பிக்பாஸ் 9-வது சீசனில் நானும் போறேன்! ஒன்பதாவது போட்டியாளர் நான்தான்! மொத்த ரகசியத்தையும் உளறிய நடிகை!
சென்னை: தொகுத்து வழங்குபவர் முதல் போட்டியாளர்கள் வரை, எப்போதுமே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள இந்த சீசனில், தான் ஒரு போட்டியாளராகப் பங்கேற்க இருப்பதாக நடிகை தேஜூ அஸ்வினி உறுதி செய்துள்ளார். இது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் 9 விஜய் சேதுபதி
தமிழ் சின்னத்திரையில் கடந்த சில ஆண்டுகளாக, பிக்பாஸ் நிகழ்ச்சிக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு மிகப் பெரியது. 2017-ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, 8 சீசன்களை நிறைவு செய்துள்ளது. முதல் ஏழு சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்க, 8-வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கமல்ஹாசனின் பாணியிலிருந்து மாறுபட்ட விஜய் சேதுபதியின் தொகுப்பு முறைக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், வரும் அக்டோபர் முதல் வாரத்தில் பிக்பாஸ் 9 தொடங்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்கவுள்ளார் என்பது, ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
தேஜூ அஸ்வினி
நடிகை தேஜூ அஸ்வினி, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர். இவர் இக்லோ மற்றும் பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் நடிப்பில் வெளியான என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெளியான பிளாக்மெயில் திரைப்படத்திலும் தேஜூ நடித்திருக்கிறார்.
தேஜூவின் மனம் திறந்த பேட்டி
தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் தான் ஒரு போட்டியாளராகப் பங்கேற்க உள்ளதாகத் தேஜூ அஸ்வினி உறுதி செய்தார். அவர், "பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்கேற்க இருக்கிறேன். 9-வது போட்டியாளராக உள்ளே போக இருக்கிறேன். ஆனால், என்ன காஸ்டியூம் என்பது குறித்து எனது ஸ்டைலிஸ்ட் தான் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் தனது எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துள்ளார். "நான் அங்கே கண்டிப்பாக நான் நடித்த சில பாடல்களுக்கு நடனம் ஆடுவேன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டிப்பாக நான் 10 நாட்கள் இருப்பேன். இது ஒரு அனுபவமாக இருக்கும். 10 நாட்கள் இருந்து அங்கே என்னதான் இருக்கிறது என்பதை ஃபுல்லா பார்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
அவர் பிக்பாஸ் அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், "பிக்பாஸ் வீட்டுக்குள் போய்விட்டால், செல்போனிடம் இருந்து விலகி இருப்பேன். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாது. வெளியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டாம். ஜாலியா மல்லாக்க படுத்துக்கொண்டு யோசிக்கலாம். இந்த மாதிரி ஒரு டைம் கிடைக்காது" என்று தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவுடன், தொகுப்பாளர் விஜய் சேதுபதியிடம் "எப்படி இருக்கீங்க சார்? என்னை ஞாபகம் இருக்கிறதா?" என்று கேட்பேன் என்றும், தனது பிறந்தநாள் 14-ஆம் தேதி என்பதால் 14-வது போட்டியாளராக இருக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேஜூ அஸ்வினியைத் தொடர்ந்து, இந்த சீசனில் வேறு யார் யார் போட்டியாளர்களாகக் களமிறங்குவார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு, வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications