நடிகர் சூரி செய்தது துரோகம்.. மேடையில் நடிக்கிறாரு, ஆனால் நிஜத்தில் அப்படி இல்ல.. இயக்குநர் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது குடும்ப பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் முன் கண்ணீர் மல்க பேசிய விவகாரம் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கோலிவுட்டில் இன்னொரு அதிர்ச்சி சர்ச்சை வெடித்துள்ளது. நடிகர் சூரி மீது இயக்குநர் வெற்றிவீரன் வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுகள் தற்போது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சூரி மீது இயக்குனர் குற்றச்சாட்டு
'பூ காய் கனி' திரைப்படத்தின் இயக்குநரான வெற்றிவீரன், செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் சூரி குறித்து மிகவும் ஆதங்கத்துடன் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, "சூரி செய்தது நேரடியான துரோகம். கூட இருந்த நண்பர்களில் ஒருவருக்குக் கூட அவர் கை தூக்கி விடவில்லை. இனிமேல் பழசை மறக்கல, அப்படி நடந்துச்சு இப்படி நடந்துச்சு என்று மேடைகளில் பேசவே கூடாது," என்று கடுமையாக விமர்சித்தார்.
இயக்குனர் பேட்டி
தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு அவர் உதவி செய்யவில்லை சரி, அதை நான் விட்டுவிடுகிறேன். ஆனால் நாங்கள் ஆரம்ப காலத்தில் சுமார் 20 பேர் ஒன்றாக தங்கி வாய்ப்புக்காக போராடினோம். அந்த 20 பேரில் ஒருவருக்காவது சூரி உதவி செய்தாரா என்று கேட்டால் பதில் இல்லை. யாருக்கும் அவர் உதவி செய்யவில்லை. அவருடன் இருந்த நண்பர்களோ, அவருடைய படங்களில் நடித்தவர்களோ அடுத்த கட்டத்துக்கு போக அவர் முயற்சி எடுத்ததில்லை," என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "ஒவ்வொரு மேடையிலும் எங்களைப் பற்றி பேசுவார். ஆரம்ப கால கஷ்டங்களை நினைவுகூருவார். அதை பார்த்து மக்கள் அவர் பழைய நண்பர்களை மறக்காத நல்லவர் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் யாருக்கும் எந்த உதவியும் செய்ததில்லை. நண்பர்கள் முன்னேற வேண்டும் என்ற எண்ணமே இல்லை. ஆனால் மேடைகளில் மட்டும் பேசிக்கொண்டு நல்ல மனிதர் என்ற ஒரு இமேஜை உருவாக்கிக்கொள்கிறார்," என்று தெரிவித்தார்.
நடிகர் சூரி உதவி
மேலும் வெற்றிவீரன் தனது சொந்த அனுபவத்தையும் பகிர்ந்தார். "நானும் சூரியும் சேர்ந்து ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருந்தோம். அந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அளவுக்கு பேச்சுவார்த்தை சென்று, எல்லாமே ஓகே ஆகிவிட்டது. ஆனால் கடைசியில் அந்த படம் நடக்கவில்லை. இதைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில் சூரி பேசினார். அதைப் பார்த்து குறைந்தபட்சம் அவர் இந்த திட்டத்தை நினைவில் வைத்திருக்கிறார் என்று நான் மகிழ்ந்தேன்," என்று கூறினார்.
ஆனால் அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள்தான் தன்னை அதிர்ச்சியடைய வைத்ததாக வெற்றிவீரன் கூறினார். "ஒரு பெரிய நிறுவனம் இந்த கதையை புதிதாக தயாரிக்கலாம் என்று என்னை அணுகியது. அதற்காக தேவையான அனுமதிகளை எல்லோரிடமும் வாங்கிக் கொண்டேன். தயாரிப்பாளரிடமிருந்தும், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தும் எல்லாம் என்ஓசி வாங்கிவிட்டேன். ஆனால் சூரியிடமிருந்து மட்டும் அந்த கதைக்கான என்ஓசி கிடைக்கவில்லை. இதனால் அந்த திட்டமே அப்படியே நின்றுபோய்விட்டது," என்று ஆதங்கப்பட்டார்.
நடிகர் சூரி மீது குற்றச்சாட்டு
"இப்படி இருக்கும்போது அவர் எதற்காக எங்களைப் பற்றி மேடைகளில் பேச வேண்டும்? நாங்கள் நன்றாக இருக்கக்கூடாது, அடுத்த கட்டத்துக்கு போகக்கூடாது என்று நினைக்கிறாரா? ஆனால் எங்களைப் பற்றி பேசிக்கொண்டு அவர் மட்டும் நல்லவர் என்ற மாயையை உருவாக்கக் கூடாது," என்று வெற்றிவீரன் கடுமையாக விமர்சித்தார்.
இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. எப்போதும் எளிமையான மனிதர், நண்பர்களை மறக்காதவர் என்ற இமேஜில் இருக்கும் நடிகர் சூரி மீது இப்படியான குற்றச்சாட்டுகள் வந்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதே நேரத்தில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் சூரி தரப்பிலிருந்து என்ன விளக்கம் வருகிறது என்பதையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஒரே நாளில் ரவி மோகனின் குடும்ப பிரச்சனை, இப்போது சூரி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் என கோலிவுட் வட்டாரமே பரபரப்பில் மூழ்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications