கோவை சிறுமி கொலை விவகாரத்தில் வித்தியாசமாக பேசிய சேரன்... கிளம்பிய புதிய விவாதம்
சென்னை: கோவை சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பொதுமக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வரை பலரும் தங்களது கோபத்தையும் துயரத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

சேரன் கருத்து
இந்த விவகாரத்தில் பெரும்பாலானோர் ஆட்சியையும் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்தையும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இயக்குநர் சேரன் மட்டும் சற்றே வித்தியாசமான கோணத்தில் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
சமூக பிரச்னைகள் குறித்து நேரடியாக கருத்து தெரிவிப்பதில் பெயர் பெற்ற சேரன், இந்த முறை ஆட்சியை நேரடியாக குறை சொல்லும் அணுகுமுறையையே கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சேரன் x பதிவு
அவரது எக்ஸ் பதிவில், "நல்லா யோசிக்கத் தெரிந்தவர்கள் ஆட்சியை குறை சொல்லமாட்டார்கள்... யார் ஆட்சியாக இருந்தாலும்" என்று ஆரம்பித்திருக்கிறார்.
அதன்பிறகு இந்த குற்றங்களின் மூல காரணம் என்ன என்பதை தான் முதலில் ஆராய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
"மதுவும் போதையும் தான் இதன் முக்கிய காரணங்கள். அதோடு மக்களின் அஜாக்கிரதை, குழந்தைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள ஆபத்துகள், கடுமையான சட்டமின்மை ஆகியவையும் இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதல்வருக்கு சப்போர்ட்
மேலும், "இதில் ஆட்சியும் காவல்துறையும் மட்டும் என்ன செய்ய முடியும்? எல்லா வீட்டின் வாசலிலும் காவலரை நிறுத்த முடியுமா?" என்று நேரடியான கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
அவரது பதிவின் மைய கருத்து என்னவென்றால், மக்கள் முதல்வரிடம் வைக்க வேண்டிய கோரிக்கை ஆட்சியை திட்டுவது அல்ல; மாறாக கடுமையான சட்டங்களை அமல்படுத்த வேண்டும், போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பதுதான்.
சேரன் தனது பதிவில் இதை குறிப்பிட்டே, "இது திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என எல்லா ஆட்சிகளுக்கும் பொருந்தும்" என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
சீமான் கருத்து
இந்த கருத்து வெளியாகியிருக்கும் நேரத்திலேயே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
"பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உறுதி செய்ய முடியாத ஒரு நாடு, நாடே அல்ல... அது சுடுகாடு" என்று சீமான் காட்டமாக விமர்சித்திருந்தார். இந்த இரண்டு கருத்துகளுக்கும் நடுவே இணையத்தில் புதிய விவாதம் உருவாகியுள்ளது.
ஒரு இணையவாசி, "இதையே தான் ஒவ்வொரு முறையும் சொல்றோம்... எத்தனை குழந்தைகளை இழக்கணும்?" என்று பதிவிட்டு சீமான், சேரன் இருவரையும் டேக் செய்திருந்தார். அதற்குத்தான் சேரன் தனது விரிவான விளக்கத்தை மீண்டும் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் கோவை சிறுமி கொலை வழக்கில் போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குடும்பத்துக்கு பழக்கமான கார்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவியதாக மோகன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் சமூக பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, போதை கலாச்சாரம் என பல கோணங்களில் தமிழ்நாட்டில் பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இப்போது இணையத்தில் எழும் கேள்வி ஒன்றுதான் - இதுபோன்ற கொடூரங்களுக்கு ஆட்சியா காரணம்? சமூகமா காரணம்? இல்லை இரண்டுமே காரணமா? என்பதுதான்.













Click it and Unblock the Notifications