Bharathiraja: பாரதிராஜா உடலை பார்த்து சிவகுமார் பேசிய வார்த்தை.. கண்கலங்க வைத்த காட்சி
சென்னை: தமிழ் சினிமாவின் பொற்காலத்தை உருவாக்கிய ஜாம்பவான்கள் ஒருவருக்கொருவர் காலத்தின் கரங்களில் கரைந்து செல்லும் நிலையில், அந்த பட்டியலில் இன்று இணைந்திருப்பது இயக்குநர் இமயம் பாரதிராஜா. இந்த செய்தி வெளியாகிய தருணத்திலிருந்து ஒட்டுமொத்த திரையுலகமும் கண்ணீரில் மூழ்கியுள்ளது.
கிராமத்து மண்வாசனையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற கலைஞன், "என் இனிய தமிழ் மக்களே" என்று ரசிகர்களை பாசத்துடன் அழைத்த மனிதர், இன்று நம்மிடையே இல்லை என்ற உண்மையை ஏற்க முடியாமல் ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் தவித்து வருகின்றனர்.

மகன் மனோஜ் மறைவு
பாரதிராஜாவை நெருக்கமாக அறிந்தவர்கள் சொல்வது ஒன்று தான். கடந்த ஆண்டு மகன் மனோஜ் பாரதிராஜாவின் மறைவு அவரை உள்ளுக்குள் முற்றிலும் நொறுக்கிவிட்டது. வெளியில் விழாக்களில் சிரித்த முகத்துடன் தோன்றினாலும், உள்ளுக்குள் அந்த வலி அவரை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கரைத்துக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. மகனின் இழப்பை தாங்க முடியாமல் மனதளவிலும், உடலளவிலும் பலவீனமடைந்த அவர், இறுதியில் காலத்தின் அழைப்பை ஏற்றுக்கொண்டார்.
இறுதி வரை போராடிய குடும்பம்
நேற்று நள்ளிரவு முதல் பாரதிராஜாவின் உடல்நிலை மிகவும் மோசமானதாக மாறியதாக கூறப்படுகிறது. அதிகாலை வரை அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தினர் போராடினர். மருத்துவர்கள் ஆலோசனையுடன் வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அதிகாலை அவர் உயிரிழந்தார். இந்த செய்தி வெளியாகியதும் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலை பரவியது.
முதலமைச்சர் விஜய் முதல் பலர் வரை
நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீடு, முதலமைச்சர் விஜய்யின் இல்லத்திற்கு எதிரில் இருப்பதால், செய்தி அறிந்த உடனே விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் சீமான், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் அங்கு வந்து பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

சிவகுமார் உருக்கம்
அஞ்சலி செலுத்த வந்தவர்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்தது நடிகர் சிவகுமாரின் வருகை. 84 வயதிலும் தனது மகன் சூர்யா மற்றும் மருமகள் ஜோதிகாவுடன் வந்த சிவகுமார், பாரதிராஜாவின் உடல் அருகே சில நிமிடங்கள் அமைதியாக நின்றார். பின்னர் அவருடன் பேசுவது போல ஏதோ சில வார்த்தைகளை உருக்கமாக கூறியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பல தசாப்தங்களாக நீடித்த நட்பு, எண்ணற்ற நினைவுகள், சினிமா பயணங்கள் என அனைத்தும் அந்த சில நிமிடங்களில் அவரது கண்முன்னே ஓடியதாகவே தோன்றியது. அந்த காட்சிகளை பார்த்த பலரின் கண்களும் கலங்கின.
மாலை அணிவித்து வணங்கிய சூர்யா
தந்தையுடன் வந்த நடிகர் சூர்யா, பாரதிராஜாவின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கிய ஒரு கலைஞனுக்கு அமைதியாக தலைவணங்கிய சூர்யாவின் அந்த தருணமும் ரசிகர்களை நெகிழச் செய்தது. அஞ்சலி செலுத்திய பின்னர் ராதிகா சரத்குமார், சீமான் உள்ளிட்டோருடன் சில நிமிடங்கள் உரையாடிய அவர்கள், கனத்த மனதுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஒரு சகாப்தம்
'16 வயதினிலே', 'முதல் மரியாதை', 'கிழக்கே போகும் ரயில்', 'அலைகள் ஓய்வதில்லை', 'கருத்தம்மா' என காலத்தை வென்ற படைப்புகளை கொடுத்த பாரதிராஜா, வெறும் இயக்குநர் அல்ல.
தமிழ் சினிமாவை ஸ்டூடியோ சுவர்களில் இருந்து கிராமத்து மண் பாதைகளுக்கு அழைத்துச் சென்ற புரட்சியாளர். இன்று அவர் உடல் மண்ணோடு கலந்தாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், பாடல்களும், காட்சிகளும், "என் இனிய தமிழ் மக்களே" என்ற அவரது குரலும் தமிழ் மக்களின் இதயங்களில் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.












Click it and Unblock the Notifications