பத்து லட்சம் என்ன பரிசு? எங்க அம்மா தினமும் அழுகுறாங்க.. கண்கலங்க வைத்த சரிகமப திவினேஷ் பேச்சு
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான திவினேஷ் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான திவினேஷுக்கு 10 லட்சம் பரிசு கொடுக்கப்பட்டது. அதை வைத்து தினேஷ் என்ன செய்யப் போகிறார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு என்னுடைய அம்மா தினமும் அழுது கொண்டு இருக்கிறாங்க, அவர்களுடைய கஷ்டத்தை போக்க போறேன் என்று திவினேஷ் கூறியிருக்கிறார். அதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட திவினேஷை அவ்வளவு சீக்கிரமாக பாடல் ரசிகர்கள் மறந்து இருக்க முடியாது. பாடல்கள் கேட்காதவர்கள் கூட இவருடைய பாடலை திரும்பத் திரும்ப கேட்கும் அளவிற்கு தன்னுடைய மெல்லிய குரலால் பலருடைய மனதை கவர்ந்திருந்தார். 10 வயது சிறுவன் 70ஸ், 80ஸ் பாடல்களை உணர்வு பூர்வமாக பாடி பலருடைய மனதை தொட்டு இருந்தார்.

சரிகமப திவினேஷ் பாடல்கள்
பழைய பாடல்களில் இத்தனை அர்த்தம் இருக்கிறதா? என்று இன்றைய தலைமுறைகளும் வியந்து பார்க்கும் அளவிற்கு பழைய பாடல்களை மீண்டும் புத்துணர்வு செய்ய வைத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். பல தாத்தா, பாட்டிகளின் செல்ல பேரனாக வலம் வரும் திவினேஷ் டைட்டில் வின்னராக ஜெயித்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சரிகமப இறுதி போட்டியாளர்கள்
இந்த நிகழ்ச்சியில் இறுதி கட்டத்திற்கு ஹேமித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற நான்கு பேரும் தேர்வு செய்யப்பட்டனர். அதில் திவினேஷ் தேர்வு செய்யப்பட்டதை சிலர் பாராட்டி வருகிறார்கள். சிலர் இந்த டைட்டில் வின்னராக ஹேமித்ரா வந்திருக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இந்த சர்ச்சைக்கு மத்தியில் திவினேஷ் பேசிய பேட்டி தான் இப்போது இணையதில் வைரலாகி வருகிறது. திவினேஷுக்கு பரிசு தொகை 10 லட்சம் கிடைத்தது. அந்த பணத்தை எப்படி செலவிட போகிறீர்கள் என்று அவரிடம் நடுவர் கேட்டபோது திவினேஷ் சொன்ன பதில் பலரையும் யோசிக்க வைத்தது.
திவினேஷ் சொன்ன வார்த்தை
இந்த பணத்தை வைத்து தன்னுடைய குடும்ப கடனை அடைக்கப் போகிறேன் என்று கூறியிருந்தார். இந்த பணத்தை வைத்து கடன் அடைக்கனும்னு அம்மா சொன்னது கிடையாது, ஆனால் என்னுடைய அம்மா தினமும் கடனை நினைத்து அழுதுட்டு இருப்பாங்க. அதை பார்த்து எனக்கு இந்த பணத்தை வைத்து கடனை அடைக்கனும்னு தோணுச்சு என்று சொல்லியிருந்தார். இந்த வார்த்தையை கேட்டதும் சிறுவயதில் இப்படி ஒரு எண்ணம் இந்த குழந்தைக்கு வந்திருப்பதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

வியக்க வைத்த திவினேஷ்
ஏற்கனவே திவினேஷ் தந்தை அவரை பாட வைப்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டிற்கு கூட்டிக்கொண்டு வருவதால் சரியான நேரத்திற்கு அவருக்கு வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் அவரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர். இதை அறிந்ததும் இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த பாடகர் ஸ்ரீநிவாஸ் திவினேஷ் தந்தைக்கு டாட்டா வாகனம் ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்திருந்தார். இது பலருடைய பாராட்டை பெற்றிருந்தது. அதுபோல டைட்டில் வின்னர் திவினேஷ் என்று அறிவிக்கப்பட்ட போது கூட பெரிய அளவில் திவினேஷ் சந்தோஷத்தை வெளிக்காட்டவில்லை. உண்மையில் நான்தான் வின்னரா? என்று மீண்டும் கேட்டதாக பாடகர் ஸ்ரீநிவாஸ் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications