நீயா நானா நிகழ்ச்சியில்.. அப்படி பேசியது தவறு! அந்த வார்த்தைக்கு மியூட் கூட போடல! பா.ரஞ்சித் ஆவேசம்
சென்னை: பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் இருக்கிறார். தீவிரமான அம்பேத்கர் தத்துவத்தை முன்னிறுத்தி செயல்படுவதாக இருக்கும் நிலையில் இவரது நீலம் பண்பாட்டு மையம் நடத்திய வேர்ச்சொல் இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பார் ரஞ்சித் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சில மாதங்களாகவே அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்மொழி கொள்கை பற்றிய எபிசோடுக்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் சாதாரண மக்களிடம் சூட்டிங் நடத்தப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சி சில காரணங்களால் வெளியிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.

சர்ச்சை
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யாதது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் சேனல் தரப்பில் இருந்து இது குறித்து எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. அதே நேரத்தில் அதைத்தொடர்ந்து ஒளிபரப்பான எபிசோடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதாவது ஒரு எபிசோட்டில் தற்போதைய சூழலில் சினிமாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை சொல்வது சரியா அல்லது இல்லாத விஷயங்களை தமிழ் சினிமாவில் காட்டிக் கொண்டிருக்கிறார்களா என்ற ஒரு விவாதம் நடைபெற்றது.
நீயா நானா எபிசோடு
அப்போது பல திரைப்பட நடிகர்களே இல்லாத ஜாதி பிரச்சனை மற்றும் சமுதாய பிரச்சனைகளை தமிழ் சினிமாவில் காட்டி மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள் என்று பேசி இருந்தார்கள். இந்த நிலையில் இந்த எபிசோடை விமர்சித்து இயக்குனர் பா ரஞ்சித் இன்று பேசி இருக்கிறார்.
பா ரஞ்சித் பேட்டி
பா ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையம் ஒருங்கிணைந்த வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை நிகழ்ச்சியில் பேசும் போது, ஒருவர் பேசுகிறார் தமிழ் சினிமாவில் நசுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், அமுக்கப்பட்டோம் என்று கூறி படம் எடுத்து தமிழ் சினிமாவை கெடுத்து விடுகிறார்கள் என்று கூறுகிறார். நாங்கள் ஒரு ஆறு வருஷமா தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறோம் அதில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நாங்கள் கெடுத்து விட்டோம் என்று கூறுகிறார்கள்.
ஆதங்கம்
நசக்கப்பட்டோம் பிதுக்கப்பட்டோம் என்ற வார்த்தைகள் தமிழ் சமூகம் இப்போது வரை அனுமதித்து வருகிறது. சமீபத்தில் கூட நீயா நானா நிகழ்ச்சியில் ஒருவர் பேசும்போது அந்த வார்த்தையை பயன்படுத்தி தொடர்ந்து பேசுகிறார். உண்மையிலேயே உங்களுக்கெல்லாம் குறைந்தபட்ச அக்கறை கூட கிடையாதா? ஒரு சமூகத்தைப் பற்றி மோசமாக உரையாடலை நிகழ்த்துவதற்கு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறார்கள் அந்த வார்த்தையை எந்தவிதமான எடிட்டும் செய்யாமல் மியூட் கூட போடாமல் நிகழ்ச்சியை அப்படியே ஒளிபரப்பு செய்கிறார்கள்.

குற்றசாட்டு
அந்த வார்த்தையை தவிர்த்து இருக்கலாம்.. தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். இதற்காக தான் நாங்கள் படம் எடுக்கிறோம் நாங்களும் படம் எடுக்கவில்லை என்றால் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புரட்சியாளராக மாறி இருப்பார்கள். நாங்கள் தான் உங்களை வாழ வைத்தோம், நாங்கள்தான் உங்களுக்கு உணவளித்தோம், நாங்கள்தான் உங்களுக்கு எல்லாம் கொடுத்தோம் என்பதுதான் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளது.
கோபம்
நீங்கள் எங்களுக்காக எதுவும் சும்மா செய்யவில்லை என்பதை நாங்கள் சொல்வது தான் இங்கே பிரச்சனையே. அந்த வார்த்தையையே இப்போது பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பேசுகிறார்கள் என்று கோபமாக பா ரஞ்சித் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications