சுவர் ஏறி குதிச்செல்லாம் கல்யாணம் பண்ண தேவயானி.. அம்மாவை பற்றி உருக்கம்.. இப்போ டைரக்டராகவும் சக்ஸஸ்
சென்னை: வெறும் 3 நாளில் என்னுடைய படத்துக்கு ரீ-ரெக்கார்டிங், பாட்டு, இசை என எல்லாமே ரெடி பண்ணி தந்துட்டாரு இசைஞானி இளையராஜா.. அவ்வளவு பெரிய ஜீனியஸ்.. என்னுடைய சின்ன படத்துக்கு ஓகே சொன்னது மிகப்பெரிய விஷயம்.. அவரது இசை, இந்த படத்தை மேலும் அழகாக்கிவிட்டது" என்று பூரித்து சொல்கிறார் பிரபல நடிகை தேவயானி.
நடிகை தேவயானி முதன்முறையாகத் தயாரித்து, இயக்கியுள்ள உணர்வுப்பூர்வமான குறும்படம், "கைக்குட்டை ராணி".. இந்த குறும்படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவில், பி.லெனின் படத்தொகுப்பு செய்துள்ளார். நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன்.என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

20 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளைப் பேசுகிறது. தாயை இழந்த ஒரு பெண் குழந்தை, தந்தை வெளியூரில் பணிபுரியும் சூழலில் எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது...
குறும்படம்: 17-வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்துக்கான விருதை இப்படம் வென்றுள்ளது. இதுகுறித்து தேவயானி சொல்லும்போது, "எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் விருது பெறுவது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. மேலும் பல சர்வதேச பட விழாக்களுக்கு இதைக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்" என்றார்.
இந்நிலையில், Wow Tamizha சேனலுக்கு பேட்டி தந்துள்ள தேவயானி, முதல்முறையாக இயக்குனராகி, கேமராமுன்பு நின்ற தருணத்தை பகிர்ந்து கொண்டார். அத்துடன், இளையராஜாவின் இசை குறித்தும், தன்னுடைய பெற்றோர் குறித்தும் உருக்கமான விஷயங்களை பேசினார். அதன் சுருக்கம்தான் இது:
முன்னுதாரணம்: "புதிய விஷயங்கள் ஏதாவது செய்யணும் என்று நினைப்பேன்.. அடுத்த தலைமுறைக்கு ஒரு முன்னுதாரணமாக நாம் இருக்க வேண்டும், நிறைய விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள உள்ளன.. அவைகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.. அப்படி முயற்சி செய்யும்போது, அதில் கிடைக்கும் சந்தோஷம் அளவிட முடியாதது. அப்படித்தான் டைரக்ஷனையும் முயற்சித்துள்ளேன்..
ஆக்ஷன், கட், பேக்கப் போன்ற வார்த்தைகள் எல்லாம் மிகவும் பவர்ஃபுல் வார்த்தைகள்.. இவைகளை டைரக்டர்கள் மட்டுமே சொல்ல முடியும்.. எத்தனையோ வருடங்களாக இந்த வார்த்தைகளை நான் கேட்டுக் கொண்டே இருந்துள்ளேன்.. இதையெல்லாம் முதன்முதலில் நான் சொல்லும்போதே திரில்லிங்காக இருந்தது. அதைவிட வெட்கமாகவும் இருந்தது. அதனால் லொகேஷனில் சத்தமாக சொல்ல என்னால் முடியவில்லை.. மெதுவாக தயங்கி தயங்கி, அதுவும் கேமராமேனுக்கு மட்டும் கேட்கிற மாதிரி சொன்னேன். அப்புறம்தான் சத்தமாக சொன்னேன்.
இளையராஜா: இந்த ஷாட் பிலிம்-க்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.. இந்த படத்துக்கு இசை ரொம்ப முக்கியம் என்பதால், அவர்தான் இதற்கு இசை அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..
அவரிடம் அப்பாயிண்மென்ட் வாங்கி சென்று போய் பார்த்தேன். படம் பார்த்துட்டு, உங்களுக்கு பிடித்திருந்தால் இசையமைத்து தருமாறு கேட்டேன். அவரும் படத்தை பார்த்துட்டு, அடுத்த 10 நிமிஷத்தில் கம்போசிங்கில் உட்கார்ந்துட்டாரு. வெறும் 3 நாளில் ரீ-ரெக்கார்டிங், பாட்டு, இசை என எல்லாமே ரெடி பண்ணி தந்துட்டாரு. அவ்வளவு பெரிய ஜீனியஸ்.. என்னுடைய சின்ன படத்துக்கு ஓகே சொன்னது மிகப்பெரிய விஷயம்.. அவரது இசை, இந்த படத்தை மேலும் அழகாக்கிவிட்டது" என்று சொல்கிறார்.
போட்டோக்கள்: என் அப்பா, அம்மா எனக்கு எல்லாமே கொடுத்திருக்காங்க.. நானே அவங்களுக்கு ஒருமிகப்பெரிய பொக்கிஷம்.. இன்னைக்கும் அவங்க தந்த பொருட்களை எல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறேன்.. அவர்களுடைய போட்டோ மட்டுமல்லாமல், எங்கள் குடும்பத்தின் 2 தலைமுறைகளுக்கு முன்பிருந்த போட்டோக்களை எல்லாம் நான் இன்னும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அம்மாவின் சாமி சிலைகள், பூஜை ரூமில் வைத்திருந்த சின்ன சின்ன பொருட்களைகூட நான் இன்னமும் வைத்திருக்கிறேன்.
அவங்களுக்கு தெரியாமல் நான் கல்யாணம் செய்து கொண்டதுதான், அவர்களின் மனதை காயப்படுத்தியிருக்கும். அதுக்கப்புறம் என்னை அவர்கள் மன்னிச்சிட்டாங்க.. என்னுடன் சேர்ந்துட்டாங்க.. என்னுடன் சந்தோஷமா இருந்தாங்க.. இருந்தாலும் என்னுடைய கல்யாணம் அவர்களை மிகவும் காயப்படுத்திவிட்டது என்றே சொல்லலாம்.
சர்ப்ரைஸ் பிரத்யேகமாக பொருட்களை வாங்கி எனக்கு தருவது, அல்லது நான் அவர்களுக்கு ஏதாவது வாங்கி சர்ப்ரைஸ் தருவது என்ற பழக்கமெல்லாம் சின்ன வயசிலிருந்தே எங்களிடம் இல்லை. புடவைகள் நிறைய அம்மாவுக்கு வாங்கி தந்திருக்கிறேன். ஆனால், சர்ப்ரைஸ் என்று சொல்லி வாங்கி தந்ததில்லை" என்றெல்லாம் நெகிழ்ந்து பேசியிருக்கிறார் தேவயானி.












Click it and Unblock the Notifications