சீரியலா எடுக்குறாங்க! எல்லை மீறும் காட்சிகள்: சின்னத்திரை சீரியல்களுக்கு சென்சார் அவசியமா?
இந்தியாவில் தொலைக்காட்சி சீரியல்கள் பெரும்பான்மையான குடும்பங்களின் தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிட்டன. குறிப்பாக, பெண்களுக்கும் முதியவர்களுக்கும் பெரும்பாலும் இந்தக் கதைகள் பெரும் ஈர்ப்பாக இருக்கின்றன. ஆனால் சமீப காலங்களில் சில சின்னத்திரை சீரியல்களில் வெளிப்படையான அதிர்ச்சி தரும் காட்சிகள், அசிங்கமான வன்முறை, தவறான குடும்பக் கலாச்சாரம் ஆகியவை இடம்பெற்று வருவது கவலைக்குரிய விஷயமாக மாறிவிட்டது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் சீரியல்களுக்கும் ஒரு சென்சார் வாரியம் தேவைப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

சின்னத்திரை சீரியல்களின் எதிர்மறை பாதிப்புகள்: சின்னத்திரை சீரியல்கள் பார்வையாளர்களின் மனதை பாதிக்கும் அளவிற்கு பிணைப்பை உருவாக்குகின்றன. குறிப்பாக, மிகைப்படுத்தப்பட்ட நெடுந்தொடர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் உணர்ச்சிப் பூர்வமாகக் கையாள்வதோடு, பல சமயங்களில் மக்களை தவறாக வழிநடத்தும் கதைக்களங்களையும் புகுத்தி வருகின்றன.
வன்முறை ஊடுருவும் காட்சிகள்: சில சீரியல்கள் குடும்ப உறவுகளுக்குள் நுழையும் வன்முறையை சாதாரணமாக காட்டுகின்றன. அக்கா-தங்கை மோதல், குடும்பத்தலைவியின் உளவு வேலை, பழிவாங்கும் மனோபாவம் போன்ற விஷயங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இவை குடும்ப உறவுகளின் மீது எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் அபாயமுள்ளது.
பேச்சு முறையின் கீழ்த்தரத் தன்மை: இன்றைய சில சீரியல்கள் நாகரிகம் இல்லாத உரையாடல்களைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, நாயகிகளின் உரையாடல்கள் மிகவும் கடுமையாகவும், மறைமுகமாக நாகரிகத்தை இழிவுபடுத்துவதாகவும் இருக்கின்றன. இதுவே குழந்தைகள், இளஞ் சிறார்களிடையே பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும்.
தவறான குடும்பக் கலாச்சாரம்: தொலைக்காட்சி சீரியல்களில் குடும்ப உறவுகள் மிகைப்படுத்தப்பட்ட விதத்தில் காட்டப்படுகின்றன. சகோதரிகள் ஒருவரையொருவர் எரிச்சலூட்டும் விதமாக நடத்துவது, கணவன்-மனைவிக்குள் நம்பிக்கையின்மை, குடும்பத்தில் எதையும் சூழ்ச்சியால் வெல்லலாம் என காட்டும் காட்சிகள், பார்வையாளர்களின் மனதில் தவறான கருத்துக்களை ஏற்படுத்துகின்றன. உண்மையான குடும்ப வாழ்க்கையில் மதிப்பு, பொறுமை, அரவணைப்பு முக்கியமானவை. ஆனால், சில சீரியல்கள் இவற்றை புறக்கணித்து, பொய்மையும் தந்திரங்களும் வழக்கமானவை என்ற கருத்தை ஊட்டுகின்றன. இதனால் குடும்ப உறவுகளின் மீது மக்களுக்குள்ளும், குறிப்பாக இளஞர் மனதில், தவறான புரிதல்கள் உருவாகலாம். எனவே, சீரியல்கள் குடும்ப உறவுகளின் உண்மையான வடிவை சிதைக்காமல், நல்ல முடிவுகளை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.
சென்சார் கட்டுப்பாடு அவசியமா?: திரைப்படத் துறையில் சென்சார் வாரியம் உள்ளது. ஆனால் தொலைக்காட்சி சீரியல்களுக்கு இதுபோன்று எந்த கட்டுப்பாடும் இல்லை. பார்வையாளர்கள் அனைத்துப் பிராயத்தினரும் என்பதால், ஒரு அடிப்படை கட்டுப்பாடு தேவை என்பதே பலரின் அபிப்பிராயம்.
சென்சார் வாரியம் உருவாக்கல் : திரைப்படங்களுக்கு இருப்பதைப் போன்று ஒரு சென்சார் வாரியம் இருந்தால், தேவையற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் சீரியல்களில் இடம் பெறாமல் தவிர்க்கலாம்.
ஒழுங்குமுறை விதிகள் : நெடுந்தொடர்களின் கதை வடிவமைப்பில் ஒரு அடிப்படை கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒவ்வொரு சீரியலுக்கும் வயது வரம்பு (Parental Guidance, 13+, 18+) போன்ற குறியீடுகள் வழங்கப்பட வேண்டும்.
பொது நாகரிகம் மற்றும் குடும்பமயமான கட்டுப்பாடு: குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்து பார்க்கும் நிகழ்ச்சிகளில் அமையக்கூடிய சில நெறிகள் அமல்படுத்தப்பட வேண்டும்.
தொலைக்காட்சி ஒரு சக்திவாய்ந்த ஊடகம். இதற்கு ஒரு சென்சார் வாரியம் அமைப்பது என்பது பார்வையாளர்களின் மனநிலையைப் பாதுகாக்க மட்டுமல்ல, நல்ல சமூகத்தை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications