மார்க்கபந்து... மாது, சீனு, மைதிலி, ஜானகி.. எல்லோரையும் அனாதையாக்கி விட்டார் கிரேஸி!
சென்னை: மறக்க முடியாத நகைச்சுவை கலைஞர் கிரேசி மோகன். இந்தியன் பார்த்தசாரதி... வசூல் ராஜா எம்பிபிஎஸ் மார்க்க பந்து இப்படி பலரை நம் முன்பு உலவவிட்டு தான் உலகை விட்டு பிரிந்து விட்டார் நம் கிரேசி.
மாது சீனு, ஜானகி, மைதிலி இந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரம்மாவை கர்மா விட்டு வைக்கவில்லை.
கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய குடும்பத்தில் வாழ்ந்தவர் கிரேசி மோகன். வீடு முழுக்க மனிதர்கள் என்று நிரம்பிய நிலையில்தான் தனிக் குடித்தனம் என்கிற கான்செப்ட் அவங்க வீட்டுக்குள் வந்தது. இதை அவரே நகைச்சுவையாக ஒரு முறை சொல்லி இருக்கார்.
கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்!
மறக்க முடியாத தீபாவளி, அதோடு நகைச்சுவை தீபாவளின்னு எதாவது இருக்குமா என்று கேட்டபோது சிரித்துக் கொண்டே ஒரு நிகழ்வை சொன்னார்.
டிரவுசர் போட்டு இருந்த காலத்தில், தீபாவளிக்கு ராக்கெட் விட ஆசைப்பட்டேன். ஒரு பாட்டிலில் வச்சு விட்டேன். எதிர்த்தாப்ல மாடி மேல ஒரு டென்ட் கொட்டகை போட்டுக்கிட்டு மாமா ஒருத்தர் இருந்தார்.
நான் விட்ட ராக்கெட் அவர் வீட்டு கூரையில் விழுந்து தீ பத்திக்கிச்சு. நான் உள்ளே ஒடி வந்துட்டேன். ரொம்ப நாளா ராக்கெட் விட்டவன் எவனா இருக்கும்டான்னு என்னண்ட கேட்டுகிட்டே இருப்பார். நானும் பதில் சொல்லவே இல்லை.
இன்றைய வரைக்கும் தெரியாது. ஒரு வேளை இதை படிச்சு தெரிஞ்சுக்கிட்டா உண்டுன்னு சொல்லி சிரித்தார். இயல்பான எளிமையான இந்த நகைச்சுவை கலைஞனின் எந்த நகைச்சுவையை சொல்வது, எதை விடுவது?
இவரது நாடகங்களில் வரும் மைதிலி, ஜானகி, சீனு, மாது கேரக்டர்கள் கிட்டத்தட்ட 2 தலைமுறைகளாக நம்முடன் வாழ்ந்து வந்த குடும்ப உறுப்பினர்கள் போலவே மாறி விட்டனர். அந்த அளவுக்கு மக்களிடையே பெரும் தாக்கததை ஏற்படுத்தியவை இந்த கேரக்டர்கள். அதன் முழுப் பெருமையும் கிரேசி மோகனுக்கே போய்ச் சேரும்.
நடிகர் கமல்ஹாசனின் ஆஸ்தான நகைச்சுவை எழுத்தாளர் இப்போது இல்லை... வயிறு குலுங்க சிரிக்க நூறு சதவிகிதம் உத்திரவாதம் தரும் நகைச்சுவை கலைஞன்,எழுத்தாளரை இழந்து விட்டோமே...
குடும்பத்தினர் அமைதி அடையட்டும்... உலகத் தமிழர்கள் வியந்து வியந்து ரசித்த கலைஞனின் ஆன்மா சாந்தி அடையட்டும்.