சங்கிலி முருகன் டூ பிரகாஷ் ராஜ்! விஜயகாந்த் இத்தனை வில்லன்களையா அறிமுகம் செய்திருக்கிறார்?
சென்னை: விஜயகாந்த் இத்தனை வில்லன்களையா அறிமுகம் செய்திருக்கிறார். சங்கிலி முருகன் தொடங்கி பிரகாஷ் ராஜ் வரை விஜயகாந்த் பலரை அறிமுகம் செய்துள்ளார். எப்போதுமே தனது கேரக்டருக்கு நிகரான ஒரு நபரை வில்லனாக போடுமாறு விஜயகாந்த் கேட்பது வழக்கமாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: விஜய்காந்த் 'வைதேகி காத்திருந்தாள்' படம் வரை கிடைக்கும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். 'ஊமை விழிகள்' படம் வரை மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தார்.

'புலன் விசாரணை'க்குப் பிறகு அவரே தனித்துவமான நாயகப் பதவியில் உட்கார்ந்து கொண்டார்.
தொடக்கத்தில் அம்ஜத்கான் போன்ற தோற்றமுடைய அம்ஜத் குமார் என்கிற நடிகர் மிக்க விஜய்காந்த் படங்களிலும் வருவார்.
சங்கிலி முருகன், வினு சக்ரவர்த்தி, சத்யராஜ் என தொடக்க கால வில்லன்கள் விஜய்காந்தோடு மோதினர். புலன் விசாரணை வரை ராதாரவி, சங்கிலி முருகன் நம்பியார் என வில்லன்கள் வந்தாலும் புலன் விசாரணையில் சரத்குமார் ஏற்ற டாக்டர் வில்லன் ரோலும், ஆக்ஷன் காட்சியும் பேசப்பட்டவையாக இருந்தன.
அதனாலேயே தன் படங்களில் வில்லன் ரோல்கள் விஜயகாந்துக்கு சமமான பாத்திரங்களாக மாறின. அப்படித்தான் 'செந்தூரப்பூவே'யில் ஸ்டண்ட் மேன் அழகு செமயான வில்லன் பாத்திரத்தை செய்து பேசப்பட்டார். கேப்டன் பிரபாகரன் படத்தில் குரூப் டான்சராகவும், வில்லன்களின் அடியாளாகவும் நடித்துக் கொண்டிருந்த மன்சூர் அலிகானை கொடும் வில்லனாக அறிமுகம் செய்தார்.
அவரின் "ப்பிரபாகரா..." என்கிற விளியே கொடூரமாக இருக்கும்.
'உழவன் மகன்' படத்தில் சிறிய ரோல் செய்தாலும் 'மாநகர காவல்' மூலம் ஆனந்தராஜ் விஜய்காந்தோடு மோதி கவனிக்கப்படும் வில்லனாக வலம் வந்தனர். 'பூந்தோட்டக் காவல்காரன்' எடுத்த போது வில்லனே கிடைக்காமல் கடைசியில் லிவிங்ஸ்டனை வில்லனாக்கினார்கள்.
லிவிங்ஸ்டனோடு இருந்த எல்லோரும் இயக்குனர்களாகி விட விஜய்காந்த் தான் இவரை நடிப்புப் பாதையில் திருப்பி விட்டவர்.
'ஹானஸ்ட் ராஜ்' படத்தில் மலையாள நடிகர் தேவன் வில்லனாக அறிமுகமானார். தேவன் நாயகனாக நடித்த தமிழ்ப் படம் வராததால் அவர் மலையாளத்தில் பணக்கார வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார்.
மோகன்லாலோடு 'நாடுவாழிகள்', மம்முட்டியோடு 'அய்யர் தி கிரேட்' போன்ற மெகா ஹிட்டுகளோடு தமிழுக்கு வில்லனாக வந்தார். சரத், மன்சூர் போல் மாமிச மோதல்களில்லாமல், நரி தந்திர வில்லனாக தேவன் 'ஹானஸ்ட் ராஜ்' படத்தில் ஜொலித்தார்.
சத்ரியன் படத்தில் வயதான, திமிர்பிடித்த, பிடிவாதம் கொண்ட, ஆணவ அரசியல்வாதியாக திலகன் வந்தது விஜய்காந்தின் ஆக்ஷன் இமேஜை பாதிக்கவில்லை. திலகன் விஜயகாந்தோடு சவால் விட்டு ஜெயித்தார் நடிப்பில். அதற்கு இடம் கொடுத்தது விஜய்காந்த் தான்.
'சிறையில் பூத்த சின்ன மலர்' படத்தில் நடிகர் ராஜேஷை வில்லனாக்கி இருந்தார்கள். 'சின்ன கவுண்டர்' படத்தில் சலீம் கௌஸ், 'கோவில் காளை' படத்தில் வீரபாண்டியன், 'சக்கரை தேவன்' படத்தில் மோகன் நடராஜன், 'செந்தூரப்பாண்டி'யில் பொன்னம்பலம், பதவிப்பிரமாணம்-ராஜன்.பி.தேவ் எனப்போய்க் கொண்டிருக்க கடைசியில் விஜய்காந்தே விஜய்காந்துக்கு வில்லனாக வரவேண்டி வந்தது.
ஆம்.'ராஜதுரை' படத்தில் (சமீபத்திய GOAT இதே கதை) அவரே நாயகன். அவரே வில்லன்.
இப்போது விஜய்காந்துக்கு வில்லன் பஞ்சம் ஏற்பட மும்பை வில்லன்கள் இறக்குமதி ஆனார்கள். 'பெரிய மருது' மூலம் மகேஷ் ஆனந்த் வில்லனாக மும்பையிலிருந்து வந்தார். லக்ஷ்மி ரத்தன் என்கிற நடிகர் தாயகம் படத்திலும், தருண்குமார் 'தர்மசக்கரம்' படத்திலும், உளவுத் துறை மூலம் ஹேமந்த் ராவனும் விஜய்காந்த்தோடு மோதினார்கள்.
கள்ளழகர் மூலம் நடிகர் சோனுசூட் தமிழில் வந்திறங்கினார். 'கண்ணு பட போகுதய்யா' படத்தில் கரண் பாத்திரமே வில்லன் டைப் பாத்திரம் தான். நடிகர் முகேஷ்ரிஷி நடித்த 'வாஸிம் கான்' கதாபாத்திரம் தான் தீவிரவாதியின் கொடூர நடிப்பை சரியாக வெளிக்கொண்டு வந்தது 'வல்லரசு' படத்தில்.
அட்டகாசமான அந்த வில்லனை 'ரமணா' படத்தில் கேரக்டர் ரோலாக கொண்டு வந்தார்கள். நரசிம்மாவின் மூலம் ராகுல் தேவ் என்ட்ரி கொடுத்தார். கஜேந்திரா மூலம் 'நவாப் ஷா', நெறஞ்ச மனசு மூலம் சம்பத் ராஜ், சுதேசி மூலம் சாயாஜி ஷிண்டே, தர்மபுரியில் ஜெயப்ரகாஷ் ரெட்டி (என்னடா ஏகா...), சபரி மூலம் பிரதீப் ராவத்(கஜினி) வந்தார்கள்.
அரசாங்கம் படத்தில் மலையாள ஹீரோ பிஜுமேனன் வில்லன் அவதாரம் எடுக்க, வாஞ்சிநாதனில் கலாபவன் மணியும் வந்தார். எங்கள் அண்ணா மூலம் லால் காலடி எடுத்து வைத்ததும் உண்டு.
இதோடு கஸன் கான், மகாநதி சங்கர், பிரகாஷ்ராஜ் நிறைய படங்களில் வந்திருக்கிறார்கள்.
எம்.ஜி.ஆர் படங்களில் 90% நம்பியார், எம்.ஆர்.ராதா, அசோகன் என வில்லன் பாத்திரம் ஸ்டீரியோ டைப் தான். சாதாரணமாக ஒரு ஹீரோ ஒரு படத்தில் வில்லன் யாரென்றெல்லாம் கேட்கமாட்டார்கள்.
ஆனால் தன் படத்தில் வில்லன் ஒரே ஆள் வந்து ரிபீட்டட் சலிப்பு ரசிகனுக்கு வரக் கூடாது என பல வில்லன்களை கொண்டு வந்திருக்கிறார் விஜயகாந்த். இவரோடு வில்லனாக நடித்து பின்னாளில் ஹீரோவாக பலர் ஆனதெல்லாம் இவரின் தயவு தானெனக்கூட சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications