"எதிர்நீச்சலில் ட்விஸ்ட்"! ஆதிகுணசேகரனாக மட்டும் இருக்காதீங்க.. .. சொல்றது யாருனு பாருங்க!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இத்தனை கொடூரக்காரனாக வரும் மாரிமுத்து நிஜத்தில் எப்படி தெரியுமா?
இதுகுறித்து நடிகர் மாரிமுத்து சன் நியூஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறுகையில் எதிர்நீச்சல் சீரியலில் பார்க்கும் மாரிமுத்துவை போல் நான் நிஜத்தில் அப்படி கிடையாது. பெண்கள் மீது மிகப்பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளேன். நான் இருக்கும் இடமே கலகலவென இருக்கும். நான் கலாரசிகன், நான் உண்மையில் அன்பானவன்தான்.

ஆனால் கதாபாத்திரத்திற்கு என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன். எதிர்நீச்சல் கதையையும் எனது கதாபாத்திரத்தையும் திருச்செல்வம் சொன்னதும் அதற்கு நான் என்னை முழுசாக ஈடுபடுத்திக் கொண்டேன். உடல்மொழியையும் வசனத்தையும் நடிப்பையும் யதார்த்தமாக வெளிப்படுத்தும் தன்மை எனக்கு உண்டு.
நான் என் வாழ்க்கையில் எத்தனையோ ஆணாதிக்கவாதிகளை பார்த்துள்ளேன். திருமண வீடு, இறப்பு வீடு, பஸ் ஸ்டான்ட் உள்ளிட்ட இடங்களில் பார்த்துள்ளேன். மனைவியை கடைசி வரை அடக்கியே வைத்திருப்பனைகூட நான் பார்த்திருக்கேன். அதனால் அந்த கேரக்டர்கள் எல்லாம் என்னுள் இறங்கினார்களோ என்னவோ. இதனால் என்னை பார்க்கும் பலர் உண்மையிலேயே இந்த ஆள் அப்படித்தானோ என நினைக்கிறார்கள்.
நான் எந்த வசனத்தையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்க மாட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. என் வீட்டில் குலத்தெய்வத்தின் போட்டோ இருக்கிறது. அது தெய்வம் இல்லை, என் பாட்டனார்தானே. என் மனைவிக்கு சாமி பக்தி அதிகம். அவரை நான் தடுப்பதில்லை. அது போல் என் பிள்ளைகளும் கடவுள் மறுப்பாளர்கள்.
ஜோதிடர்கள் என் மீது புகார் கொடுத்தார்கள். நான் கோபமாக பேசியதற்கு காரணம், நான் போய் உட்கார்ந்தவுடனே ஒரு ஜோதிடர் செல்பி எடுத்துவிட்டு டெலிட் செய்தால் திருஷ்டி கழிந்துவிடும் என்கிறார். அது போல் கன்னியாகுமரி கடற்கரையை உற்று பார்த்தால் செல்வம் பெருகும் என்கிறார். அங்கு எத்தனையோ பிச்சைக்காரர்கள் கடற்கரையை உற்று பார்த்தும் அவர்கள் இன்றும் பிச்சையெடுத்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
சந்திர மண்டலத்தில் ராக்கெட் ஏவி அங்கிருந்து புகைப்படங்கள் எல்லாம் நமக்கு கிடைக்கின்றன. இன்று நம் கையில் நிலவு பந்து போல் விளையாடி கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது இவர்கள் சந்திரனை வைத்து கட்டம் போட்டுக் கொண்டு 3 ஆவது இடத்திற்கு அவன் போறான், 7ஆம் இடத்திற்கு இவன் போறான் என மக்களை ஏமாற்றலாமா.
நமது செயலும் அறிவும்தான் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை உருவாக்குகிறது. மற்ற எதுவுமே இல்லை. நாக்கில் அலகு குத்தி, ஆட்டை வெட்டி ரத்தத்தை குடித்து, கடவுள் என எதை சொன்னாலும் நம்பும் கூட்டத்தில்தான் நான் பிறந்தேன். ஆனாலும் எனக்கு சிறு வயது முதலே கடவுள் நம்பிக்கை இல்லை. சிறு வயதில் பிள்ளையார் கோவிலை கழுவும் போது கூட இது ஒரு கல்லு, இதை வடிவமைத்தவர் சிற்பி, இதற்கு ஏன் மாலை போட்டு வணங்குகிறார்கள் என என்னுள் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
என்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள் எல்லாமே கடவுள் இல்லை என்பதை போல்தான் இருக்கிறது. கடவுள் இருக்கிறது என என்னை சுற்றி ஒரு சம்பவம் நடந்தாலும் போதும் அன்றைக்கே நான் சாமி கும்பிட ஆரம்பிச்சுடுவேன். பெண்ணடிமைத்தனத்தை ஒழிப்பதற்காக இன்னொருவர் ஏந்தியிருக்கும் இன்னொரு வாள். இதுதான் எதிர்நீச்சல் மூலம் நாங்கள் சொல்ல வருவது. சிராய்ப்புகள் நிறைந்த பயணம்தான் இன்பமாக பயணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.
இந்த சீரியல் பெண்கள் மிகப்பெரிய சக்தி எனபதை சொல்லும் விதமாகத்தான் முடியும். பெண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் மகோன்னதமானவர்கள் என சொல்வதற்கு பெண்களை அடிமைப்படுத்துவது போன்று என்னை போல் ஒருவன் வேண்டும். ஆதி குணசேகரன் எல்லாம் சாதாரணம், என்னை விட பெரிய பெரிய கொடூரன்கள் எல்லாம் இருக்கிறான். பெண்களை எப்போதும் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.
அதென்ன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறது என எனக்கு புரியவில்லை. இதுவரை என் மனைவியை நான் அடித்தது கூட இல்லை. பெண் எப்போதும் ஆணை விட ஒரு படி மேலதான். ஒரு பெண் காலையிலிருந்து இரவு வரை செய்யும் வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்து பாருங்கள் சார், அந்த வேலைகள் எல்லாம் ஒரு ஆண் 6 மாதம் செய்யும் வேலையாக இருக்கும். வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெரு ஆதி குணசேகரன்கள் இருக்கிறான்கள். ஆதி குணசேகரனாக யாரும் இருக்காதீர்கள். அப்படி இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள். இவ்வாறு நடிகர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications