நடிகர் கார்த்திக் மட்டும் விட்டு கொடுக்கலன்னா.. நான் இந்த நிலைமைக்கு வந்திருக்க முடியாது! ரமேஷ் கண்ணா உருக்கம்
சென்னை: தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் திறமையைப் பற்றி அவர்களுடன் நடித்தவர்களே பேசும்போது, ரசிகர்களுக்கு அது இன்னும் நெருக்கமானதாக மாறிவிடும். அந்த வகையில் நடிகர் ரமேஷ் கண்ணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் நடிகர் கார்த்திக் தனக்காக செய்த தியாகம் குறித்து அவர் மனம் திறந்து பேசியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
பொதுவாக ஒரு ஹீரோ தனது படத்தில் அதிக முக்கியத்துவம் பெறும் காட்சிகளையோ, ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கும் வசனங்களையோ மற்றொருவருக்கு விட்டுக் கொடுப்பது அரிது. ஆனால் தனது உச்சகட்ட மார்க்கெட்டில் இருந்தபோதும் அப்படிச் செய்தவர் கார்த்திக் என்று ரமேஷ் கண்ணா பெருமையாக கூறியுள்ளார்.

நடிகர் ரமேஷ் கண்ணா பேட்டி
அவர் பேசியபோது, "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நான் செய்த பல காமெடி காட்சிகளும், ரசிகர்களை சிரிக்க வைத்த வசனங்களும் உண்மையில் கார்த்திக் சார் பேச வேண்டியவை. ஆனால் அவர் அவற்றை எனக்காக விட்டுக் கொடுத்தார். அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இன்று நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியுமா என்று கூட தெரியாது" என்று தெரிவித்துள்ளார்.
1990-களில் வெளியான 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக கார்த்திக் - ரமேஷ் கண்ணா கூட்டணி அந்த படத்தில் ஏற்படுத்திய காமெடி மாயாஜாலம் இன்னும் ரசிகர்களின் நினைவில் இருக்கிறது. டெலிவிஷனில் அந்த படம் ஒளிபரப்பானாலே பலர் அமர்ந்து பார்ப்பதற்கு முக்கிய காரணம் அந்த காமெடி காட்சிகள்தான்.
விட்டு கொடுத்த கார்த்திக்
அந்த படத்தைப் பற்றி நினைவு கூர்ந்த ரமேஷ் கண்ணா, "ஒரு நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் கார்த்திக் மிகப் பெரியவர். தன்னுடன் நடித்தவர்களும் பாராட்டைப் பெற வேண்டும் என்று நினைப்பவர். அதனால்தான் என்னை அந்த அளவுக்கு ஊக்கப்படுத்தினார்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கார்த்திக் குறித்து பேசும்போது, "முத்துராமன் சார் மகன் என்பதால் மட்டும் அவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவில்லை. மற்ற நடிகர்களை காப்பி பண்ணாமல், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டார். அவரது உடல் மொழி, வசனம் பேசும் முறை, ரொமான்ஸ், நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாவற்றிலும் தனித்துவம் இருந்தது. அதனால்தான் அவர் 'நவரச நாயகன்' என்று அழைக்கப்பட்டார்" என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினி சொன்ன வார்த்தை
இந்த பேட்டியில் ரமேஷ் கண்ணா குறிப்பிட்ட மற்றொரு சம்பவமும் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஒரு திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியபோது, 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' படத்தை பார்த்ததாகவும், அதில் ரமேஷ் கண்ணாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறியிருந்தாராம்.
அப்போது மேடையிலேயே ரஜினி, "அந்த காமெடி காட்சிகள் எல்லாம் என் படத்தில் இருந்திருந்தாலும் நான் வேறு ஒருவருக்கு விட்டுக் கொடுத்திருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் கார்த்திக் அதை மனதார செய்திருக்கிறார்" என்று பாராட்டியதாக ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் போன்ற உச்ச நடிகரே கார்த்திக்கின் பெருந்தன்மையை மேடையில் பாராட்டியிருந்தார் என்பதே தற்போது ரசிகர்களிடையே மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

நவரச நாயகன் கார்த்திக்
1980 மற்றும் 90-களில் பெண்கள் முதல் குடும்ப ரசிகர்கள் வரை அனைவராலும் கொண்டாடப்பட்ட நடிகர்களில் கார்த்திக் முக்கியமானவர். 'அக்னி நட்சத்திரம்', 'வருஷம் 16', 'கிழக்கு வாசல்', 'பொன்னுமணி', 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்' என பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர், ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் மிகவும் பிஸியான ஹீரோக்களில் ஒருவராக இருந்தார்.
அவரது துள்ளலான நடிப்பு, இயல்பான நகைச்சுவை, ரசிகர்களுடன் எளிதில் இணைந்து விடும் திரை ஆளுமை ஆகியவை அவரை மற்ற ஹீரோக்களிலிருந்து தனித்து காட்டின. அதனால்தான் பல ஆண்டுகளாக பெரிய திரையில் அதிகமாக காணப்படாவிட்டாலும், அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இன்னும் இருந்து வருகிறது.
ரமேஷ் கண்ணாவின் இந்த பேட்டி வெளியான பிறகு, "இதுதான் உண்மையான ஹீரோயிசம்", "கார்த்திக் மாதிரி மனசு இப்போதைய ஹீரோக்களுக்கு இருக்கிறதா?", "திரும்ப ஒருமுறை கார்த்திக்கை பெரிய திரையில் பார்க்க வேண்டும்" என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சினிமாவில் வெற்றிப் படங்கள் கொடுப்பது ஒரு சாதனை என்றால், தன்னுடன் இருப்பவர்களையும் உயர்த்தி நிறுத்துவது அதைவிட பெரிய சாதனை. பல வருடங்களுக்கு பிறகு ரமேஷ் கண்ணா பகிர்ந்த இந்த நினைவு, நடிகர் கார்த்திக்கின் திரை வெற்றியை விட அவரது மனிதநேயத்தைப் பற்றி ரசிகர்கள் மீண்டும் பேச வைத்திருக்கிறது.













Click it and Unblock the Notifications