Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடை தெரியாமலேயே விண்ணுலகம் போன உயிர்! அவிழாத சித்ராவின் மரண மர்மமுடிச்சு! போராடி தோற்ற பரிதாப அப்பா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை திருவான்மியூரில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. ஓய்வு பெற்ற போலீஸ்காரரான அவரது தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால், சித்ரா மறைவுக்கு பிறகு அந்த குடும்பம் சுக்குநூறாக நிலைகுலைந்துவிட்டது.

சின்னத்திரை சித்ராவின் இழப்பை இதுவரை அவரது ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. சித்ரா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஹேம்நாத்தை காதலித்து வருவதாக அறிவித்திருந்தார். பிறகு விஜய் டிவி நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் ரிசப்ஷன் ஒன்றையும் நடத்தி வைத்திருந்தார்கள். அதுபோல இந்த காதல் ஜோடி பதிவு திருமணம் செய்து கொண்டதாக சித்ராவின் நண்பர்கள் கூறியிருந்தனர்.

actress chitra serial actress chitra

திருமணம்: இறுதியில், கடந்த 2020-ம் டிசம்பர் மாதம், நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.. இந்த வழக்கு, திருவள்ளூர் மகளிர் சிறப்பு கோர்ட்டில் 3 ஆண்டுகளாக நடைபெற்றது.

சித்ராவின் அப்பா காமராஜ், தொடர்ந்து மனுக்களை தாக்கல் செய்தபடியே இருந்தார்.. அதில் ஒரு மனுவில், "சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டது. அதனால், ஹேம்நாத்தை சந்தேகிக்கிறோம்.. சீரியலில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் இருந்து தப்பிக்கவே தன்மீதான வழக்கை ரத்து செய்ய ஹேம்நாத் கோருகிறார்.. எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.

அரசியல்வாதி: அதுமட்டுமல்ல, பெரம்பலுாரில், ஒரு நிகழ்ச்சி திறப்பு விழாவுக்கு சித்ரா வந்தபோது, அப்போதைய அதிமுக எம்எல்ஏ ஒருவர் செய்த டார்ச்சர் தான் சித்ரா தற்கொலைக்கு காரணம் என்றும் இதில் பெரம்பலூர் அரசியல்வாதிக்கும், புதுக்கோட்டை மாஜி எம்எல்ஏவுக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவதால், முறைப்படி அரசின் ஒப்புதல் கிடைத்ததுமே விசாரணை நடைபெறும்" என்றெல்லாம் அரசியல் தளத்திலும் செய்திகள் எதிரொலித்தன.

தனது மகள் உயரத்திற்கு ஃபேனில் தூக்கு போட்டுக் கொள்ள முடியாது, சித்ராவின் கழுத்தில் நகக் கீறல்கள் இருந்தன என்பதே சித்ரா அம்மாவின் வாதமாக இருந்தது. ஆனால் சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. கழுத்திலிருந்த நகக் கீறல்கள் சித்ரா தூக்கிட்டு கொண்ட போது வலி தாங்க முடியாமல் அந்த கயிற்றை அவிழ்ப்பதற்காக முயற்சித்த போது ஏற்பட்ட காயங்கள் என்றும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

யூகங்கள்: இப்படி ஏராளமான சலசலப்புகள், புகார்கள், யூகங்கள், வதந்திகள் என அடுத்தடுத்து வெளிவந்து சித்ரா வழக்கை பரபரப்புக்குள்ளாக்கின.. இறுதியில், ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து திருவள்ளூர் கோர்ட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. ஹேம்நாத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேமநாத்தை விடுதலை செய்வதாக அறிவிக்கப்பட்டது..

இப்படியொரு தீர்ப்பு வெளியானதுமே ஹேம்நாத் கோர்டிலேயே கண்கலங்கி அழுதிருக்கிறார். ஆனால், இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ந்து போன சித்ரா அப்பா, ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து ஹைகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்தார்..

தற்கொலை: ஒவ்வொரு முறை கோர்ட்டுக்கு வரும்போதும், எப்படியாவது மகளுக்கு நீதி கிடைத்துவிடாதா? மகளின் மரணத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டு விட மாட்டார்களா? என்று ஏங்கி ஏங்கி காத்திருந்த நிலையில், இன்று திடீரென தற்கொலை முடிவை எடுத்துள்ளார். தன்னுடைய மகளின் துப்பட்டாவிலேயே தூக்கு போட்டு இறந்துள்ளதே அதற்கு சாட்சி.

நடிகை சித்ரா என்றில்லை.. அன்று முதல் இன்று வரை, திரையில் பார்த்தபோது நம் மனதில் கனவு கன்னிகளாக நின்றவர்கள், தேவதைகளாக ஒளிர்ந்தவர்கள், கண்ணிமைக்கும் நேரத்திலேயே தங்கள் முடிவை தேடி கொண்டதன் மர்மம் மட்டும் இதுவரை விலகியதே இல்லை.. சில்க் ஸ்மிதா முதல் சின்னத்திரை சித்ரா வரை இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது.

தற்கொலைகள்: உயிருக்கு உயிராக நேசிக்கும் தங்கள் ஆண் நண்பரிடம் ஏதோ ஒன்றை பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்து, கடைசியில் தற்கொலை என்ற ஆயுதங்களை கையில் எடுத்துவிடுகிறார்கள்.. சிலருக்கு நேரடியான காரணமாக இல்லாவிட்டாலும், மறைமுமாக அவர்களின் தற்கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளனர்.

எனினும், யாருமே கைதாகி சிறைக்கு சென்ற வரலாறே இல்லை.. மாறாக, அந்த நடிகைகளின் மட்டற்ற புகழையும், கணக்கிலடங்கா பணத்தையும், அந்த நடிகைகளுடன் சேர்த்தே அனுபவித்ததுடன், இப்போதுவரை சமுதாயத்தில் மிடுக்காக நடமாடி வருகிறார்கள்.

மர்மம் : கோழிக்கூவுது விஜி, படாபட் ஜெயலட்சுமி, மோனல் என பிரபலங்களின் தற்கொலைக்கு தூண்டியவர்கள் மட்டும் வெளிச்சத்துக்கு கடைசிவரை வரவில்லை.. இந்த தற்கொலைகளுக்கான மர்ம முடிச்சுகளும் இறுதிவரை அவிழ்க்கப்படுவதுமில்லை. மாறாக, காலப்போக்கில் அந்த நடிகைகளின் தற்கொலையே மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன.

"மறதி ஒரு தேசிய வியாதி" என்பது நடிகைகளின் உயிருக்கே உலை வைக்கும் சிலருக்கும் சாதகமாகி விடுகிறது. இதுதான் இன்று சித்ராவின் அப்பா உயிரையும் பறித்து கொண்டுபோயிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+