“அப்பா அம்மாவுக்கு பணம் கொடுத்தா லோன் ஆகிடுமா?” விஜய் சொத்து விவரம் சர்ச்சைக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்
சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரைச் சுற்றி வரும் ஒவ்வொரு விஷயமும் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதில் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட விஷயம் தேர்தல் வேட்புமனுவில் அவர் கொடுத்திருந்த சொத்து மற்றும் நிதி விவரங்கள்.

விஜய் கொடுத்த சொத்து விவரம்
அந்த ஆவணங்களில், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்க்கு ரூ.3.02 கோடி, தாய் ஷோபாக்கு ரூ.87.12 லட்சம் அளவில் தொகை கொடுத்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதோடு, மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் திவ்யா ஆகியோருக்கும் பணம் கொடுத்ததாகவும் அந்த ஆவணங்களில் இருந்தது.
விஜய் பற்றிய விமர்சனங்கள்
இது வெளிவந்த உடனே சமூக வலைதளங்களில் விவாதம் கிளம்பியது. "சொந்த அப்பா அம்மாவுக்கே கடன் கொடுக்கிறாரா?", குடும்பத்தினர் எல்லாருமே விஜய்க்கு கடன்காரர்களா என்ற மாதிரி பலரும் கேள்வி எழுப்பினர். சிலர் விமர்சனமாகவும் கருத்து தெரிவித்தனர்.

எஸ்.ஏ. சந்திரசேகர் விளக்கம்
இந்த சர்ச்சைக்கு தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாக விளக்கம் கொடுத்துள்ளார். தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் பேசும்போது அவர் சொன்னது, "விஜய் கொடுத்திருக்கும் சொத்து விவரத்தை பார்த்துட்டு பலரும் தப்பா புரிஞ்சுக்கிறாங்க. தன்னோட டிரான்ஸாக்ஷன் புக்கில் (பரிவர்த்தனை பதிவு) என்ன இருக்குன்னு அதையே முறையாக எழுதணும். அது தான் விதி. அதனால அவர் அந்த புக்கில் இருந்த விவரங்களை அப்படியே வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்," என்று விளக்கம் அளித்தார்.
விஜய் கொடுத்த கடன் பற்றி சந்திரசேகர் ஆதங்கம்
தொடர்ந்து எஸ் ஏ சந்திரசேகர் பேசும்போது, "அவர் எங்க அப்பாவுக்கு இவ்வளவு பணம் கொடுத்திருக்கேன், அம்மாவுக்கு இவ்வளவு கொடுத்திருக்கேன் என்று தான் சொல்லியிருந்தாரு. 'நான் லோன் கொடுத்தேன்'ன்னு எங்கயும் சொல்லல. ஆனால் எதிர் தரப்பினர் சிலர் தங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாற்றி பேசுறாங்க," என்று ஆதங்கமாக கூறினார்.
இதோடு, "பெற்றோர்களுக்கு பணம் கொடுப்பது லோன் ஆகுமா? வீட்டுக்குள்ள நடக்கிற விஷயங்களை எடுத்துக்கிட்டு வேற மாதிரி காட்டுறது சரியா?" என்ற கேள்வியையும் எழுப்பினார்.

விஜய் பற்றி அப்பா பேட்டி
விஜய் பற்றி பேசும்போது, "அவரை வேற எந்த விஷயத்துலயும் குறை சொல்ல முடியலன்னா, இப்படிப்பட்ட விஷயங்களை பிடிச்சுக்கிட்டு பேசுறாங்க. அவர் எப்போதும் தன்னுடைய விஷயங்களை வெளிப்படையாக வைத்திருக்கிறார். அதனாலதான் இந்த விவரங்களையும் மறைக்காமல் சொன்னார்," என்றும் கூறினார்.
அதே சமயம், "ஒரு குடும்பத்துல பணம் ட்ரான்ஸாக்ஷன் நடக்கிறது சாதாரண விஷயம் தான். அதை அரசியல் கோணத்தில் இழுத்து பேசுறது தேவையில்லாத விஷயம்," என்று அவர் சற்று கடுமையாகவே விமர்சித்தார்.
மொத்தத்தில் பார்க்கும்போது, விஜயின் சொத்து விவரத்தில் இருந்த இந்த "கடன்" சர்ச்சை உண்மையில் கணக்கு முறையின் ஒரு பகுதி மட்டும்தான் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால் சமூக வலைதளங்களில் இது இன்னும் விவாதமாகவே தொடர்கிறது.












Click it and Unblock the Notifications