72 மணி நேரம் கெடு விதித்த டாக்டர்கள்! பிழைக்க வைத்த கடவுள்! உயிரை எடுத்த கொரோனா! நடிகை கவிதா கண்ணீர்
சென்னை: என் கணவர் பெரிய ஆபத்துல இருந்து மீண்டார். ஆனால் அவரை கொரோனா கொண்டு போய்விட்டதே என நடிகை கவிதா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார் நடிகை கவிதா. இவர் நாளைய தீர்ப்பு, அமராவதி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்துவிட்டு பின்னர் முன்னணி நடிகர்களுக்கு அம்மா வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்த கொரோனா எப்படி பலரது வாழ்க்கையை புரட்டி போட்டதோ அதே போல் கவிதாவின் வாழ்க்கையிலும் புயலாக வீசியது. இதுகுறித்து அவர் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில் எனக்கு திருமணமான போது என்னுடைய வீட்டிலிருந்து எதையும் எடுத்து வரவே கூடாது என எனது கணவர் சொல்லிவிட்டார். இதனால் நான் வெறும் கையுடன்தான் புகுந்த வீட்டிற்கு வந்தேன். 10 ஆண்டுகள் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தோம். ஒரு நாள் சிக்கன் கிரேவி சமைக்குமாறு என் கணவர் கூறினார்.
இதனால் நான் அதற்கான பணிகளை செய்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது பிள்ளைகள் அம்மா என கதறிக் கொண்டு சமையலறைக்கு வந்தனர். போய் பார்த்த போது என் கணவர் நிலைக்குலைந்து விழுந்து கிடந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாக சொன்னார்கள்.
அவர் 72 மணி நேரம் அதாவது 3 நாட்கள் மட்டுமே இருப்பார் என கெடு சொன்னார்கள். ஆனால் நான் மட்டும் அவருக்கு எதுவும் ஆகாது என மன தைரியத்துடன் இருந்தேன். ஆனால் மருத்துவர்களோ அவர் நிச்சயம் கோமாவுக்கு செல்வார் என்றார்கள். நான் மருத்துவமனையில் உட்கார்ந்தபடியே கடவுளிடம் சொன்னது இதுதான், கடவுளே நான் யாருக்காவது தெரிந்தோ தெரியாமலோ கெடுதல் செய்திருந்தால் நீ அவரை எடுத்துக்கொள், இல்லாவிட்டால் அவரை விட்டுவிட்டு என வேண்டினேன்.
8 நாட்கள் ஆனது. அப்போது செவிலியர் ஒருவர் வந்து மேடம் உங்கள் கணவர் கவி கவி என அழைக்கிறார் என்றார். உடனே ஓடி போய் பார்த்தேன். என் கணவர் பிழைத்துக் கொண்டார். ஆனால் அவருடைய வலது பக்கம் முழுவதும் முடங்கிவிட்டது. தண்ணீர் குடிக்க கூட அவரால் வலது கையை பயன்படுத்தவே முடியாத நிலை இருந்தது.
அவரை வலது கையை பயன்படுத்த நான் பயிற்சி கொடுத்து 35 நாட்களில் நல்லபடியாக குணமாகி உணவை அவரே சாப்பிட்டார். இப்படிப்பட்ட கொடூர தருணங்களில் எல்லாம் மீண்ட அவர் கொரோனா பரவலால் உயிரிழந்துவிட்டாரே என்பதுதான் எனக்குள்ள வருத்தம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications