மிச்சம் மீதி குழம்பை பிளாஸ்டிக் கவரில் ஊற்றி தருவார்கள் சார்! நீயா நானாவில் கலங்கிய வீட்டு பணிப்பெண்
சென்னை: வளர்க்கும் நாயை தொட்டு தொட்டு பேசுவார்கள், ஆனால் எங்கள் கையை கூட தொட்டு காசு கொடுக்க மாட்டார்கள் என நீயா நானாவில் வீட்டு பணியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வாரம் வீட்டு பணியாளர்கள் வெர்சஸ் பணிக்கு அமர்த்தும் குடும்பத் தலைவிகள் என்ற தலைப்பில் ஒரு விவாதம் நடத்தப்பட்டது.
இந்த விவாதத்தில் வீட்டு பணியாளர்கள் முன் வைத்த வாதத்தை பார்க்கும்போது இந்த நவீன யுகத்தில் இப்படியெல்லாம் கொடுமைகள் நடக்கின்றனவா என அதிர்ச்சி அடைய வைக்கிறது.

வீட்டு பணியாளர்கள்
வீட்டு பணியாளர்களை எப்படி வேலைக்கு எடுப்பீர்கள் என கோபிநாத் கேட்டதற்கு, பார்க்க நீட்டாக பளிச்சென இருக்க வேண்டும். நல்ல உடை அணிந்திருக்க வேண்டும். தலையெல்லாம் நன்றாக வாரி கொண்டிருக்க வேண்டும். எனக்கு தெரிந்தவர்கள் வீட்டில் அவர்கள் வேலை பார்க்கக் கூடாது, எத்தனை வீடுகளில் வேலை செய்கிறார்கள், அவர்கள் பேசும் பாஷை எப்படியிருக்கிறது என பார்ப்பேன் ...... இப்படி ஏகப்பட்ட கண்டிஷன்களை குடும்பத் தலைவிகள் முன் வைக்கிறார்கள்.

பத்து பாத்திரம்
அதற்கு வீட்டு பணியாளர்கள் பத்து பாத்திரம் தேய்க்கவும், துணி தோய்க்கவும் வீட்டை கூட்டவும் பட்டு புடவையா கட்டிக் கொண்டு வர வேண்டும் என கேட்டனர். அதற்கு குடும்பத் தலைவிகள், நாங்கள் பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வர சொல்லவில்லை. 4 வீட்டுக்கு சென்றுவிட்டு அடுத்து என் வீட்டுக்கு வரும் போது டயர்ட்டாக இல்லாமல் வியர்த்து விறுவிறுத்தில்லாமல் இருக்க வேண்டும். அதற்காக முகத்தை வாசலில் உள்ள குழாயில் கழுவிக் கொண்டு வர வேண்டும் என்றனர்.

வீட்டு பணியாளர்கள்
இதற்கு வீட்டு பணியாளர்கள் ஒரு வீட்டில் எங்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்குமா, எங்கள் குடும்ப கஷ்டத்திற்காக நாங்கள் 4 வீட்டுக்கு வேலைக்கு செல்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும் நாங்கள் என்ன ஏசி அறையிலா உட்கார்ந்து கொண்டுவிட்டு வருகிறோம், பாத்திரம் தேய்க்கும் போது வீட்டை கூட்டும் போதும் உங்களுக்கெல்லாம் வியர்வையே வராதா?

காசு கொடுத்தால்
கடைக்கு போக சொல்லி எங்களிடம் காசு கொடுத்தால் எங்கள் கையை கூட தொட மாட்டார்கள். பிச்சைக்காரர்களுக்கு போடுவது போல் சற்று கையை உயர்த்திதான் கொடுப்பார்கள். ஆனால் பக்கத்தில் இருக்கும் வளர்ப்பு நாயை நன்றாக கொஞ்சுவார்கள். அது போல் அந்த கைகளால் நாங்கள் சமைத்து வைப்பதையும் சாப்பிடுவார்கள்.

வீட்டு பாத்திரம்
அது போல் அவர்கள் வீட்டு பாத்திரத்தை எங்களுக்கு கொடுத்தனுப்ப மாட்டார்கள். சாம்பார், சாதம், ரசம், ஏதாவது மிச்சம் மீதியிருந்தால் அதை அவர்கள் வீட்டு பாத்திரத்தில் போட்டு கொடுக்க மாட்டார்கள். பிளாஸ்டிக் கவரில், பிளாஸ்டிக் ஸ்வீட் பாக்ஸில்தான் போட்டுக் கொடுப்பார்கள். இதை எப்படி நாங்கள் எடுத்துச் செல்ல முடியும். ஒவ்வொரு வீட்டுக்கு நாங்கள் முன்கூட்டியே பாத்திரத்தையா கொண்டு செல்ல முடியும்? ஆனால் அவர்கள் குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்தவுடன் அவர்கள் சாப்பிட்டு கொண்டு வந்த பாத்திரங்களை தேய்த்துவிட்டுதான் செல்ல வேண்டும் என்றனர்.

சமையல்
ஒரு பணியாளர் கூறுகையில் நான் ஒரு வீட்டில் சமையல் வேலை பார்க்கிறேன். இன்னொருவர் அதே வீட்டில் பத்து பாத்திரம் தேய்க்கிறார்கள். எங்கள் இருவருக்கும் ஒரே தட்டு டம்ளர்தான். ஒருவர் சாப்பிடும் போது மற்றொரு காத்திருக்க வேண்டும். அது போன்று ஒரு சாப்பாட்டை சாப்பிடவே மனசு கஷ்டமாக இருக்கும் என அந்த பெண் அழுது கொண்டே சொல்கிறார்.












Click it and Unblock the Notifications