நாங்க தான் அப்பவே சொன்னோம்ல..!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் தீயசக்திகள் இருப்பதாக மும்தாஜ் இப்போது தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த மாதமே இது குறித்து நாம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளோம்.
பிக்பாஸ் சீசன் 2விற்காக சென்னை பூந்தமல்லி அருகே ஈவிபி பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட வீடு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முறையும் இதே இடத்தில் தான் பிக்பாஸ் வீடு அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த முறையைக் காட்டிலும் இம்முறை பிக்பாஸ் வீட்டில் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளனர்.
சீசன் 2 ஆரம்பிப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களை அழைத்து போட்டியாளர்கள் தங்கப் போகும் வீட்டை காண்பித்தார்கள். அப்போது அங்கு கிடைத்த தகவலின்படி, அவ்வீடு வாஸ்துப்படி உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
அப்பவே சொன்னோம்ல:
கூடவே, தீயசக்திகள் அவ்வீட்டை நெருங்காமலிருக்க, அங்கு தாயத்து, தகடு போன்றவை புதைக்கப்பட்டிருப்பதாகவும் காது வழிச் செய்தி கிடைத்தது. இது குறித்து அப்போதே நாம் செய்தியும் வெளியிட்டோம்.
பிக்பாஸ் 2: பேய், பிசாசு எல்லாம் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
பேயைப் பார்த்த மும்தாஜ்:
இந்நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு அவ்வீட்டில் பெண்கள் தங்கும் அறைப் பகுதியில் தீயசக்தி இருப்பதாக போட்டியாளர்களின் ஒருவரான மும்தாஜ் கூறியதாகத் தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் நமக்குக் காட்டப்படவில்லை. ஆனால், மும்தாஜும், ரித்விகாவும் இது குறித்துப் பேசியதை பாலாஜி, டேனியிடம் கூறினார்.
ரகசிய டாஸ்கா?
நிஜமாகவே மும்தாஜ் பேயைப் பார்த்தாரா அல்லது நடிப்பா என்பது குறித்தும் அவர் சந்தேகம் எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ஏற்கனவே தண்ணீர் டாஸ்கின் போது, மற்ற போட்டியாளர்களுக்குத் தெரியாமல் அவர் ரகசிய டாஸ்க் ஒன்றில் பங்கேற்றிருந்தார்.
பேய்:
இதேபோல், கடந்த முறையும் போட்டியாளர்களுக்கு பேய் டாஸ்க் ஒன்று அளிக்கப்பட்டது. அதேபோல், இம்முறையும் தரப்படலாம் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எது எப்படியோ நிச்சயம் பிக் பாஸ் சீசன் 2வில் இப்படி ஒரு பேய்க் காட்சி வரும் என நாம் முன்பே சொல்லி இருந்தது இங்கே நினைவுக் கூரத்தக்கது.