பாடகி ஜானகி 7 வருடமாக சினிமாவில் பாடாதது இதற்காகவா? நெகிழ்ச்சியான காரணம்.. பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: பலருடைய மனதில் இருக்கும் சோகங்களை மறைய செய்யும் பாடகி ஜானகி கடந்த ஏழு வருடங்களாக பாடாமல் இருக்கும் காரணம் என்ன என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இவர் சொன்ன காரணத்தை கேட்டு ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் பாடகி ஜானகி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடி தன்னுடைய மயக்கும் குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார். தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்த ஜானகி குழந்தையாக இருக்கும்போதே பாடத்தொடகிவிட்டார். அதனாலேயே முறையான இசை பயிற்சியை பெற்றிருக்கிறார்.

சென்னைக்கு இவருடைய குடும்பம் இடம்பெயர்ந்த பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் பாடல் பாட தொடங்கி இருக்கிறார். அதிலும் 1957ஆம் ஆண்டில் வெளிவந்த "விதியின் விளையாட்டு" என்ற படத்தில் இடம்பெற்ற "பெண் என் ஆசை பாழானது ஏனோ" என்ற பாடல் தான் ஜானகியின் முதல் பாடலாக இருந்திருக்கிறது. இந்த பாடல் பாடிய அடுத்த நாளே இவருக்கு தெலுங்கு படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அதைத் தொடர்ந்து பல மொழிகளில் இவர் பாடி கொண்டிருந்தாலும் 25 ஆண்டுகளில் குழந்தையாகவும், குமரியாகவும், வயதானவர்களின் குரலிலும் பாடி பலரையும் வியக்க வைத்திருக்கிறார். ஒரு சிலருடைய பாடல்கள் எந்த நேரத்தில் கேட்டாலும் ரசிகர்களின் சோகங்கள் கரைந்து ஓடும். அந்த வரிசையில் ஜானகியின் பாடல்கள் கண்டிப்பாக இடம் பிடித்திருக்கும். சந்தோஷம் என்றாலும் சரி துக்கம் என்றாலும் சரி இவருடைய பாடல்களை கேட்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
ஜானகியின் பாடல்களில் குறிப்பிட்டு இந்த பாடல்கள்தான் பெஸ்ட் என்று எதையும் சொல்ல முடியாது. ஆனாலும் சிங்காரவேலனே தேவா பாடலின் இவருடைய பாடல் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இந்த பாடலை தொடர்ந்து எக்கச்சக்கமாக இவருக்கு பாடல் வாய்ப்பு குவிந்தது. இளையராஜாவின் இசையில் எண்ணற்ற பாடல்களை ஜானகி பாடியிருக்கிறார். இளையராஜா, எம் எஸ் வி, ஏ ஆர் ரகுமான், அனிருத் என்று அன்று தொடங்கி இன்றைய தலைமுறை இசையமைப்பாளர் வரை பாடி இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் பாடகி ஜானகி இந்தியாவின் நைட்டிங்கேல் என்றும் அழைக்கப்படுகிறார். ஆறு வயது குழந்தை முதல் 60 வயது கிழவன் வரை தன்னுடைய குரலில் வித்தியாசம் காட்டி தான் பாடும் படத்திற்கு தகுந்த வகையில் பாடி இருக்கிறார். அதிலும் "கண்ணா நீ எங்கே வா வா இங்கே" என்ற பாடலில் இரண்டு வயது குழந்தை பாடும் குரல் போல பாடியவர், காதலின் தீபம் ஒன்று என்ற பாடலில் இளம் பெண்ணாகவும் பாடி இருக்கிறார்.
அதுபோல தன்னுடைய இளமையான வயதிலேயே உதிரிப்பூக்கள் படத்தில் போடா போடா போக்கை என்ற பாடலை வயசானவர் குரலில் பாடி அசத்தியிருக்கிறார். வசீகர குரலின் மூலம் மாயாஜாலம் செய்த இவர் 4 முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார். அதிலும் இரண்டு தமிழ் பாடல்களுக்கும், ஒரு மலையாளம் மற்றும் ஒரு தெலுங்கு பாடல் என நான்கு முறை விருது பெற்று இருக்கிறார். அதுபோல தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.
இப்படி பல விருதுகளையும் பெற்ற ஜானகி 2016 ஆம் ஆண்டு தான் திரை உலகில் இருந்து விலகுவதாக அறிவித்து ஹைதராபாத்தில் தன்னுடைய மகன் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தான் எதற்காக சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்று அவர் பேசிய வீடியோ இப்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் எனக்கு திறமை இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக நான் மட்டுமே பாடி புகழையும், பணத்தையும் சம்பாதித்துக் கொண்டே இருப்பதில் எந்த நியாயமும் இல்லை.
வருங்கால சந்ததியினருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். யாரும் என்னை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறை சொல்வதற்கு முன்பு என் வருங்கால தலைமுறை புகழ்பெற வேண்டும் என்று இசை துறையில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டேன் என்று பாடகி ஜானகி அதில் பேசி இருக்கிறார். அதோடு பாடகி ஜானகி கடைசியாக நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலை தான் பாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications