Captain Prabhakaran: தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு! 'கேப்டன் பிரபாகரன்' 7 நாளில் எவ்வளவு வசூல்?
சென்னை: 'கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் 7 நாட்கள் வசூல் என்ன என்பதை பார்க்கலாம். 2கே கிட்ஸ் எல்லாம் தியேட்டருக்கு வந்து விஜயகாந்தின் இந்த 100ஆவது படத்தை பார்த்து ரசிக்கிறார்கள்.
விஜயகாந்த், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், எம்.என். நம்பியார், லிவிங்ஸ்டன், காந்திமதி, பீலிசிவம், மன்சூர் அலிகான், பொன்னம்பலம், எல்ஐசி நரசிம்மன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இது 1991 ஆம் ஆண்டு வெளியானது. கேப்டன் விஜயகாந்துக்கு 100 ஆவது படம். இந்த படத்திற்கு பிறகுதான் விஜயகாந்த் "கேப்டன்" என அழைக்கப்பட்டார்.

கூலி, வார் 2 உள்ளிட்ட படங்களில் கடந்த 14 ஆம் தேதி ரிலீஸான நிலையில், விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி கடந்த 22 ஆம் தேதி "கேப்டன் பிரபாகரன்" ரீ ரிலீஸானது. இந்த படம் ரிலீஸான முதல் நாள் 42 லட்சத்தையும் 2ஆவது நாள் 86 லட்சத்தையும் 3ஆவது நாள் ரூ 1.30 கோடியையும் குவித்தது.
இதையடுத்து 4ஆம் நாள் ரூ 1.96 கோடியையும் 5ஆம் நாளில் 2.2 கோடியையும் குவித்துள்ளது. பிறகு 6ஆவது நாள் 2.5 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இதுவரை 9.24 கோடி வசூலை பெற்ற நிலையில் தற்போது 7-ஆவது நாளில் ரூ 2.8 கோடி வசூலை பெற்றது. மொத்தமாக நேற்று வரை 12.04 கோடி ரூபாய் வசூலை படைத்துள்ளது.
ரஜினி, கமலுக்கு இணையாக ரசிகர்கள் கூட்டத்தை தனக்கென்று வைத்திருந்தவர். தற்போதும் விஜயகாந்திற்கு தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். "கேப்டன் பிரபாகரன்" திரையிட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக உள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பனை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
2கே கிட்ஸ் தியேட்டருக்கு வந்து விஜயகாந்தின் நடிப்பையும், அவரது தமிழ் உச்சரிப்பையும், அனல் தெறிக்கும் வசனங்களையும், பார்த்து வாயடைத்து போயுள்ளனர். ரஜினியின் 100ஆவது படம் 'ஸ்ரீராகவேந்திரா', கமலின் 'ராஜபார்வை' உள்ளிட்ட படங்கள் அப்போது வெளியாகியிருந்தது. அந்த இரு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் விஜயகாந்தின் 100 ஆவது படம் 'கேப்டன் பிரபாகரன்' 250 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆரின் 100ஆவது படமான 'ஒளி விளக்கு', சிவாஜியின் 100ஆவது படமான 'நவராத்திரி' ஆகியோருக்கு பிறகு விஜயகாந்திற்குத்தான் 100 ஆவது படம் வசூல் அளவில் கை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "ஆட்டமா தேரோட்டமா", "பாசமுள்ள பாண்டியரே" ஆகிய இரு பாடல்கள் மட்டுமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் இரு பாடல்களுக்கும் ரசிகர்கள் திரையரங்குகளில் நடனம் ஆடி மகிழ்கிறார்கள்.
35 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்த படம் வசூலை குவித்து வருகிறது. லியாகத் அலிகானின் வசனங்களும், மன்சூர் அலிகான் வரும் போது இளையராஜாவின் பிஜிஎம்மும் இந்த படத்தை தூக்கி நிறுத்திவிட்டன. "கேப்டன் பிரபாகரன் 2" என்ற படத்தை விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து எடுக்கவுள்ளதாக இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications