எதிர்நீச்சல் மாரிமுத்து.. மறைந்தாலும் மறக்காத ரசிகர்கள்.. கடைசியாக ஷூட்டிங்கில் சாப்பிட்ட உணவு என்ன?
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் கடைசியாக நடிகர் மாரிமுத்து சாப்பிட்டது என்ன தெரியுமா?
தேனி மாவட்டம் வரசநாடு பகுதியில் உள்ள பசுமலைத்தேரியை சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. இவர் கல்லூரி படிப்பு படித்தவுடன் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையினால் வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் சுவரில் கரியில் எழுதி வைத்துவிட்டு சென்னை வந்துவிட்டார்.

இவர் சென்னைக்கு வந்ததும் வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்தார். இதைத் தொடர்ந்து திரைப்படங்களில் இயக்குநர்களான ராஜ்கிரண், மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இதையடுத்து 2011 ஆம் ஆண்டு யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வாலி, உதயா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். இவர் சினிமாவைவிட எதிர்நீச்சல் சீரியலில்தான் அதிகம் பேசப்பட்டார்.
இந்த சீரியலில் பெண்ணடிமைத்தனம் செய்யும் கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் உண்மையில் அவர் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் பெண்கள்தான் மிகப்பெரிய சக்தி என தனது இன்டர்வியூக்களில் தெரிவித்திருந்தார். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த மாரிமுத்து, எதிர்நீச்சல் சீரியல் மூலம் பல ரசிகர்களை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி அவர் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனது காரில் சாலிகிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு மாரடைப்பு என்பது புதிதல்ல என்றும் 10 ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு வந்துள்ளதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது இதயத்தில் இரு பேஸ்மேக்கர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது இறப்பு செய்தியால் அதிர்ச்சியில் உள்ள ரசிகர்கள் தினந்தோறும் அவர் குறித்த செய்திகளையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார்கள்.
பொதுவாக சீரியலுக்கு வருவோருக்கு தயாரிப்பு யூனிட்டே உணவு, டீ, காபி, ஸ்னாக்ஸ் உள்ளிட்டவற்றை கொடுத்துவிடும். அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலின் போது சூட்டிங்கில் கடைசியாக ஒரு பன்னை டீயில் முக்கி மாரிமுத்து சாப்பிட்டுள்ளார். அதுதான் அவருக்கு மிகவும் பிடித்த உணவாம். உதவி இயக்குநராக இருந்த காலத்தில் உணவை விட இந்த டீ, பன்னைதான் அதிகம் சாப்பிட்டு வாழ்ந்ததாக அவர் சொல்லியிருந்தார்.












Click it and Unblock the Notifications