எதிர்நீச்சல் பற்றிய வதந்தி! வேல ராமமூர்த்தி கொடுத்த விளக்கம்.. இத்தனை விஷயம் நடந்திருக்கா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்து வந்த நடிகர் வேல ராமமூர்த்தி பற்றிய வதந்தியான செய்தி ஒன்று இணையத்தில் பரவி வந்த நிலையில் அதை மறுத்து வேல ராமமூர்த்தி விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல் கடந்த வாரம் முடிவடைந்த பிறகு இந்த சீரியலில் நான் நடித்ததே அவமானம் என்று வேல ராமமூர்த்தி சொன்னதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வந்தது. ஆனால் அது நான் சொன்னதே கிடையாது, எதிர்நீச்சல் தான் என்னை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. என்னை பெருமைப்படுத்தின சீரியல் என்று வேல ராமமூர்த்தி மறுப்பு தெரிவித்து இருந்தார். அதோடு தன்னைப் பற்றி பரவி வந்த பல வதந்திகளுக்கும் பிரபல சேனல் ஒன்றில் விளக்கம் கொடுத்திருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

சன் டிவியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் உருவான எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆரம்பத்திலேயே அதிகமான வரவேற்பு இருந்தது. ஆனால் திடீரென்று இந்த சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து இறந்து போக சீரியல் ரசிகர்கள் அந்த இடத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வந்தனர். அதற்குப் பிறகு சீரியல் தரப்பிலிருந்து வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சீரியலில் நடிக்க வைத்திருந்தனர்.
அதுவரைக்கும் மாரிமுத்து நடித்து வந்த கேரக்டருக்கும் வேல ராமமூர்த்தி வந்த பிறகு குணசேகரன் கேரக்டருக்கும் அதிக வித்தியாசம் காட்டப்பட்டு சீரியலில் புது கதையை உருவாக்கி இருந்தனர். ஆனால் திடீரென்று கடந்த ஜூன் 8-ம் தேதியோடு இந்த சீரியல் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
அதிலும் வேல ராமமூர்த்தி இந்த சீரியலில் தான் நடித்தது அவமானம் என்று பேசியதாக செய்திகள் பரவி வந்த நிலையில் அதற்கு முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில், யூடியூப் சேனல்கள் என்ன அடிப்படையில் இந்த மாதிரியான செய்திகள் போடுறாங்கன்னு தெரியல. நான் இதுவரைக்கும் சீரியல் முடிந்த பிறகு யாருக்குமே பேட்டி கொடுக்கல. எந்த இடத்திலும் எதிர்நீச்சல் சீரியல் குறித்து பேசல.
ஆனால் இப்படியான பொய் செய்திகளை பரப்புவது ரொம்பவும் தவறு. என்னுடைய இத்தனை வருட எழுத்து வாழ்விலும் சரி சினிமா வாழ்விலும் சரி இது போல் எந்த விமர்சனத்திற்கும் ஆளாகாத நான் இதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ஆனால் என்னை உலகம் முழுவதும் கொண்டு போனது எதிர்நீச்சல் சீரியல் தான். நான் சினிமாவில் எழுத்தாளராக இருந்ததை விட அதிக கவனம் இந்த சீரியல் மூலமாக பெற்றேன். அதேபோல இந்த சீரியலில் நடித்த பிறகு நான் உலக தமிழ் மக்கள் மத்தியில் சென்று சேர்ந்திருக்கிறேன்.
என்னை பெருமைப்படுத்தியது எதிர்நீச்சல் சீரியல் தான். ஆனால் ஏதோ பொறாமையில் சிலர் இந்த மாதிரியான வேலைகளை பார்க்கிறாங்க. சினிமாவில் நடிச்சிட்டு இருந்ததால சீரியலில் நடிக்க விருப்பமில்லாமல் இருந்தேன். ஆனால் திருச்செல்வம் என்னை நேரில் சந்தித்து பேசிய போது அவர் ஒரு சினிமாக்காரராக என்னிடம் பேசவில்லை. ஒரு அப்பா பிள்ளை போலத்தான் எங்களுக்குள் உறவு இருந்தது.
இந்த சீரியலில் நான் நடிக்க நேரடியாக வரவில்லை. நடிகர் மாரிமுத்து பெரிய தடம் பதித்த கேரக்டர் அவர் ஸ்டைல் வேற என்னுடைய ஸ்டைல் வேற மக்கள் என்னை அவரோடு ஒப்பிடுவாங்க என்கிற தயக்கம் எனக்கு இருந்தது. ஆனால் நான் அந்த கேரக்டருக்கு 100 சதவீதம் ஒரு நடிகனாக என்னுடைய ஒட்டுமொத்த உழைப்பை கொடுத்தேன். அதை மக்களும் ஏற்று கொண்டார்கள்.
அதுபோல எனக்கு வாரத்திற்கு 10 லட்சம் 12 லட்சம் சம்பளம் என்றெல்லாம் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது அடிப்படை அறிவு கூட இல்லாத ஒருத்தன்தான் அப்படி எல்லாம் எழுத முடியும். பொதுவாக சீரியலை பொருத்தவரைக்கும் எபிசோடுக்கு தான் சம்பளம். அப்படி இருக்கும்போது வாரத்திற்கு எப்படி அத்தனை லட்சங்கள் சம்பளம் வாங்க முடியும்? என்று அந்த பேட்டியில் நடிகர் வேல ராமமூர்த்தி கேள்வி கேட்டு தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications