட்டை முற்றுகை இடுவோம் என்று அப்பகுதி மக்கள் கூறி இருந்தனர். இதனால் உடன்குடியில் உள்ள ஜி பி முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வாக்குவாதம்
இந்த நிலையில் ஆக்கிரமிப்பு பிரச்சனையில் தன்னுடைய வீட்டை முற்றுகையிட வந்த கிராம மக்கள் உடன் ஜிபி முத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது கிராம மக்கள் ஜி.பி முத்து ஒழிக ஒழிக என்று கோஷம் போட்டனர். அப்போது கோபமான ஜிபி முத்துவும் தனக்குத்தானே ஒழிக ஒழிக என்று கோஷமிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஜிபி முத்துவையும் கிராம மக்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
வீடியோ
ஜிபி முத்து இப்போது வளர்ந்து வருவதால் அவருடைய சொந்த ஊர்காரர்களே அவர் மீது பொறாமையில் அவர் பற்றி அவதூறு பரப்பி வருவதாக ஏற்கனவே கூறியிருந்தார். இப்போது ஊர்காரர்கள் மொத்த பேரும் திரண்டு வந்திருக்கும் நிலையில் எதிர் தரப்பில் ஜிபி முத்து ஒருவர் தனியாக நின்று கொண்டு வாக்குவாதம் செய்திருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications