கூலி பட கல்யாணிக்கு கல்யாணம்! "தாம்பத்திய வாழ்க்கையில் நுழைய போறேன்!" ரச்சிதா ராம் ஓபன்! இவர் யார் தெரியுமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்டமான 'கூலி' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்ட நடிகை ரச்சிதா ராம், இப்போது தன் திருமணம் குறித்து பேசியிருக்கும் தகவல் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 'கூலி'யில் தனது வில்லத்தனத்தைக் காண்பித்து வரவேற்பை பெற்ற ரச்சிதா ராம், இன்னும் சில நாட்களில் தான் தாம்பத்திய வாழ்க்கையில் நுழையப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

கன்னடத்து டிம்பிள் குயின்
கன்னடத் திரையுலகில் தனது வசீகரமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை ரச்சிதா ராம். இவர் 1992-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பெங்களூருவில் பிந்தியா ராம் என்ற இயற்பெயருடன் பிறந்தார். இவரது தந்தை கே.எஸ். ராம் ஒரு புகழ்பெற்ற பரதநாட்டியக் கலைஞர். ரச்சிதாவும் முறையாகப் பரதநாட்டியம் பயின்று, 50-க்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடியுள்ளார்.
சினிமா அறிமுகம்
2012-ஆம் ஆண்டு 'அரசி' என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 2013-ஆம் ஆண்டு 'புல்புல்' என்ற கன்னடத் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் செல்லமாக 'டிம்பிள் குயின்' என்று அழைக்கின்றனர். இவருக்கு நித்யா ராம் என்ற ஒரு சகோதரியும் இருக்கிறார். அவர் சன் டிவியில் ஒளிபரப்பான 'நந்தினி' போன்ற வெற்றித் தொடர்கள் மூலம் தென் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர். சமீபத்தில் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
முக்கிய படங்கள்
நடிகர்கள் புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்டோருடனும் ரச்சிதா ராம் நடித்துள்ளார். இவரது நடிப்பில் 'லேண்ட் லார்ட்' மற்றும் 'அயோக்யா-2' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
கன்னடத் திரையுலகில் மட்டுமே தனது முதல் பத்து ஆண்டுகளைக் கழிப்பேன் என்று உறுதியாக இருந்த ரச்சிதா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படத்தின் மூலம் தனது முடிவை மாற்றினார். 'கூலி' படத்தில் கல்யாணி என்ற வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களின் மத்தியிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.
ரச்சிதாவின் திருமணம்
இந்த நிலையில், நடிகை ரச்சிதா ராம் பெங்களூருவில் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருமணம் குறித்துக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்தப் பதில்தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம் குறித்து ரச்சிதா ராம் மனந்திறந்து பேசியதாவது: "இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன். எனக்குக் கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு எந்தவிதக் கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் வேலை வேகமாக நடந்து வருகிறது."
தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வரும் ரச்சிதா ராம், தனக்கு வரும் கணவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்தக் கனவும் இல்லை என்று எளிமையாகக் கூறியிருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவருடைய திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதால், விரைவில் 'டிம்பிள் குயின்' ரச்சிதா ராம் தனது துணையை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications