காசுக்காக குழந்தையை சுமக்கிறார்களா?.. வாடகைத் தாய் முறை வரமா? நீயா நானாவில் அனல் பறந்த விவாதம்
சென்னை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது வரமா சாபமா என்பது குறித்து விஜய் டிவியின் நீயா நானாவில் இன்று மதியம் அனல் பறக்கும் அளவிற்கு விவாதிக்கப்படுகிறது.
எத்தனையோ செல்வங்கள் கோடி கோடியாக கொட்டி கிடந்தாலும் ஒரு வீட்டில் குழந்தை செல்வம் இல்லாவிட்டால் அந்த வீட்டில் வெறுமையே நிலவும். மகிழ்ச்சி பொங்காது.. திருமண வாழ்க்கையை முழுமையாக்குவது குழந்தை செல்வம்தான்.
தந்தையின் உயிர், தாயின் கருப்பையில் கருவாக வளர்ந்து தாய், தந்தைக்கு அம்மா, அப்பா என புரமோஷன் கொடுக்கிறது. வாழ்க்கையின் அர்த்தம் சொல்வது குழந்தை செல்வம்தான். அத்தகைய குழந்தை செல்வங்கள் இயற்கையாக கிடைக்காமல் இன்று எத்தனையோ தம்பதி மருத்துவமனை வாசலில் குவிந்துள்ளார்கள்.

மருத்துவர்கள்
இவர்களுக்கு மருத்துவர்கள் படிப்படியாக சிகிச்சை அளித்து எந்த சிகிச்சையிலும் இருவரில் ஒருவரால் இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் கடைசி ஆப்ஷன் வாடகைத் தாய் முறையாகும். இது ஏதோ சினிமா, சீரியலில் காட்டுவது போல் பணத்திற்காக ஆசைப்பட்டு யாரோ ஒரு பெண் , ஒரு தம்பதிக்கு குழந்தை பெற்று கொடுப்பது கிடையாது.

பிரதிபலன்
குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத அந்த ஆணின் பெண் உறவினரோ அல்லது பெண்ணின் உறவினரோ வாடகைத் தாயாக எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்யும் உன்னதமான சேவை. கணவரின் விந்தணுவும் மனைவின் கருமுட்டையும் நவீன டெக்னாலஜி கொண்டு வளர்க்கப்பட்டு அவை முதிர்ச்சி அடைந்தவுடன் வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்ப்பது ஆகும்.

கருப்பை
அதாவது ஒரு பெண் தனது கருப்பையில் வேறு தம்பதியின் குழந்தையை சுமக்கிறார். இதில் சிலர் முகம் சுளிக்கும் அளவுக்கு எந்த விஷயமும் இல்லை. தங்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வர வேண்டும் என்பதற்காக கடைசி முயற்சியாக இந்த ஆப்ஷனை மருத்துவரின் பரிந்துரையுடன் தம்பதி தேர்வு செய்கிறார்கள். இந்த வாடகைத் தாய் (surrogacy) முறை மூலம் எத்தனையோ பிரபலங்கள் குழந்தை பெற்றுக் கொண்டாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இந்த முறையை தேர்வு செய்த போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

வாடகைத் தாய் முறை
அப்போதுதான் இந்த வாடகைத் தாய் முறை குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்த வாடகைத் தாய் முறையில் குழந்தை பிறப்பது வரமா சாபமா என்பது குறித்து இந்த வார நீயா நானாவில் இன்றைய தினம் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து இரு புரோமோக்கள் வெளியாகியுள்ளன. அதில் வாடகைத் தாய் ஆதரிப்போர், வாடகைத் தாயை எதிர்ப்போர். இவர்கள் பேசுகையில் வாடகைத் தாய் முறை கேவலமான ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறது என நினைக்கிறேன் என்று ஒரு பெண் தெரிவித்தார்.

குழந்தையே இல்லாமல் வாழ வேண்டுமா?
வாடகைத் தாய் எனும் ஆப்ஷன் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ளாமல் ஒரு தம்பதி கடைசி வரை குழந்தையே இல்லாமல் வாழ வேண்டுமா என வாடகைத் தாய் முறையை ஆதரிக்கும் பெண் கேட்டார். அப்போது 10 ஆண்டுகள் திருமணம் ஆகி குழந்தை இல்லை என்பதற்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சரியான தீர்வல்ல என்கின்றனர் எதிரணியினர். நான் வாடகைத் தாயாக இருக்கிறேன் என எந்த பெண் ஒப்புக் கொள்வார், அப்படியே ஒப்புக் கொண்டாலும் காசுக்காகத்தான் ஒப்புக் கொள்வார்கள் என்கிறார் எதிரணியை சேர்ந்த இன்னொரு பெண்.

வாடகைத் தாய் வரம்
அதற்கு மறுமுனையில் இருந்து காசுக்காகவே அவர்கள் ஒப்புக் கொண்டாலும் அதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறார். பணம் பிரச்சினை இருக்கும் பெண்கள் , பணத்தேவையை சமாளிக்க தற்போது வாடகைத் தாயாகிவிடுகிறார்கள் என எதிரணி பெண் சொல்கிறார். அதற்கு இன்னொரு பெண் , வாடகைத் தாய் முறை என்பது ஒரு வரம். எனக்கு குழந்தை இல்லை என்பதை என்னை சுற்றியிருப்பவர்கள் எத்தனை வார்த்தைகளில் சொல்லியிருப்பார்கள்? இதை நான் ஏன் பயன்படுத்தக் கூடாது என்கிறார். இதற்கு எதிரணி பெண் ஒருவர், புரொபஷனால் குழந்தை பேற்றை தள்ளி போடுவதாக கூறுகிறீர்கள். குழந்தை பேறு என்பது நல்ல விஷயம்தானே, அதைவிட உங்கள் புரொபஷன் முக்கியமா என கேட்கிறார். இப்படியாக இந்த விவாதம் போகிறது. இது இன்று விஜய் டிவியில் நண்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒளிபரப்பாகும்.












Click it and Unblock the Notifications