படகு சவாரியில் மகனை கட்டி அணைத்து உயிர் விட்ட அம்மா.. கண்கலங்க பிக் பாஸ் கனி உருக்கம்
சென்னை: மத்தியப் பிரதேசத்தின் பர்கி அணை அருகே நர்மதா நதியில் ஏற்பட்ட படகு விபத்து, நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகிழ்ச்சியாக சுற்றுலா சென்ற குடும்பங்கள் கணநேரத்தில் விபத்தில் சிக்கிய இந்த சம்பவத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உயிர் பிரியும் தருவாயிலும் தன்னுடைய 4 வயது மகனை நெஞ்சோடு அணைத்தபடி இருந்த தாயின் உடல் கண்டெடுக்கப்பட்ட காட்சி, மீட்புப் படையினரையும் பொதுமக்களையும் கண்கலங்கச் செய்துள்ளது. இந்த துயர சம்பவம் குறித்து பிக் பாஸ் கனி கண்களாக பேசி இருக்கிறார்.

விபத்து எப்படி நடந்தது?
பர்கி அணை பகுதியில் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, திடீரென வானிலை மோசமடைந்தது. பலத்த காற்றுடன் கூடிய புயல் வீசியதால், படகு சமநிலை இழந்து தண்ணீர் நிரம்பத் தொடங்கியது.
சில நிமிடங்களுக்குள் கட்டுப்பாட்டை இழந்த படகு கவிழ்ந்து, பலர் நீரில் மூழ்கினர். விபத்து நடந்த நேரத்தில் பயணிகள் யாருக்கும் முழுமையாக நிலைமை புரியாததால், அங்கங்கே அலறல் சத்தம் மட்டும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இறப்பிலும் பிரியாத பாசம்
இந்த விபத்தில் டெல்லியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பம் சிக்கியது. அதில் தாய் மற்றும் 4 வயது மகன் உயிரிழந்தனர். மீட்புப் பணியின் போது, அந்த தாய் தனது குழந்தையை நெஞ்சோடு இறுக்கமாக அணைத்தபடி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மரணத்தின் விளிம்பிலும் குழந்தையை காப்பாற்ற முயன்ற அந்த தாயின் பாசம், சம்பவத்தை மேலும் சோகமாக மாற்றியுள்ளது.
இந்த குடும்பத்தில் தந்தை மற்றும் மகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தாய் மற்றும் மகன் இருவரும் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்த போதும் உயிரிழந்தது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஒரே லைஃப் ஜாக்கெட்டை பகிர்ந்து பயன்படுத்தியதே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிர் தப்பியவர் சொன்ன அதிர்ச்சி
இந்த விபத்தில் இருந்து அதிசயமாக உயிர் தப்பிய சையத் ரியாஸ் ஹுசைன் கூறியதாவது, "வானிலை திடீரென மாறியது. படகு உள்ளே தண்ணீர் நிரம்ப ஆரம்பிச்சதும் யாருக்கும் என்ன நடக்குது என்று புரியல. எல்லாரும் அலறி உதவி கேட்டாங்க. நான் ஒரு இடத்தில் சிக்கி, இரண்டு மணி நேரம் தண்ணீரில் போராடினேன். சுற்றிலும் பிணங்கள் மிதந்ததை பார்த்தேன்," என்று அவர் கூறியுள்ளார்.
காரக்குழம்பு கனி உருக்கம்
இந்த சம்பவம் குறித்து குக் வித் கோமாளி, பிக்பாஸ் மூலம் பிரபலமான காரக்குழம்பு கனி கண்கலங்க பேசியுள்ளார். "இந்த செய்தியை கேட்கும் போதே ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒரு தாய் இறக்கும் தருவாயிலும் தன்னுடைய குழந்தையை காப்பாற்ற எவ்வளவு போராடி இருப்பாங்க... ஒரு அம்மாவாக அதை நான் உணர முடிகிறது," என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நம்ம குழந்தைகளுக்கு ஒரு சின்ன காயம் பட்டாலே நம்ம மனசு உடைந்து போயிடும். ஆனால் இந்த அம்மா தன்னுடைய குழந்தையை நெஞ்சோடு சுமந்தபடியே உயிரிழந்திருக்காங்க... அது எவ்வளவு வேதனை இருக்கும்னு நினைச்சாலே கண்ணீர் வருது," என்று உருக்கமாக கூறினார்.
மேலும், சமீபத்தில் ஏற்காடு சென்ற அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். "நாங்களும் ஏற்காட்டில் படகு சவாரி பண்ணோம். அங்க குடும்பங்கள் எவ்வளவு சந்தோஷமா இருந்தாங்க... அதே மாதிரி மகிழ்ச்சியோடு சென்ற ஒரு குடும்பம் இப்படி சிதறி போயிருக்கு என்பது ரொம்ப வலி தருகிறது," என்று அவர் கூறினார்.
இந்த விபத்தைத் தவிர்க்க வழி இருந்தும் அதை செய்யாமல் விட்டு விட்டார்கள். அதாவது,"சரியான வானிலை இல்லைன்னு தெரிந்தும் சவாரி நடத்தினாங்க", "அதிகமான பேரை ஏற்றினாங்க", "லைஃப் ஜாக்கெட் ஆரம்பத்திலேயே கொடுக்கல".. இவை எல்லாம் சரியாக இருந்திருந்தால், அந்த அம்மாவும் குழந்தையும் இன்று உயிரோட இருந்திருப்பாங்க," என்று கனி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications