மாதுளை சாறும், இளநீரும்தான் உணவு.. தண்ணீரை கூட விழுங்க முடியாது.. மனோபாலா மேனேஜர் வேதனை
சென்னை: கடைசி காலங்களில் மனோபாலா வலியால் மிகவும் கஷ்டப்பட்டார் என அவருடைய மேலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், காமெடியன், குணச்சித்திர நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் மனோபாலா. அவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு கடந்த 3 ஆம் தேதி காலமானார். அவருக்கு மனைவி உஷாவும் மகன் ஹரீஷும் உள்ளனர்.

அவருடைய இறப்பை கேட்டு திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. மீண்டும் குணமடைந்து வந்துவிடுவார் என நம்பிய நிலையில் இப்படி ஆகிவிட்டது. ஏற்கெனவே கடந்த இரு மாதங்களாக குணமாவதும் சிக்காவதும் என மாறி மாறி இருந்தது. இந்த நிலையில் அவருக்கு என்ன நடந்தது என்பதை அவர் கூடவே இருந்த மேனேஜர்கள் விளக்கியுள்ளனர்.
இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு மனோபாலாவின் மேலாளர்கள் கூறியிருப்பதாவது: இயக்குநர் கதிரின படத்தில்தான் மனோபாலா சார் கடைசியாக நடித்திருந்தார். மாநகரம் படம் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் மனோபாலா சாரிடம் பேசினார். அதையெல்லாம் தாண்டி இவரும் லோகேஷ் மாமனாரும் நண்பர்களாம்.
கைதி படத்தில் வரும் ஜார்ஜ் மரியம் கேரக்டரை எனக்கு ஏன் கொடுக்கலைனு லோகேஷிடம் சண்டை போட்டார். எந்த படம் வந்தாலும் அதை பார்த்துவிட்டு அதில் நடித்த நடிகர்களுக்கு வாழ்த்துகளை கூறுவார். கமல் சாரும் மனோபாலா சாரும் நண்பர்கள். ஆனால் அவருடைய படத்தில் மனோ சார் இதுவரை நடித்தது இல்லை என வருந்துவார்.
ஆனால் இந்தியன் 2 படத்தில் எப்படியோ அமைந்துவிட்டது. உடல் நிலை சரியாக இருந்த போதே நடித்து கொடுத்துவிட்டார். மனோபாலாவுக்காக லோகேஷ் கனகராஜ் தனியாக ஒரு கதாபாத்திரத்தை எழுதி வருவதாக கூறியிருந்தார். அதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கேட்டிருந்தார்கள். அந்த லியோ படத்தில் தாடி வளர்க்குமாறு லோகேஷ் சொல்கிறார். ஆனால் அரண்மனை 4 ஷூட்டிங் போய் கொண்டிருக்கிறது.

நான் என்ன செய்யறது என மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்ததும் கேட்கிறார். ஏதாவது ஐடியா கொடுங்கடா என எங்களிடம் கேட்கிறார். விஜய் படத்தில் லோகேஷ் இயக்கத்தில் நடிக்க போகிறோம் என்றதும் சின்ன பையன் போல் குதிக்கிறார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் எங்களுக்கு விடிவதே அவர் வீட்டில்தான். அது போல் இரவு 10.30 மணி என்றாலும் எங்களிடம் பேசுவார்.
பிசியோதெரபிக்கு நாங்கள் அழைக்கிறோம் அவர் வரவே இல்லை. என்ன சார் சும்மா படுத்துகிட்டே இருக்கீங்க, வாங்க சார் பிசியோதெரபி செய்யலாம் அழைக்கிறோம். ஆனால் அவரால் முடியவில்லை என்கிறார். நாங்களும் குணமாவதற்கு அப்படித்தான் சார் வலிக்கும் என்போம். எங்கு வலிக்குது என கேட்போம். கால் அழுத்தி விடட்டுமா என்போம். அவருக்கு உணவே மாதுளை பழத்தின் சாறும், இளநீரும்தான்.
அதையும் மில்லி அளவுகளில்தான் எடுத்துக் கொள்வார். ஒரு சிப்புக்கு மேல் அவரால் குடிக்க முடியவில்லை. சாதாரண தண்ணீர் குடித்தாலே தொண்டையிலேயே ஒரு நிமிடம் வைத்திருப்பார். மெதுவாகத்தான் முழுங்குவார். நாங்கள் டாக்டரிடம் கேட்ட போது கணையத்தில் அவருக்கு பிரச்சினை இருப்பதால் சிறுகுடலும் பெருங்குடலும் செயல்படும் போது இதெல்லாம் இருக்கும் என்றார்.
கடைசி வரை அவருடைய மனைவியும் மகனும் இருந்தார்கள். கடந்த இரண்டரை மாதங்களாக அவர்கள் மிகவும் மனதளவில் கஷ்டப்பட்டார்கள். சதுரங்க வேட்டை 2 ரிலீஸ் செய்யாமல் என் மூச்சு நிற்காதுடா என எங்களிடம் சொல்வார். ஆனால் அதற்காக போராடியும் முடியாமல் போனது. ஷூட்டிங் போவதற்கு முன்பு கோயிலுக்கு போய்விட்டுதான் செல்வார். எங்களையும் கோயில் கோயிலாக அழைத்து செல்வார். மலேசியா முருகனையும் எங்களுக்கு காட்டினார்.
கோயிலில் இவருக்கு என்னென்ன மரியாதை செய்கிறார்களோ அத்தனையும் கூட போகும் டிரைவர், எங்களுக்கும் செய்ய வேண்டும் என மனோபாலா சார் சொல்வார். தனக்கு மட்டும் செய்தால் கோபம் வந்து எல்லாரையும் ஒரே மாதிரி நடத்துங்கள் என்பார். அவருடைய மகன் அவரை பார்த்துவிட்டு அமெரிக்கா போவதாக இருந்தது. ஆனால் அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இவ்வாறு மேனேஜர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications