Captain Prabhakaran: கேப்டன் பிரபாகரன்! டெய்லி ரூ 2 கோடி அள்ளும் விஜயகாந்த் படம்
சென்னை: 'கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தின் 9 நாட்கள் வசூல் என்ன என்பதை பார்க்கலாம். விஜயகாந்த் மறைந்த போதிலும் அவருடைய படத்தை பார்க்க ரசிகர்கள் அலைக்கடலென திரண்டு வருவதை பார்க்கும்போது அவர் எப்படி வாழ்ந்திருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
விஜயகாந்த், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், எம்.என். நம்பியார், லிவிங்ஸ்டன், காந்திமதி, பீலிசிவம், மன்சூர் அலிகான், பொன்னம்பலம், எல்ஐசி நரசிம்மன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இது 1991 ஆம் ஆண்டு வெளியானது. கேப்டன் விஜயகாந்துக்கு 100 ஆவது படம். இந்த படத்திற்கு பிறகுதான் விஜயகாந்த் "கேப்டன்" என அழைக்கப்பட்டார்.

விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி கடந்த 22 ஆம் தேதி "கேப்டன் பிரபாகரன்" ரீ ரிலீஸானது. இந்த படம் ரிலீஸான முதல் நாள் 42 லட்சத்தையும் 2ஆவது நாள் 86 லட்சத்தையும் 3ஆவது நாள் ரூ 1.30 கோடியையும் குவித்தது. இதையடுத்து 4ஆம் நாள் ரூ 1.96 கோடியையும் 5ஆம் நாளில் 2.2 கோடியையும் குவித்துள்ளது. பிறகு 6ஆவது நாள் 2.5 கோடி ரூபாய் வசூலை பெற்றது. இதுவரை 9.24 கோடி வசூலை பெற்ற நிலையில் தற்போது 7-ஆவது நாளில் ரூ 2.8 கோடி வசூலை பெற்றது. மொத்தமாக 7 ஆவது நாள் வரை (ஆகஸ்ட் 29) 12.04 கோடி ரூபாய் வசூலை படைத்துள்ளது. கடந்த 30ஆம் தேதி வரை மொத்தமாக இந்த படம் 15 கோடியை வசூலித்துள்ளது. 9ஆம் நாளில் ரூ 1.5 கோடி வசூலை பெற்றது. கடந்த 5 நாட்களாக கேப்டன் பிரபாகரன் ரூ 12 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. அதிலும் தினமும் ரூ 2 கோடியை அள்ளிவிடுகிறது.
ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "ஆட்டமா தேரோட்டமா", "பாசமுள்ள பாண்டியரே" ஆகிய இரு பாடல்கள் மட்டுமே இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் இரு பாடல்களுக்கும் ரசிகர்கள் திரையரங்குகளில் நடனம் ஆடி மகிழ்கிறார்கள்.
35 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான இந்த படம் வசூலை குவித்து வருகிறது. லியாகத் அலிகானின் வசனங்களும், மன்சூர் அலிகான் வரும் போது இளையராஜாவின் பிஜிஎம்மும் இந்த படத்தை தூக்கி நிறுத்திவிட்டன.
விஜயகாந்தை வைத்து ஹாலிவுட் தரத்திற்கு ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை ராவுத்தருக்கு இருந்ததாம். அந்த ஆசைதான் "கேப்டன் பிரபாகரனாக" வந்தது என்கிறார்கள். ஆர்.கே.செல்வமணியின் "புலன் விசாரணை" வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரிடம் கேப்டன் பிரபாகரனும் ஒப்படைக்கப்பட்டது.
இந்த படம் கேரளாவையொட்டியுள்ள காடுகளில் பல நாட்கள் சூட்டிங் நடத்தி எடுக்கப்பட்டதாம். இதனால் படக்குழுவினருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு அவற்றை எல்லாம் ஒரு வழியாக சமாளித்து இந்த படம் எடுக்கப்பட்டதாம்.












Click it and Unblock the Notifications