ஐசியூவில் கணவர்! "வந்தனம்மா வந்தனம்" பாடலால் ஓவர் நைட்டில் பிரபலமான டான்ஸர் சுஜாதா உருக்கம்!
சென்னை: ஒரே பாட்டில் பட்டிதொட்டியெங்கும் புகழ் பெற்றவர் நடிகை சுஜாதா. ஆம்! ஈசன் படத்தில் வரும் வந்தனம்மா, வந்தனம் என்ற பாடல் மூலம் யார் இவர் என கேள்வி எழுப்ப வைத்தார். தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் பெரிய நடனக் கலைஞர்!.
ஈசன் படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா வந்த எனும் பாடலில்தான் வந்தனம்மா வந்தனம் என்ற வரிகளும் வரும். எனவே இந்த பாடல்களை இரு வழிகளிலும் கூறலாம். சுஜாதா அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அந்த பாடலில் அவர் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறித்தும் அதில் இருக்கும் உருக்கமான பின்னணி குறித்தும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: ஈசன் படத்துல ஜில்லா விட்டு ஜில்லா பாடல் எடுக்கும் போதுதான் எனது கணவருக்கு 2ஆவது ஹார்ட் அட்டாக் வந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் ஐசியூவில் சேர்த்திருந்தோம். அப்போதுதான் தினேஷ் மாஸ்டர் எனக்கு போன் செய்து அக்கா ஹாஸ்பிட்டல்ல இருக்கீங்களா, இன்னிக்கு இந்த பாடலுக்காக வர முடியுமா என கேட்டார்.
அப்போது என் வீட்டுக்காரர், "பாடல்தான் முக்கியம், தயாரிப்பாளருக்கு உன்னால் நஷ்டம் ஏற்படக் கூடாது. என்னை பார்த்துக்க இங்க நிறைய பேர் இருக்காங்க, நீ போய் பாடலை முடித்துக் கொடுத்துவிட்டு வா" என்றார். அப்புறம் அரை மனசாக ஷூட்டிங்கிற்கு போன நான் பாடல் வரிகளை கேட்டு அசந்து போய்விட்டேன். எனக்கு கண்ணீர் வந்தது. பிறகு அங்கிருந்தவர்கள் என்னை சமாதானப்படுத்தி ஆறுதல் சொன்னார்கள். இதனால் அந்த பாடல் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "எனக்கு சிறு வயது முதலே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம் இருந்தது. அதனால் டான்ஸ் மாஸ்டரானேன். 25 ஆண்டுகளுக்கு மேலாகவே நான் சினிமாவில் இருக்கிறேன். காதல் தேசம் படத்தில் முஸ்தபா, முஸ்தபா பாடலுக்குதான் நான் முதல் முதலில் நடன இயக்குநராக பணியாற்றினேன்.
அதைத் தொடர்ந்து அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களுக்கும் நான் பணியாற்றி இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான் சினிமாவில் இருந்தாலும் டைட்டில் கார்டில் நடனம் - சுஜாதா என வருமே தவிர நான் யாரென யாருக்கும் தெரியாது.
ஆனால் ஜில்லாவிட்டு ஜில்லா வந்த பாடல்தான் என்னை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆனால் ஈசன் படத்திற்கு முன்பு விஜய்யின் கில்லி படத்தில் த்ரிஷாவின் அம்மாவாக நடித்திருந்தேன். அது போல் நான் அவனில்லை 2 படத்திலும் நடித்திருக்கிறேன். அதன் பிறகுதான் ஈசன் படத்தில் எனக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல பெண் நடன இயக்குநர்களை அணுகி அவர்கள் மறுத்துவிட்டதால் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இந்த பாடல் ஒரே நாளில் இவ்வளவு ஹிட்டாகும் என நினைத்து கூட பார்க்கவில்லை. படம் வெளியானதும் பாடலை பார்த்த அனைவரும் என்னை பாராட்டினார்கள். அப்போது எனக்கு மனசு நிம்மதியாக இருந்தது. இந்த பாடல் வெளியானதும், நிறைய நடன இயக்குநர்கள், இந்த பாடலுக்காக என்னை கேட்டார்கள், நான் முடியாது என கூறிவிட்டேனே என வருந்தினர். அந்த அளவுக்கு எனக்கு இந்த பாடல் திருப்புமுனையாகிவிட்டது. தற்போது சுஜாதா, புது வசந்தம் எனும் சீரியலில் நடித்து வருகிறார். சாந்தி வில்லியம்ஸ் நடித்த கேரக்டரில் இவர் பாதியில் இணைந்துள்ளார். அது போல் வானத்தை போல சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications