அந்த ஆன்மாவோடு வாழ்கிறேன்.. ஆனால்! திருமணமாகி ஒரு வருடத்தில் இறந்த கணவர் குறித்து நடிகை எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா திருமணமாகி ஒரு வருடத்தில் இறந்த தன்னுடைய கணவர் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய கணவரின் இறப்பிற்கு பிறகு தன்னுடைய நிலை குறித்து நெகிழ்ச்சியோடு பேசி இருக்கிறார்.
காதல் தம்பதிகளாக ஒரு வருடங்கள் வாழ்ந்து வந்த ஸ்ருதி சண்முகப்பிரியா தன்னுடைய கணவர் இறந்த பிறகு அவருடைய ஆன்மாவோடு தான் வாழ்ந்து வருகிறேன் என்றும் தன்னுடைய கணவருக்கு பிடித்ததை எல்லாம் தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன் என்பது குறித்தும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் என்னவெல்லாம் பேசினார் என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சன் டிவியில் நாதஸ்வரம் சீரியலில் ராகினி என்ற கேரக்டரில் அறிமுகமான ஸ்ருதி சண்முகப்பிரியா அதைத் தொடர்ந்து நடிகை ராதிகாவோடு வாணி ராணி, கல்யாண பரிசு, விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா உட்பட ஒரு சில சீரியல்களில் நடித்து சின்னத்திரை மக்களின் மத்தியில் பிரபலமாக இருந்தார். அந்த நிலையில் தான் அவருக்கு 2022 ஆம் ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரோடு திருமணம் நடைபெற்றது.
அரவிந்த் சேகர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தில் வெற்றி பெற்று இருந்தார். திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் நடித்து வந்த ஸ்ருதி திருமணத்திற்கு பிறகு சீரியலில் இருந்து முழுவதுமாக விலகி குடும்பத்தை பார்த்துக்கொண்டார். இந்த நிலையில் ஸ்ருதிக்கு திருமணமாகி ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் கடந்த ஆண்டு அவருடைய கணவர் அரவிந்த் சேகர் திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அரவிந்த் உடைய மரணம் குறித்து பலரும் பல்வேறு தகவல்களை கூறி வந்த நிலையில் இப்போது பேட்டியில் ஸ்ருதி சண்முகப்பிரியா அவருடைய கணவர் குறித்து பேசி இருக்கிறார். அதில் நான் என்னுடைய கணவர் அரவிந்தின் ஆன்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறேன். நான் இப்போதும் என்னுடைய கணவருடன் தான் இருக்கிறேன். பலரும் நான் அந்த ஆன்மாவை பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறேன், நான் விட்டால் தான் அந்த ஆன்மா மோட்சம் பெறும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் நான் அந்த ஆன்மாவை பிடித்து வைக்கவில்லை. அந்த ஆன்மாவை எப்போது நான் பிடித்து வைப்பேன் என்றால் என்னுடைய வாழ்க்கையில் எவ்விதம் முயற்சியும் இல்லாமல் நான் மனம் வருந்தி அழுது கொண்டிருக்கும் போது அரவிந்த் சோகமாக பீல் பண்ணுவார். அந்த மாதிரியான நேரத்தில் நான் உன்னை விட்டு விட்டு போய்விட்டேனே என்று அவர் நினைப்பார், அந்த மாதிரி எந்த வலியையும் நான் அரவிந்த் ஆன்மாவிற்கு கொடுக்கவில்லை.
அந்த ஆன்மா அதன் வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக நான் நிறைய விஷயங்கள் செய்தேன். அவருக்காக வேண்டிக் கொள்வது, திதி கொடுப்பது, அவருடைய ஆன்மா சந்தோஷமாக இருக்க என்னவெல்லாம் என்னால் செய்ய முடியுமோ, எதையெல்லாம் செய்ய வேண்டுமோ... அதை எல்லாம் நான் செய்து கொண்டிருக்கிறேன். அரவிந்துக்கு பிடித்த படி தான் நான் என்னுடைய வாழ்க்கையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறேன்.

நான் எப்போதும் அவருடன் தான் இருக்கிறேன். அவர் நான் கூப்பிட்டால் என் பக்கத்தில் வருவார். அதற்காக நான் அந்த ஆன்மாவை தொந்தரவு செய்யவில்லை. அந்த ஆன்மா நல்ல நிலையில் இங்கே தான் இருக்கிறது. நான் மட்டுமல்லாமல் என்னை சுற்றி இருப்பவர்களும் அரவிந்துக்காக வேண்டிக்கொள்கிறார்கள். ஆனாலும் அவர் எங்களோடு தான் இருக்கிறார் என்று அந்த பேட்டியில் உருக்கமாக ஸ்ருதி பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications