மாரிமுத்துவுக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை.. டைமுக்கு ஜிம்முக்கு வருவார்! நடிகர் ரோபோ சங்கர் வேதனை
சென்னை: எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, சொன்ன டைமுக்கு ஜிம்மில் இருப்பார் என நடிகர் மாரிமுத்து குறித்து ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
எதிர்நீச்சல் சீரியலில் வரும் நடிகர் மாரிமுத்து, இன்று காலை டப்பிங் பணிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். அங்கு அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சாலிகிராமத்தில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது இறப்பு செய்தி கேட்டு காலை முதலே எதிர்நீச்சல் சீரியல் நடிகர்கள், நடிகைகள் மாரிமுத்துவின் வீட்டில் உள்ளார்கள். அவரது உடல் வந்ததும் மாரிமுத்துவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். ஹரிபிரியா, மதுமிதா, கனிகா, சத்யபிரியா, பிரியதர்ஷினி, கமலேஷ், கதிர் கேரக்டரில் நடித்தவர், கரிகாலன் கேரக்டரில் நடித்தவர் என எல்லோரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
மேலும் பலரும் தங்களுடைய நினைவலைகளை பகிர்ந்து வருகிறார்கள். மாரிமுத்து இறந்துவிட்டார் என்பதை ஏற்கமுடியவில்லை என கதறுகிறார்கள். இவருடைய உடல் பிற்பகல் 3 அல்லது 4 மணிக்கு மேல் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனியில் வருசநாடு பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்குதான் அவருடைய இறுதிச் சடங்கு நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து நடிகர் ரோபோ சங்கர் கூறுகையில், மிகவும் அற்புதமான மனிதர், நல்ல நடிகர், நல்ல இயக்குநர், அவர் இருக்கும் இடமே கலகலப்பாக இருக்கும். வளர்ந்து வந்த நேரத்தில் இப்படி ஆகிவிட்டது. நான் என் தங்கை வீட்டு விசேஷத்திற்கு சென்றுவிட்டு காலை தான் சென்னை வந்தேன்.
அதற்குள் இப்படி ஒரு தகவல் எனக்கு கிடைத்தது. ஜிம்மில் என்னுடன் வந்து வொர்க் அவுட் செய்வார். எனக்கு தெரிந்து அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது. அவர், நான், விமல், சினேகன், ஒளிப்பதிவாளர் இளவரசு ஆகியோர் ஒரே ஜிம்மில் வொர்க் அவுட் செய்வோம். சொன்ன டைமுக்கு வந்துவிடுவார்.

வந்ததும் என்னப்பா யாரையும் காணோம் என கேட்பார், தான் ஜிம்முக்கு வந்துவிட்டேன் என்பதை மெசேஜாக போடுவார். இப்படி தனது உடலை நன்றாக பார்த்துக் கொண்ட அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. என ரோபோ சங்கர் தெரிவித்தார். மாரிமுத்து ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதாக வைரமுத்து தெரிவித்தார்.
அவர்தான் மாரிமுத்துவை டாக்டர் தணிகாசலத்திடம் அனுப்பி வைத்து செக் செய்யுமாறு கூறினார். டாக்டர் சொன்னது போல் தனது வாழ்வியலை மாற்றிக் கொண்டார் மாரிமுத்து. மாலை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்த மாரிமுத்து மீது இறுதி மலர்கள் தூவுவதை என்னால் பார்க்க முடியவில்லை என வைரமுத்து தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications