விஜய் என்னோடு இருந்தால் நான் தான் நம்பர் 1 - ஒரு ஆல்பம் போட்டா மியூசிக் டைரக்டரா? இசையமைப்பாளர் பரணி ஆதங்கம்!
சென்னை: தமிழ் சினிமாவில் காதுகளுக்கு தேன் சொட்டும் தேனிசை பாடல்களைக் கொடுத்தும், தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார் அண்டர்ரேடட் இசையமைப்பாளர்களில் ஒருவரான பரணி. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆரம்ப காலங்களில் பல ஹிட் பாடல்களைக் கொடுத்து தமிழக மக்களிடையே கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக உருவெடுத்த பரணி, காலப்போக்கில் அடையாளம் தெரியாமல் போனது திரைத்துறையில் பலருக்கும் ஒரு கேள்வியாகவே இருந்தது. இவ்வளவு அருமையான பாடல்களைக் கொடுத்தும், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் வரிசையில் வர வேண்டிய இவர் காணாமல் போனதற்கான காரணத்தை அவரே ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.

பரணி இசையமைத்த ஹிட் பாடல்கள்
பரணியின் இசைப் பயணத்தில் பல ஹிட் பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் இடம்பெற்ற "மேகமாய் வந்து போகிறேன்", "இன்னிசை மழை",'பகவதி' படத்தில் "சின்ன மச்சான்", "கண்களே கண்களே" 'சமுத்திரம்'படத்தில் "தேவதை ஒரு பாதி", 'வல்லரசு' படத்தில் "மாலை என் வேதனை", 'யூத்' படத்தில் "சந்தோஷம் சந்தோஷம்" போன்ற பல பாடல்கள் இவரின் இசைத் திறமைக்குச் சான்றாக அமைந்து, பெரும் வரவேற்பைப் பெற்றன.
பரணி ஆதங்கம்
தான் காணாமல் போனதற்கான காரணம் குறித்துப் பேசிய இசையமைப்பாளர் பரணி, இன்றைய சினிமாவின் எதார்த்த நிலையை வெளிப்படுத்தினார். "இன்றைய இளசுகளின் இதயத்தைப் பிடிப்பதற்கு இளம் இசையமைப்பாளரின் வருகை அதிகரித்துள்ளது. இன்று எனக்கும் 50 வயதைக் கடந்தாலும், நானும் 20 வயது இளைஞனைப் போல இன்னும் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறேன். இன்றைய இளசுகளின் இதயங்களை வெல்ல என்னிடமும் பாட்டுகள் கம்போஸ் செய்து தயாராக இருக்கிறது," என்று தனது இசை மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், "இன்று ரகுமான், அனிருத் என்ன மியூசிக்கல் சிஸ்டம்ஸ் வைத்திருக்கிறார்களோ அதைத்தான் நானும் வைத்துள்ளேன். சிஸ்டமில் மாற்றம் இல்லை. சினிமா மார்க்கெட் யாருக்கு இருக்கிறது என்பதில் தான் இருக்கிறது. எனக்கு ஒரு பேக்ரவுண்ட் இருந்தால், உதாரணத்துக்கு விஜய் என்னிடம் இருந்தால், இன்று நான் தான் நம்பர் ஒன் இசையமைப்பாளர். யாராவது ஒரு நடிகர் என் பேக்ரவுண்டில் இருக்க வேண்டும்," என்று தனது ஆதங்கத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தார்.
"தனியாக ஒரு பாடலை உருவாக்கி ஹிட்டுக் கொடுப்பதில் ஒரு மேட்டரே இல்லை. ஆனால் மார்க்கெட்டில் நான் தெரிய வேண்டும் என்றால் அதற்கு ஒரு நடிகரின் உதவி எனக்கு தேவைப்படுகிறது. இன்னைக்கு ஒரு ஆல்பம் ஹிட்டு கொடுத்துட்டா சினிமாவில் ஜெயித்து விட முடியாது. அந்த பிளேஸ்மெண்ட் வேற," என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்றைய இசையமைப்பாளர்கள்
கஷ்டப்பட்டு வாய்ப்பு பெற்ற தனது ஆரம்பகாலப் போராட்டங்களை நினைவுகூர்ந்த பரணி, இன்றைய இசையமைப்பாளர்களின் அணுகுமுறை குறித்தும் கருத்துத் தெரிவித்தார். "நான் கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து மியூசிக் டைரக்டர் வாய்ப்பு பெற்றேன். இன்னைக்கு ஒரு ஆல்பம் செய்து ஒரு படம் பெற்று விடலாம் என்று பலர் நினைக்கிறார்கள். படம் கிடைத்தப்பிறகு அது அவ்வளவு சுலபம் கிடையாது. அதையும் மீறி ஜெயித்தால் அதைவிட சந்தோஷம் எனக்கு இல்லை," என்று இன்றைய கால இசையமைப்பாளர்களின் வரவை விமர்சித்துள்ளார்.
பரணியின் இந்தப் பேட்டி, திறமையான கலைஞர்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைப்பதில் திரைத்துறையில் உள்ள சவால்களையும், ஒரு கலைஞனின் திறமையை விட 'மார்க்கெட்' செல்வாக்கே சில சமயங்களில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பரணியின் ஆதங்கம், அவருக்கு மட்டுமல்லாமல், பல அண்டர்ரேடட் கலைஞர்களின் குரலாகவும் ஒலிக்கிறது.












Click it and Unblock the Notifications