கங்கை அமரன் நான் கஷ்டப்படும் போது செஞ்ச உதவி.. வீட்டுக்கே வந்துட்டாரு! மனம் திறந்த ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா, "தனது இசை தான் பெரியது இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் என்றும் பாடல் வரிகள் எல்லாம் பெரிய விஷயம் இல்லை" என காப்புரிமை கூறி வழக்கு தொடுத்திருந்த நிலையில், இது குறித்து வைரமுத்து இசை பெரியதா? பாடல் பெரியதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் வைரமுத்துவை கடுமையாக விமர்சித்து இருந்தார். இது குறித்து பேசிய ஜேம்ஸ் வசந்தன் கங்கை அமரன் பற்றி சில விஷயங்களை ஃபிலிமிபீட் தமிழுக்கு பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் இணையத்தில் இளையராஜா குறித்து செய்திகள் தான் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் அவர் தன்னுடைய பாடலின் இசை தான் பெரியது என்று வழக்கு தொடர்ந்த நிலையில் அது குறித்த தீர்ப்புக்கு அதிகமான ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் "கூலி" திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த டீசரில் இளையராஜா இசையில் "ரஜினிகாந்த்" நடித்த "தங்க மகன்" படத்தில் இடம்பெற்ற "வா வா பக்கம் வா" என்ற பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் தன்னுடைய இசையை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.
இதுவும் அதிகமாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் இளையராஜா குறித்து அடிக்கடி தன்னுடைய கருத்தை தெரிவித்து வரும் ஜேம்ஸ் வசந்தன் இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் பற்றி சில விஷயங்களை மனம் திறந்து பேசுகிறார். அதில் அவர் பேசுகையில் கங்கை அமரன் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவர் எனக்காக பெரிய உதவியை செய்து இருக்கிறார். அது வெளியே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு கிடையாது.
காரணம் நான் சினிமாவில் இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்பு கங்கை அமரன் எனக்கு பணமே வாங்காமல் செய்த உதவி வெளியே யாருக்குமே தெரியாது. நான் 2008 ஆம் ஆண்டில் தான் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக எல்லோருக்கும் தெரிய வந்தேன். அதற்கு முன்பு 2000 ஆண்டில் தொகுப்பாளராக மட்டும் இருந்தேன். அந்த நேரத்தில் ஆல்பம் பாடல்கள் வெளியிடலாம் என்று சிந்தனையில் நான் இருந்தேன்.
அது பற்றி ஒரு முறை கங்கை அமரனிடம் பேசிக் கொண்டிருக்கும்போது நான் சொல்ல அவர் இதில் என்ன இருக்கு நான் உனக்கு பாட்டு எழுதி தருகிறேன் என்று சொன்னார். அப்போது நான் பெரிய அளவில் வசதியாக இல்லை. அதனால் என்னால் அவருக்கு சம்பளமும் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருந்தேன். அதனால் அவரிடம் என்னுடைய நிலைமையை சொன்னேன். சார் இப்போ என்னால் உங்களுக்கு பணம் எல்லாம் தர முடியாதே என்று சொல்ல,
அதற்கு அவர் நான் உன்னிடம் பணம் கேட்டேனா? உனக்கு எப்ப வந்து எழுதி தரணும்னு சொல்லு நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டார். பிறகு அடுத்த நாள் காலையில் எனக்கு போன் பண்ணினார் நான் எப்போ உன் வீட்டுக்கு வரணும் என்று கேட்டார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்த நேரத்தில் கங்கை அமரன் பெரிய அளவில் திரைப்படங்களில் பிசியாக இருந்தார்.

ஆனாலும் எனக்காக அவர் எடுத்த முடிவு எனக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவர் சொன்னது போலவே காலை 9 மணிக்கு நான் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து விட்டார். பிறகு மதியம் ஒரு மணி வரைக்கும் இருந்து பாட்டு எழுதினார். அதற்குப் பிறகு நான் சாப்பிட்டுவிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வருகிறேன் என்று கிளம்பி போய் மீண்டும் 3:00 மணிக்கு வந்து விட்டார். இப்படி நான்கு ஐந்து நாட்கள் எனக்காக வந்து பாட்டு எழுதிக் கொடுத்தார்.
அதனால் அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. ஆனாலும் நான் அவருடைய அண்ணன் இளையராஜாவை விமர்சிக்கிறேன் என்று எல்லோரும் சொல்லலாம். ஆனால் இளையராஜா எப்போதும் எனக்கு இசை ரீதியாக குரு தான். ஆனால் அவருடைய பர்சனல் கேரக்டர் தான் எனக்கு பிடிக்காது என்று அந்த பேட்டியில் ஜேம்ஸ் வசந்தன் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications