பிக் பாஸ் ஸ்கிரிப்டட்! உள்ளே நடந்த விஷயங்கள் இதுதான்.. ஓபனாக பேசிய பிரவீன் காந்தி! உடைந்த ரகசியம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, அதன் சர்ச்சைகளுக்காகவே அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் அதிகமாகக் கிளம்பியுள்ள நிலையில், த.வா.க கட்சியின் தலைவர் வேல்முருகன் போன்றோர் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பரபரப்புக்கு மத்தியில், நிகழ்ச்சி தொடங்கி ஒரே வாரத்தில் வெளியேற்றப்பட்ட இயக்குநரும் நடிகருமான பிரவீன் காந்தி, பிக் பாஸ் குறித்துப் பேசியிருக்கும் தகவல்கள் பெரிய கிண்டலை உருவாக்கியுள்ளன!
பிரவீன் காந்தி திரைப் பயணமும் சர்ச்சையும்
நடிகரும், இயக்குநருமான பிரவீன் காந்தி, தமிழ் சினிமாவில் 90-களில் இருந்து அறியப்பட்டவர். இவர்,ரட்சகன், ஜோடி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆனால் அந்த படம் வணிக ரீதியில் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இப்படி, ஒரு இயக்குநர் மற்றும் நடிகர் என்ற அடையாளத்துடன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தவர், வெறும் ஒரு வாரத்திலேயே வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

வேண்டாம்னு தடுத்துட்டேன்
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்குப் பிரவீன் காந்தி அளித்த பேட்டியில், தன் வெளியேற்றம் குறித்து மிகவும் வித்தியாசமான மற்றும் கிண்டலுக்குரிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்:
"நான் வெளியில் வந்தவுடன், என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன பேச வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்" என்று கூறிய பிரவீன் காந்தி, தான் வெளியேறும்போது கட்டிப்பிடிக்க வந்தவர்களை 'வேண்டாம்' என்று தடுத்து நிறுத்திவிட்டாராம். ஏனென்றால், "அவர்கள் நான் தோற்றுவிட்டேன் என்பதைச் சொல்லும் வகையில் சிம்பத்தியை உருவாக்க வந்தார்கள். அது எனக்குத் தேவையில்லை" என்று கூறியுள்ளார்.
பாசிட்டிவ் பேச்சுதான் தேவை
"என்னை பற்றி பாசிட்டிவாகத்தான் பேச வேண்டும். அதனால்தான் அவர்களை அப்படியே இருங்கள், வேண்டாம் என்று சொன்னேன்" என்றும் அவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
ஒரு வாரத்தில் வெளியேறியது குறித்துப் பேசிய அவர், அதுவும் ஒரு எழுதப்பட்ட நிகழ்வுதான் என்றும், எந்தத் தவறையும் அவர் செய்யவில்லை என்றும் கூறியிருப்பதுதான் பெரிய கிண்டலுக்குள்ளாகியுள்ளது. "நான் வாய்ப்பைத் தவற விட்டுவிட்டேன் என்று பலர் நினைக்கலாம். ஆனால் என்ன எழுதப்பட்டதோ அதுதான் நடந்தது".
"நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர வேண்டும், ஒரு வாரத்தில் வெளியில் போக வேண்டும் என்பதும், போகும்போது விஜய் சேதுபதியிடம் நான் 'ஸ்பேஸ்' என்று சொன்னது என அனைத்துமே எழுதப்பட்டது" என்று கூறியுள்ளார்.
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்துப் பேசிய அவர், "பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் கூத்தாடிகள் இருக்கும் இடம், பொழுதுபோக்கு அதிகம் உள்ள நிகழ்ச்சி, இதில் பாதி ஸ்கிரிப்ட் தான்" என்று கூறியுள்ளார். "ஆனாலும், நான் உள்ளே போன பிறகுதான் நம்புனேன், அனைத்துமே உண்மைதான். மக்கள் பார்க்க வேண்டும் என்பதால் செய்கிறார்கள்" என்றும் அவர் முரண்பாடாகப் பேசியிருப்பது, நிகழ்ச்சியின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
அவர் என்னதான் 'எழுதப்பட்ட விதி' என்று சொன்னாலும், வெறும் ஒரு வாரத்தில் வெளியேறிவிட்டு, அதற்கான அத்தனை நியாயங்களையும் அவர் அடுக்கியது, சமூக வலைதளங்களில் பெரிய கிண்டலைக் கிளப்பியுள்ளது. "அடுத்து நான் ஒரு பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தால் இது (வெளியேறியது) மறந்துவிடும்" என்று அவர் அளித்திருக்கும் விளக்கம் தான், இந்தக் களேபரத்திற்குக் கிடைத்த ஒரே ஆறுதல்!
இந்த 'ஸ்பேஸ்' விளக்கம், பிரவீன் காந்தியை மீண்டும் பெரிய படங்களுக்குத் திரும்பி வர வைக்குமா? இல்லைன்னா, 'எழுதப்பட்ட விதியில்' இதுவும் ஒரு பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?












Click it and Unblock the Notifications