ரஜினிகாந்தை நேரில் சந்தித்தபோது நடந்த சம்பவம்! இதை எதிர்பார்க்கல! துப்புரவு பணியாளர் பத்மா உருக்கம்
சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் குப்பைகளுக்கிடையே கிடந்த 45 பவுன் தங்க நகைகளை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து, சமூகத்தில் நல்லுணர்வுக்கு எடுத்துக்காட்டாக மாறிய துப்புரவு பணியாளர் பத்மாவுக்கு தொடர்ந்து பாராட்டுகளும், அன்பும் குவிந்து வருகிறது. ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி ரூ.1 லட்சம் பரிசளித்த நிலையில், தற்போது நடிகர் ரஜினிகாந்த் பத்மாவை தனது இல்லத்துக்கு அழைத்து கௌரவித்த சம்பவம் பலரின் மனதை நெகிழ வைத்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து பத்மா சமீபத்தில் ஒரு தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். "ரஜினி சார் என்னைப் பார்க்கணும் என்று சொன்னதுமே, 'சும்மா தூரமா நின்னு கை கொடுத்து பாராட்டுவாரோ?'ன்னு தான் நினைச்சேன். ஆனா உள்ளே போன உடனே என்ன அரவணைச்சு, தோள்ல கட்டிப் பிடிச்சு பாராட்டினாரு. அந்த தருணமே எனக்கு கண் கலங்கிடுச்சு," என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் பத்மா.

ரஜினியின் வார்த்தைகள்
பத்மாவின் நேர்மையை பாராட்டிய ரஜினிகாந்த், "நீங்க செஞ்சது ஒரு பெரிய சேவை. எல்லோரும் உங்கள மாதிரி நல்ல மனசோட இருக்கணும். உங்க இந்த புண்ணியம் எல்லாம் உங்க பேரப் பிள்ளைகளுக்கு பெரிய சந்தோஷமா திரும்பக் கிடைக்கும்," என்று மனப்பூர்வமாக வாழ்த்தியதாக பத்மா கூறினார். இந்த வார்த்தைகள் தான் தன்னை மிகவும் நெகிழ வைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தாருடன் உரையாடல்
சந்திப்பின் போது பத்மாவின் இரண்டு பேரப்பிள்ளைகளையும் ரஜினிகாந்த் அன்போடு கட்டிப்பிடித்து கொஞ்சி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். "என் பேரப்பிள்ளைகளையும் அவர் தன் குழந்தைகள் மாதிரி தான் பார்த்தார். அதைப் பார்த்ததும் எனக்கு மனசுக்குள்ள பெரிய சந்தோஷம்," என்று பத்மா கூறினார்.
அதேபோல், பத்மாவின் கணவரும், அவரது அண்ணனும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் என்பதால், அவர்களுடன் சிறிது நேரம் அமர்ந்து சினிமா, வாழ்க்கை, நேர்மை பற்றியும் பேசினாராம். "நீங்க எல்லாம் உண்மையிலேயே உதாரணமானவர்கள்," என்று ரஜினிகாந்த் கூறி அவர்களையும் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசாக தங்க சங்கிலி
இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்த் பத்மாவுக்கு ஒரு தங்கச் சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். "அவரோட எவ்வளவோ படங்களை பார்த்து ரசிச்சிருக்கோம். அவர் தான் கூப்பிட்டு பாராட்டுறாரு என்ற விஷயம் எனக்கு வாழ்க்கையிலேயே நடக்கும் என்று நான் கனவில்கூட நினைக்கல. அது நடந்ததால ரொம்ப சந்தோஷம்," என்று பத்மா தனது பேட்டியில் உருக்கமாக கூறினார்.

நேர்மைக்கு கிடைத்த அங்கீகாரம்
குப்பையில் கிடந்த தங்க நகைகளை ஆசைப்படாமல் உரியவரிடம் சேர்த்த பத்மாவின் செயல், இன்றைய காலத்தில் அரிதான நேர்மை என பலராலும் பாராட்டப்படுகிறது. ஒரு பக்கம் அரசு தரப்பில் பாராட்டு, இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகரின் அன்பான அங்கீகாரம் - இவை அனைத்தும் பத்மாவை மட்டுமல்ல, அவரது குடும்பத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது.
இந்த சம்பவம் சமூகத்தில் ஒரு முக்கியமான செய்தியை எடுத்துச் செல்கிறது. பதவி, பணம், புகழ் இல்லாத சாதாரண மனிதரின் நேர்மையான செயலும், பெரிய மனிதர்களின் பாராட்டைப் பெறும் என்பதற்கான ஒரு உயிருள்ள உதாரணமாக பத்மா இன்று பலருக்குப் பேசுபொருளாக மாறியுள்ளார்.












Click it and Unblock the Notifications