வணிக வளாகமாக மாறிப்போன சாந்தி திரையரங்கு!
சென்னை: சென்னை மவுண்ட்ரோடில் நடிகர் திலகம் சிவாஜியின் பேர் சொல்லும் இடமாக இருந்த சாந்தி தியேட்டர், இடித்து கட்டப்பட்டதில் வெறும் வணிக வளாகம் மட்டும்தான் இப்போது இருக்கிறது.
சாந்தி தியேட்டரை இடித்து கட்டும்போது அதில் தியேட்டர்களும் கட்டப்படும் என்று இளைய திலகம் பிரபு, ராம்குமார்,. விக்ரம் பிரபு ஈல்லாருமே பேசினார்கள். அப்போதே விவரம் சொல்வோம் என்று பூதாகரமாகவும் பேசினார்கள்.
ஆனால், இப்போது அந்த பெரும் கட்டிடத்தில் அத்தனையும் வணிக வளாகம்தான் செயல்பட்டு வருகிறதாம். ஒரு தியேட்டர் கூட இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சிவாஜி குறித்த நினைவலைகளை பார்ப்பவர் புதுப்பித்துக்கொள்ளும் வண்ணம் ஒரு மண்டபம் போன்று அமைத்து அதில் நடிகர் திலகம் நடித்த திரைப்படங்களின் போஸ்டர்கள் ஆங்காங்கே பெயின்டிங் போல பதித்து வைக்கப்பட்டு இருக்கிறதாம்.
1955-56 சாந்தி தியேட்டர்
1955-56 வருடம் சிவாஜி கணேசன் அவர்கள் இந்த சாந்தி தியேட்டரை கட்டினார்.சிவாஜி அவர்களின் மூத்த மகளின் பெயர் சாந்தி. எனவே அவரது பெயரால் இந்த தியேட்டரை கட்டினார் சிவாஜி கணேசன். 2015ம் ஆண்டு வரை இந்த தியேட்டரில் படங்கள் ரிலீசாகி வந்தன. மார்ச் மாதம் பிரபல கட்டுமான நிறுவனத்துடன் கைக்கோர்த்து சாந்தி தியேட்டரை இடித்து, திரையரங்க காம்ப்ளெக்ஸ் கட்டுவதாக அப்போது பிரஸ் மீட் வைத்து சிவாஜி குடும்பத்தினர் கூறினார்கள்.
ஒரு தியேட்டரும் இல்லை
இப்போது சாந்தி தியேட்டர் இருந்த இடம் முழுவதும் பெரிய பில்டிங் கட்டப்பட்டு, முற்றிலும் வணிக வளாகங்கள் மட்டுமே அந்த பெரிய கட்டிடத்துக்குள் இப்போது செயல்பட்டு வருகிறது.ஒரே ஒரு இடம் மட்டும் மண்டபமாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுகளை அசைபோடும் விதமாக அமைந்து இருக்கிறது.
தியேட்டர்கள் இல்லையே
நடிகர் திலகம் ஆசை ஆசையாக கட்டின சாந்தி தியேட்டர் இருந்த இடத்தில், இப்போது ஒரு தியேட்டர் கூட கட்டாமல், அத்தனையும் வணிக வளாகமாக இருக்கிறதே என்று கேட்டபோது, நாங்க கூட்டு குடும்பம்.. குடும்பம் பெரிசாகிக்கொண்டே போகுது. எனவே, பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்தே இதை முற்றிலுமாக வணிக வளாகமாக மாற்றினோம் என்று கூறுகிறார் பிரபு.
எதிர்காலத்தில் தியேட்டர்கள்
எதிர்காலத்தில் தியேட்டர்களுக்கு அவ்வளவாக வரவேற்பு இருக்காது என்று இப்படித் திட்டமிட்டீர்களா என்று கேட்டபோது, அப்படி எல்லாம் இல்லை. எங்க குடும்பம் பெரிசாகிக்கொண்டே போகிறது. பிள்ளைகளின் நலனை மனதில் வைத்தே இவ்வாறு செய்தோம் ..அப்பா தியேட்டர் கட்டியபோது எப்படி ஆதரவு தந்தீர்களோ.. அப்படி இந்த வணிக வளாகத்துக்கு மக்கள் ஆசிர்வாதம் தந்து ஆதரவு தர வேண்டும் என்று பிரபு பேசியுள்ளார்.
அன்றே தீர்மானித்தது
நடிகர் திலகம் சிவாஜி குடும்பம் அன்றே தீர்மானித்து தியேட்டர் இருந்த இடத்தை இடித்து, தியேட்டர்கள் கட்டுவதற்கு பதிலாக வணிக வளாகத்தை கட்டி உள்ளனர். அதற்கேற்ற வகையில்தான் இப்போது கொரோனா கொரோனா என்று உலகம் எங்கும் ஆட்டுவிக்கும் பீதியால், படங்கள் ஓடிடி இயங்கு தளங்களில் வெளியாக ஆரம்பித்து உள்ளன.