புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள குஷ்பு! எந்த சேனலுடையது தெரியுமா? யாரெல்லாம் நடிக்கிறார்கள்?
சென்னை: நடிகை குஷ்பு புதிய சீரியலில் நடிக்க போகிறாராம். எந்த சேனலின் தொடர் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். குஷ்பு ஒரு சீரியலில் நடிக்கிறார் என்றாலே அந்த சீரியல் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
வெள்ளித்திரையில் கலக்கிய நடிகை ராதிகா, சின்னத்திரையிலும் வலம் வந்தார். அவரே பல முன்னணி நடிகைகள் பிற்காலத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடிக்கவும் தயாரிக்கவும் வழிகோலினார்.

சீரியலை தயாரிக்க ராதிகா ராடான் என்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். சித்தி, அண்ணாமலை உள்ளிட்ட சீரியல்களை தயாரித்து நடிக்கவும் செய்தார். அந்த வகையில் வெள்ளித்திரையில் 1990களில் கனவுக்கன்னியாக வலம் வந்த குஷ்புவும், அவ்னி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சீரியல்களை தயாரித்து நடித்து வருகிறார்.
இவர் நம்ம வீட்டு மகாலட்சுமி, நந்தினி ஆகிய சீரியல்களை தயாரித்துள்ளார். தென்னிந்திய மொழிகள், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமே 100 படங்களை தாண்டியுள்ளார். படங்களில் நடிப்பது தாண்டி சீரியல் நடிகை மட்டுமல்லாமல், ஜாக்பாட் நிகழ்ச்சியை ஜெயா டிவியில் தொகுப்பாளினியாகவும் இருந்தார்.
தற்போது குஷ்பு புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளார். டிடி தமிழ் தொலைக்காட்சியில் சரோஜினி என்ற தொடரில் நடிக்கவுள்ளார். இதற்கான பூஜையில் குஷ்பு கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் குஷ்புவை புதிய சீரியலில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
1988 ஆம் ஆண்டு ரஜினி- பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமானவர் குஷ்பு. தொடர்ந்து வருஷம் 16, வெற்றி விழா, சின்னத்தம்பி, நாட்டாமை, அண்ணாமலை உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிக்க வந்த 10 ஆண்டுகளில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
2010 ஆம் ஆண்டு முதல் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் பயணித்த அவர் தற்போது பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். அவரது துணிச்சலுக்கு பரிசாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கிடைத்தது. எனினும் அவர் தீவிர அரசியலில் இறங்க அந்த பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார்.
இவர் 1995ஆம் ஆண்டு சின்ன சின்ன ஆசை உறவு என்ற சீரியலை இயக்கியிருந்தார். அதன் பிறகு மருமகள், கல்கி, லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். கடைசியாக 2022 ஆம் ஆண்டு மீரா என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கான கதையையும் குஷ்புவே எழுதியிருந்தார்.
புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சரோஜினி சீரியலானது எந்த மாதிரியான கதை, குஷ்புவுக்கு என்ன கேரக்டர், யார் இயக்குநர், குஷ்புவுடன் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications