மை வைத்தாற் போல் கண்கள்! நடனமாடும் வில்லத்தனம்! கமலின் விக்ரம் படத்தையே காலி செய்த நடிகர்! யார் இவர்
சென்னை: கமல்ஹாசனின் படத்தையே ஒரு வில்லன் நடிகர் தோற்கடித்த கதை தெரியுமா? ஆம் கமல், அம்பிகா நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வசூல்தான் அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தால் குறைந்தது.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவரின் பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மோகன் நடராஜன் நினைவுகள்... 1980 காலத்தில் இலங்கை வானொலியில் ஒரு பாடல் காற்றில் சுழன்று கிறங்கடிக்கும். அது ஒரு காதல் பாடல். ஆனால் அதில் உள்ள ஒரு மென் சோகம் அந்தப்பாட்டில் நம்மை கட்டிப் போட்டுவிடும்.

"வைகை நீராட வானில் தேரோட மனதில் நீயாட மாலைகளாட...மடியில் எனை நீ தாலாட்ட..." மலேசியா வாசுதேவன், ஜானகி குரலில் அந்தப் பாடல் ஹிட்டான அளவுக்கு படம் ஹிட்டாகவில்லை. 'சின்னஞ்சிறுகிளியே' என்கிற அந்தப்படத்தில் நாயகனாக நடித்தவர் மோகன்.
திரைத் துறையை சேர்ந்த நடராஜனின் மகனான மோகனுக்கு நடிப்பில் தான் ஆர்வம். ஆனால் முதல் பட தோல்வியால் வாய்ப்புக்கள் பின் வரவில்லை. இந்த நிலையில் அவரை பாக்யராஜின் "டார்லிங் டார்லிங் டார்லிங்" படத்தில் தான் பார்க்க முடிந்தது. சுமனின் நண்பர்கள் மூன்று பேரில் மோகனும் ஒருவராக வருவார். மூவரும் பாக்யராஜை இன்சல்ட் செய்து கொண்டே இருப்பார்கள்.
அவர்களை அடிக்க வேண்டி பாக்யராஜ் தன்னை மறைக்க சூப்பர் மேன் வேடத்தில் போய் சண்டை இடுவார். பொதுவாக பாக்யராஜ் ராசி பற்றி முன்பே ஒரு பதிவாக எழுதி இருந்தேன். அப்படித்தான் மோகன் பின்னாளில் பெரிதாக வளர்ந்தார். உதவியது வேந்தன்பட்டி அழகப்பன். வி.அழகப்பன் அன்னக்கிளி படத்தில் தேவராஜ்-மோகனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். பின் அவர் தனியாக வந்து 'ராமாயி வயசுக்கு வந்துட்டா' படத்தை புதுமுக நடிகை மேனகாவை வைத்து இயக்கினார்.
அது ஓடாததால் பின் படங்களில்லை. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு நடிகர் விஜயனை வைத்து ஒரு படம் இயக்க அது வெளி வரவில்லை. எடிட்டர் ராஜகோபால் அழகப்பனுக்காக ஒரு படத்தை தயாரிக்க 'ஆகாயத் தாமரைகள்' வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
அழகப்பனும், மோகனும், தயாரிப்பு நிர்வாகியான தரங்கை சண்முகமும் இணைந்து 'ராஜகாளியம்மன் மூவீஸ்' என்கிற கம்பெனியை தொடங்கி 'பூக்களை பறிக்காதீர்கள்' படத்தை தொடங்குகிறார்கள். பூக்களை பறிக்காதீர்கள் படம் டி.ராஜேந்தர் இசையில் வெளியாகி அதே நாளில் ராஜாவின் இசையில் வந்த கமலின் விக்ரம் படத்தோடு போட்டி போட்டது.
விக்ரம் படம் வசூலை விட 'பூக்களை பறிக்காதீர்கள்' படம் வெற்றி பெற்றது. நகைச்சுவையாக சொன்னால் தயாரிப்பாளர் கமலை, தயாரிப்பாளர் மோகன் நடராஜன் முந்தியது பின் நாளில் கமல் தன் 'மகாநதி' படத்தில் மோகனை சாகடிக்க தன் கையை வெட்டும் அளவுக்கு இருவரையும் வளர்த்துக் கொண்டு சென்றது. 'பூக்களை பறிக்காதீர்கள்' படத்தில் மோகன் ஒரு கோடீஸ்வரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
பின் மோகன் டீம் தயாரித்த படம் 'பூமழை பொழியுது'. விஜய்காந்த் நடித்த அந்த படத்துக்குப்பின் மோகன்-சண்முகம் இருவரும் அழகப்பனை விட்டுப்பிரிய மோகனும்-சண்முகமும் 'ராஜகாளியம்மன் என்டர்பிரைசஸ்' நிறுவனத்தை தொடங்கி பாரதி-வாசுவில் பி.வாசுவுக்கு வாய்ப்பு கொடுக்க 'என் தங்கச்சி படிச்சவ' வந்தது.
என் தங்கச்சி படிச்சவ படத்தில் ரூபிணியின் அண்ணனாக மோகன் கலக்குவார். பின் எடுத்த 'கோட்டை வாசல்' படத்தில் மெயின் வில்லனானதும் அதன் பின் தமித்திரையுலகில் அவர் சிறந்த வில்லன் நடிகரானார். சிட்டிசன் போன்ற படங்களில் அவர் வில்லன் வேஷம் சிறப்பாக இருந்தது. மகாநதி படத்தில் வந்த வில்லனை படம் பார்த்த அனைவரும் வெறுத்தனர்.
இயல்பாக கண்ணுக்கு மை விட்டது போல இருக்கும் மோகனின் கண்கள் வில்லத்தனத்தை இயல்பாக காட்டின. அது ரசிகர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தும் கண்கள். சாமுண்டி, கிழக்குக்கரை, தமிழச்சி படங்கள் அவர் வில்லத்தனத்தை எடுத்துரைத்த படங்கள். விஜயகாந்தோடு சக்கரைத்தேவன், அஜித்தோடு ஆழ்வார், விஜய்யோடு கண்ணுக்குள் நிலவு, விக்ரமோடு 'தெய்வத் திருமகள்' என இணைந்து பணியாற்றிய மோகன் உடல் நிலை காரணங்களால் திரைத்துறையிலிருந்து ஒதுங்கி வாழ்ந்தார்.
இப்போது மறைந்து விட்டார் எனும் செய்தி கண்ட போது அவர் நடித்த படங்களில் அவர் தனித்துவக் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications