தனி மனிதனே தப்பா இருக்கும் போது சமூகத்தை எப்படி கட்டமைக்க முடியும்?.. நடிகர் இளவரசு கோபம்
சென்னை: தனி மனிதனே தப்பா இருக்கும் சமூகத்தை எப்படி கட்டமைக்க முடியும் என நடிகர் இளவரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் இளவரசு. இவர் ஒளிப்பதிவாளரும் நடிகருமாவார். இதுவரை 13 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் தமிழக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். இவர் பாரதிராஜா, சேரன் ஆகியோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் நடிப்புத் துறைககு வந்தார்.
இதுவரை 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவற்றில் நிறைய படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் வாத்தி படத்தில் நடித்துள்ளார். அது போல் விடுதலை பகுதி 1 படத்திலும் இளவரசு என்ற கேரக்டரிலேயே நடித்துள்ளார்.

தற்போது ஆனந்தராகம் சீரியலில் சண்முகவேல் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கருத்தம்மா படத்தில் ஒளிப்பதிவாளராக தனது திறமையை காண்பித்தார். 1999ஆம் ஆண்டு வெளியான மனம் விரும்புதே உன்னை படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் விருதை பெற்றார். அது போல் கருத்தம்மா படத்தில் பொன்வண்ணனுக்கும் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் மகாநதி சங்கருக்கும் இவர் டப்பிங் பேசியுள்ளார்.
இவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: என்னிடம் படத்திற்கான ஸ்கிரிப்ட் சொன்னால், நான் அதை படிக்க மாட்டேன். அதற்கு காரணம் படித்தால் நான் ஒரு மாடுலேஷனில் ஃபிக்ஸ் ஆகிவிடுவேன். இயக்குநர் மாடுலேஷன் வேறு மாதிரியாக இருக்கும். இயக்குநர் ஒரு மாடுலேஷன் கேட்கும் போது என் உடல் மொழி இருந்தாலும் அவரின் தேவைக்கான ஒரு விஷயம் உள்ளே வந்துவிடும்.
இயக்குநர்களை நன்றாக கவனிப்பேன். அவர்களின் ரியாக்ஷன் சரியில்லை என்றால் நானே ஒன்ஸ்மோர் கேட்பேன். அந்த கதாபாத்திரத்தை அவர் எவ்வளவு நாள் சுமந்திருப்பார்? அதை நாம் கெடுத்துவிடக் கூடாது. நான் தொழில்நுட்ப கலைஞராக இருந்த போது என்னுடைய பொருளாதார சூழல் வேறுமாதிரியாக இருந்தது. 3 வேளை சாப்பாடு கூட கிடையாது.
வெளியே கதை சொல்ல பஸ் பிடித்து நண்பர்களிடம் ஓசியில் பைக் வாங்கிக் கொண்டு சிரமப்பட்டேன். வெறும் ரூ 20 க்கு பெட்ரோல் போடவே மிகவும் சிரமமாக இருக்கும். தயாரிப்பு நிறுவனத்தில் வந்து கதையை சொல்லிவிட்டு சாப்பிட சொல்வாங்க. அவங்க முன்னாடி கெத்தா வேண்டாம் என சொல்லிவிடுவேன். ஆனால் டீ குடிக்கக் கூட வழியிருக்காது.

எனது அப்பா ஒரு பேராசிரியர். பேராசிரியர் அன்பழகனின் மாணவர் அவர். என் அப்பா எம்எல்ஏவாக இருந்தாலும் என் வளர்ப்பு எல்லாம் வாத்தியார் வீட்டு பிள்ளையாகவே இருந்தது. என் அப்பா எம்எல்ஏவாக இருந்த வரை என் வீட்டிற்கு நிறைய பேர் வருவார்கள். ஆனால் அவர் முன்னாள் எம்எல்ஏ ஆன பிறகும் ஒருவரும் வரமாட்டார்கள். இதை நான் சிறிய வயதிலேயே பார்த்ததால் நான் ஒரு பெரிய இடம் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. நடிப்பிற்கு நான் தனியாக பயிற்சி எடுக்கவில்லை.
தனி மனிதன் எல்லாம் தப்பா இருக்கும் போது சமூகத்தை எப்படி கட்டமைக்க முடியும்? தனி மனித நாகரீகம் இருந்தால் போதும். சமூக பொறுப்பு என்று ஒன்றும் இல்லை. கருத்து ஒத்து வந்தால் கேட்க வேண்டும் . ஒத்து வராவிட்டால் அங்கிருந்து போய்விட வேண்டும். அவ்வளவுதான். இவ்வாறு இளவரசு அந்த பேட்டியில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications