Pandian Store: காதல் கணவருடன்.. மகிழ்ச்சியை பகிர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தங்கமயில்! குவியுது வாழ்த்து
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 'தங்கமயில்' என்ற கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சரண்யா துரோடி, இந்த காதலர் தினத்தன்று தன்னுடைய காதல் கணவருடன் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்தப் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களிடையே செம்ம வைரலாகி, லைக்குகள், கமெண்ட்ஸ் என மழை பொழியத் தொடங்கியது.
இதுவரை சரண்யா துரோடியின் திருமணம் குறித்து பலருக்கும் தெளிவான தகவல் தெரியாத நிலையில், திடீரென கணவருடன் வந்த இந்த காதலர் தினப் பதிவை பார்த்த ரசிகர்கள், "எப்போ கல்யாணம்?", "திருமணம் நடந்ததே எங்களுக்கு தெரியலையே!","இவர்தான் உங்க ஹஸ்பண்டா?"
என்று பல கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், 'தங்கமயில்' கதாபாத்திரம் சீரியலில் சரவணனுடன் சேர வேண்டும் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்கள், இப்போது "ரீல் வாழ்க்கையிலிருந்து ரியல் வாழ்க்கை வேற" என்று ஆச்சரியப்படுத்தும் கமெண்ட்களையும் போட்டு வருகின்றனர்.
செய்தி வாசிப்பாளராக தொடங்கிய பயணம்
சரண்யா துரோடி ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு நடிகையாக மாறி சின்னத்திரையில் காலடி வைத்தார். சன் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில் நடித்திருந்தாலும், அவருக்கு பெரிய அளவில் பிரபலத்தை பெற்றுத் தந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தான். அந்த சீரியல் மூலம் அவருக்கு நல்ல ரசிகர் வட்டம் உருவானது.
ஆனால், அந்த சீரியல் சில ஆண்டுகளில் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பின்னர் ஆயுத எழுத்து என்ற சீரியலில் நடித்தார். அந்த சீரியலும் எதிர்பாராத விதமாக திடீரென நிறுத்தப்பட்டது. அடுத்ததாக வைதேகி காத்திருந்தாள் என்ற சீரியலில் நடித்திருந்தார். அதுவும் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்ததால், தொடர்ந்து வந்த இந்த சீரியல் இடைநிறுத்தங்கள் காரணமாக விஜய் டிவி மீது சரண்யா ஒரு காலகட்டத்தில் மிகுந்த ஏமாற்றம் மற்றும் கோபத்தில் இருந்ததாகவும் பேசப்பட்டது.
'முல்லை' கேரக்டர்
அந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் 'முல்லை' என்ற முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு சரண்யாவுக்கு வந்தது. அந்த கதாபாத்திரத்தை முன்பு நடித்திருந்த விஜே சித்ரா அவரது நெருங்கிய தோழி... அவரது மறைவுக்குப் பிறகு அந்த இடத்தில் நடிப்பது மனதளவில் கஷ்டமாக இருக்கும் என்பதாலும், "அந்த கேரக்டரில் என்னால் நடிக்க முடியாது" என்று சரண்யா அந்த வாய்ப்பை மறுத்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடங்கியபோது மீண்டும் சரண்யாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையில் அவர் 'தங்கமயில்' என்ற கேரக்டரில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். சீரியலில் தங்கமயிலின் நிலைமை இனி என்ன ஆகும், அவளின் வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் வரும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே தொடர்ந்து பேசுபொருளாகவே உள்ளது.
காதலர் தினக் கொண்டாட்டம்
இந்த சூழ்நிலையில், சரண்யா துரோடி காதலர் தினத்தை தனது காதல் கணவர் மற்றும் செல்லமாக வளர்க்கும் நாய்க்குட்டியுடன் சந்தோஷமாக கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த க்யூட் தருணங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, "ரியல் லைஃப்ல சரண்யா ரொம்ப ஹேப்பியா இருக்காங்க" என்ற பாசிட்டிவ் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
ஒரு பக்கம் சீரியலில் தங்கமயிலின் கதாபாத்திரத்திற்கு என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு, இன்னொரு பக்கம் நிஜ வாழ்க்கையில் சரண்யாவின் காதல் வாழ்க்கை வெளிப்பட்ட இந்த வைரல் போஸ்ட் - இரண்டும் சேர்ந்து தற்போது சமூக வலைத்தளங்களில் சரண்யா துரோடியை மீண்டும் ஹாட் டாபிக்காக மாற்றி இருக்கிறது.












Click it and Unblock the Notifications