சுதீஷ் மாமா இடத்தில் வடிவேலுவை பார்த்தோம்! ஆனால் துரோகம் செய்துட்டாரு! சண்முகபாண்டியன் வருத்தம்
சென்னை: என் அம்மாவுடன் உடன் பிறந்தவரை போல்தான் வடிவேலு மாமாவையும் நாங்கள் பார்த்தோம். அவர் சின்ன வயசிலேயே எங்களுக்கு துரோகத்தை செய்து ஏமாத்திட்டு போயிட்டாரு என நடிகரும் விஜயகாந்தின் இளைய மகனுமான சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் உச்சத்தில் இருந்த போதிலும் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு விஜயகாந்த் சினிமா துறையில் மிகப் பெரிய வெற்றியை பெற்றார். அது போல் அரசியலிலும் அவர் தனக்கென ஒரு இடத்தை பெற்றார்.

கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை போல் கூட்டணி சேர்ந்து தேமுதிக வளர்ச்சியில் பெரிய பாதிப்பை சந்தித்து இன்று வரை மீள முடியாத நிலையில் உள்ளது. தற்போது விஜயகாந்த் இல்லாமல் லோக்சபா தேர்தலை தேமுதிக சந்தித்தாகிவிட்டது. அதிலும் அக்கட்சியால் சோபிக்க முடியவில்லை.
2026 தேர்தல்
இந்த நிலையில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வலிமையான கட்சியுடன் கூட்டணி அமைக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு ஜனவரி மாதம்தான் வெளியாகும் என தெரிகிறது.
விஜயகாந்த் ஊழல்
விஜயகாந்த் குறித்து ஊழல், பொய், புரட்டு என்ற குற்றச்சாட்டுகள் இதுவரை இல்லை. அவர் இருந்த வரை கொடுத்து கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரராக இருந்து வந்தார். அவர் சொந்த கட்சியில் இருந்த சிலர் அவருக்கு எதிராக திரும்பியதால், அந்த துரோகத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
விஜயகாந்த் மீது விமர்சனம்
விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை அவரை யாருமே விமர்சனம் செய்ததில்லை. விமர்சனம் செய்ய அவரிடம் எந்த குறைகளும் இல்லை. ஆனால் வடிவேல் மட்டும் திமுக நட்சத்திர பேச்சாளராக இருந்த போது விஜயகாந்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.
கடுமையான விமர்சனம் செய்த வடிவேலு
அதிலும் அவரது தனிப்பட்ட பழக்கவழக்கங்களை கடுமையாக விமர்சித்ததுடன் "கேப்டன்னா எந்த கப்பலுக்கு கேப்டன்" என கேட்டு மிகவும் கிண்டல் தொனியில் விமர்சித்திருந்தார். எனினும் விஜயகாந்துக்கு வடிவேல் மீது கோபமே வரவில்லை. அவர் அவ்வாறு பேசியதிலிருந்து வடிவேலுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
நல்ல நடிகன்
ஆனாலும் விஜயகாந்த், "நல்ல நடிகன் அவனுக்கு வாய்ப்பு கொடுங்கள்" என்றுதான் பலரிடம் கேட்டாராம். இப்படி விஜயகாந்த் பெருந்தன்மையாக இருந்த நிலையில் வடிவேலு, அவருடைய இறப்புக்கு கூட வரவில்லை, இரங்கல் செய்தியும் வெளியிடவில்லை.
சண்முகபாண்டியன் கருத்து
இந்த நிலையில் வடிவேலு குறித்து நடிகர் சண்முகபாண்டின் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் நடிப்பில் வெளியான படைத்தலைவன் படத்தின் விழாவில் அவர் இவ்வாறு பேசியிருந்தார்.
விஜயகாந்த் உதவி
அவர் பேசுகையில், வடிவேலு சாருக்கு ஆரம்பத்திலிருந்தே அப்பா நிறைய உதவிகளை செய்திருந்தார். ஆனால் அவருடைய திறமையால்தான் முன்னுக்கு வந்திருந்தார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் அவர் அப்பாவை விமர்சித்து பேசியது தவறு. நாங்கள் அவரை எங்கள் சொந்த மாமாவாகத்தான் பார்த்தோம். வடிவேலு சார் இப்படி பேசிட்டாரு என்றதும் அப்பா வருத்தப்பட்டார்.
வடிவேலுக்கு என்ன நிலைமையோ
பிறகு வடிவேலுக்கு எந்த நிர்பந்தமோ, அவர் நிலைமையையும் பார்க்க வேண்டுமே அவரை விட்டுவிடுங்கள் என்றுதான் சொன்னார். அதன் பிறகு நாங்கள் வடிவேல் சார் குறித்து பேசவே இல்லை. அப்பாவுக்கு டென்ஷன் இருந்தால் வடிவேல் சார் காமெடியைத்தான் போட்டு பார்ப்பார். எனது படத்தில் கூட வடிவேலு சாரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் அவருடன் ஒருமையில் பேசி காமெடி செய்ய முடியாது என்பதால் அப்பா விட்டுவிட்டார்.
சொந்த மாமா
சின்ன வயசுல எங்கள் சொந்த மாமாவை எப்படி பார்த்தோமோ அப்படித்தான் வடிவேலு மாமாவ பார்த்தோம். ஆனா அவர் எங்களை ஏமாத்திட்டு போயிட்டாரு. அந்த சின்ன வயசுலேயே துரோகத்தை பார்த்துட்டோம். அதுனால இப்போ எவன் என்ன பண்ணா என்னன்னு இருக்கு என சண்முகபாண்டியன் உருக்கமாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications