Rj Senthil: ஓரமா உக்காந்துக்குவோம்.. பேசிக்க மாட்டோம்.. வெக்கமா இருக்கும்!
சென்னை: இது ஒரு தனி ரக காதல்.. காதலுக்கெல்லாம் காதல் என்று சொல்வார்களே அது போல.. செம ஜோடியும் கூட. வேற யாரு... நம்ம சரவணனும், மீனாட்சியும்தான்.
மதுர சீரியல்தான் செந்திலையும், ஸ்ரீஜாவையும் கண்ணோடு கண் நோக்கி இதயம் தொட்டு இணைத்து அழகு பார்த்த முதல் தொடர். அந்த சீரியலுக்குப் பின்னர் இருவரும் காதலில் மூழ்கினார்கள். அடுத்து வந்தது சரவணன் மீனாட்சி தொடர். அதில் இருவரும் காதலை மேலும் ஆழமாக வளர்த்துக் கொண்டனர்.
அதன் பிறகு இருவரும் இணைந்த தொடர் என்றால் அது விஜய் டிவியின் மாப்பிள்ளை சீரியல்தான். இவர்களின் ஜோடிப் பொருத்தம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. ஸ்ரீஜாவின் குண்டு கண்கள் அழகு. அது சிரிப்பது தனி அழகு.. செந்தில் மட்டும் என்னவாம்.. அவரும்தான். அவர் சிரிப்பு ஸ்பெஷல் ஆச்சே.
சுகமான காதல்
சரி உங்க காதல் கதையை கிளறி விடுங்களேன் என்று கேட்டால், ஆரம்ப காலத்தில் இருவரும் ஷாட் முடிந்ததும், அவரவர் தனி இடத்துக்கு போய் அமர்ந்து கொள்வார்களாம். ஒரு வார்த்தை கூட ஷூட்டிங் தவிர பேசிக் கொண்டது இல்லையாம். போன் நம்பர் கூட என்ன என்று ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டது இல்லை என்கிறார் சரவணன். மதுர சூப்பர் ஹிட் ஆன உடனே அடுத்து சரவணன் மீனாட்சி பிளான் பண்ணும்போது, ஸ்ரீஜா சொந்த ஊரான கேரளாவுக்கு போயிட்டாராம். பிறகு அவரை அழைத்து வந்து சம்மதிக்க வச்சு இருக்கிறார்கள்.
காதல் கல்யாணம்
உங்களுக்குள் காதல் எப்படி, யார் முதலில் சொன்னது என்றால் இருவரும் சிரிக்கிறார்கள். காதலா.. எங்களுக்குள் காதலே இல்லை, இதில் யார் முதலில் சொன்னது என்கிறீர்கள். சரவணன் மீனாட்சி தொடர் முடிந்த பிறகும் கூட இருவருக்குள்ளும் எதுவும் இல்லை. எங்கள் வீட்டிலும் பெண் பார்த்தார்கள், அவர்கள் வீட்டிலும் மாப்பிள்ளை பார்த்தார்கள். நீங்கள் இருவருமே கல்யாணம் செய்துக்கலாமே எனும்போதுதான் அவர்கள் ஆசைப்படி எங்கள் கல்யாணம் நடந்தது.
ஆனால் பயம்
கல்யாணத்துக்கு பிறகு யாருமே நம்பவில்லை. இது பெற்றோர்கள் பார்த்து வச்ச கல்யாணம் என்று.. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்களைப் பார்த்தவர்களுக்கு தெரியும். நாங்கள் எப்படி இருந்தோம் என்று. எனக்கு ஸ்ரீஜாவோட பேச ஆசையாக இருந்தாலும், பயம் வந்துரும். அதனால் பேச மாட்டேன். அதோடு பேசாமலிருந்தப்பவே லவ்வு கிவ்வுன்னு கதை கட்டிவிட்டாங்க. பேசினால் உறுதிபடுத்திடுவாங்க என்று கூறிச் சிரித்தார் செந்தில்.
விஜய் டிவியில் மாப்பிள்ளை
கல்யாணத்துக்குப் பிறகு நானும் ஸ்ரீஜாவும் சேர்ந்து மாப்பிள்ளை சீரியல் விஜய் டிவியில் நடித்தோம். சில மாதங்களில் சீரியல் நின்று போனது. இப்போது, கல்யாணம் கன்டிஷன்ஸ் அப்ளை-ன்னு ஒரு வெப் சீரியல் நடித்துக் கொண்டு இருக்கிறோம். ஸ்ரீஜாவின் உண்மை பெயர் ஜெயா.ஜெயான்னு கூப்பிட்டால்தான் அவங்க திரும்பிப் பார்ப்பாங்கன்னு சொல்கிறார் செந்தில்.
கேரளா வாசனை
என்னதான் தமிழ் நாட்டு சமையல் செய்தாலும், அதில் கேரளா சமையல் வாசனை இருக்கும். அது எனக்கு பிடிக்கும் என்கிறார் மனைவியை விட்டுத் தராமல். தமிழ் கத்துக்கிட்டாங்களான்னு கேட்டபோது,பேச கத்துக்கிட்டாங்க.எழுத கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டு இருக்காங்கன்னு சொல்றார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாயனாக வந்து அசத்தி வருகிறார் செந்தில். வெப் சீரியலில் அசத்தி வருகிறார்கள் செந்திலும், ஸ்ரீஜாவும்.